பயனளிக்காத உறவுகள்


பயனளிக்காத உறவுகள்

திருக்குர்ஆனும் நபிமொழியும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை விளங்கி வைத்திருக்கின்ற ஒவ்வொருவரும் இந்த ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆனால் இவ்வாறு உறுதியாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றவர்களின் இறை நம்பிக்கையைப் பலவீனப்படுத்தி, ஆட்டம் காண ஷைத்தான் ஒரு குறுக்கு வழியைக் கையாள்கிறான். அந்தக் குறுக்கு வழியின் மூலம் வழிகெட்டு, வழிகேட்டின்பால் விழுவோரில் தீன்குலப் பெண்மணிகள் முதலிடம் வகின்றனர்.
இறை நம்பிக்கையில் உறுதியானவர்களின் உறுதியையும் ஆட்டம் காணச் செய்ய ஷைத்தான் நாடும் குறுக்கு வழி என்ன? அந்த நிலையை நாம் எவ்வாறு சரி செய்வது? என்பதைக் காண்போம்.
உறவு முன்னால்! கொள்கை பின்னால்!
எத்தனையோ விஷயங்களில், எவ்வளவு நேரங்களில் அல்லாஹ்வுடைய கட்டளையையும் நபி (ஸல்) அவர்களுடைய வழிகாட்டுதலையும் உயிரினும் மேலாக மதிக்கும் கொள்கை உறுதி மிக்கவர்கள், தன்னுடைய சொந்த பந்தத்தில், குருதி உறவில் தன் உறுதியை இழந்து விடுவதை கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
தொடர்ந்து நபிவழியைப் பேணி வாழ்ந்தவர் தனது அண்ணனுடைய வரதட்சணை திருமணத்தில் கலந்து கொள்வதையும், தனது அண்ணன் மகனுடைய கத்னா எனும் சுன்னத் கல்யாணத்தில் (?) கலந்து கொள்வதையும், தனது அக்காள் மகள் காது குத்தில் கலந்து கொள்வதையும், தனது தம்பி மனைவியின் வளைகாப்பு வைபவத்தில் கலந்து கொள்வதையும், தனது தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவில் சீராட்டோடு கலந்து கொள்வதையும் குருதி உறவைக் காரணம் காட்டி ஈமானிய உறுதி குலையக் காரணமாவதை உதாரணமாகக் கூறலாம்.
ஏகத்துவத்தை பேசக்கூடிய எத்தனையோ கணவன்மார்கள் மேற்கூறியவையெல்லாம் தவறு, நபிவழிக்குப் புறம்பானது என்பதை பட்டும்படாமலோ, அழுத்தம் திருத்தமாகவோ சுட்டிக் காட்டினாலும் நம் தீன்குலப் பெண்மணிகள் ஏற்றுக் கொள்வதில்லை.
அவர்கள் எல்லாம் நம் நெருங்கிய உறவினர்கள் ஆயிற்றே! அவர்களது நிகழ்ச்சியில் நாம் எப்படி கலந்து கொள்ளாமல் இருக்க முடியும்? நாளை நமது வீட்டில் நடக்கும் நல்ல விஷயங்களுக்கு அவர்கள் வரவேண்டாமா? என்று அடுக்கடுக்கான சான்றுகளை எடுத்துரைத்து கணவன்மார்களை சரிகட்டி மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபட்டு, பாவமூட்டைகளை சுமந்து கொள்கின்றனர். ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடன் இருப்பவர்களை வழிகெடுக்கும் ஷைத்தானின் குறுக்கு வழிகள் இதுதான்.
இந்த உறவுகளால் பயன் என்ன?
இந்த உலக வாழ்க்கையை முற்றிலுமாகக் கருத்தில் கொண்டு இத்தகையோர் வழிகேட்டின் பக்கம் போகிறார்களே! இந்த உறவுகள் மறுமை நாளில் பயன் தருமா? உறவு முறையைக் காரணம் காட்டி வழிகெடுப்பவர்கள், குறிப்பாக பெண்கள் இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஓட்டம் எடுக்கும் உறவுகள்
மறுமை நாளில் ஏற்பட இருக்கும் நிகழ்வுகளை அல்லாஹ் தன் திருமறையில் படம் பிடித்துக் காட்டுகின்றான். எந்த ஒரு மனிதனும் தனது தாயையோ, தனது தந்தையையோ, தனது சகோதர, சகோதரியையோ அந்த மறுமை நாளின் திடுக்கத்தின் பயத்தில் கண்டு கொள்ள மாட்டான்.
அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தனது தாயையும், தனது தந்தையையும், தனது மனைவியையும், தனது பிள்ளைகளையும் விட்டு ஓடுவான்.
(அல்குர்ஆன் 80:33-36)
மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை அஞ்சுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.
(அல்குர்ஆன் 31:33)
எந்த மனைவி கூறியதால் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்தானோ அந்த மனைவியை கணவன் கண்டு கொள்ள மாட்டான். தனது கணவனை மனைவி கண்டு கொள்ள மாட்டாள். தனது தாய், தந்தை கூறியதால் தான் வரதட்சணை வாங்கித் திருமணம் செய்தேன் என்று தாய், தந்தை பேச்சைக் கேட்டு பெண் வீட்டாரிடத்தில் பிச்சை எடுத்த மகனை விட்டும் அவனது தாய், தந்தையர் ஓடி விடுவர்.
எந்த ஒரு ஆபத்து ஏற்பட்டாலும் மனிதனுக்கு முதலில் உதவுபவன் அவன் உடன் பிறந்த சகோதரனாகத் தான் இருப்பான். இதை தமிழில் தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்று கூறுவார்கள். ஆனால் அந்தச் சப்தம் ஏற்படும் போது மனிதனை விட்டு ஓடுபவர்களில் முதலாவதாக அல்லாஹ் சகோதரனைத் தான் குறிப்பிடுகின்றான்.
எந்தத் துன்பம் வந்தாலும் உயிர் காப்பான் தோழன் என்று கூறுவார்கள். ஆனால் அவனும் கூட எந்த உதவியும் செய்ய மாட்டான் என்று அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.
எந்த நண்பனும் நண்பனை விசாரிக்க மாட்டான். (அல்குர்ஆன் 70:10)
எந்த உறவுகளுக்காக மார்க்கத்திற்கு முரணாக நடந்தானோ அந்த உறவுகள் உதவி செய்யாமல் போவதுடன் அதற்கும் ஒருபடி மேலே போய் நம்மை மாட்டிவிட்டு, தான் தப்பித்துக் கொள்வதற்கு, எந்த உறவுகளையும் விற்பனை செய்வதற்குத் தயாராக இருக்கும் பரிதாபமான நிலை ஏற்படும்.
அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாக தன் மகன்களையும், தனது மனைவியையும், தனது சகோதரனை யும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான். அல்குர்ஆன் 70:11-14
தனது உறவுகள் பயனிக்கும் என்று நம்பி, இறைவனுக்கும் இறைவனுடைய தூதருக்கும் மாறு செய்யக்கூடியோர் மேற்கண்ட திருமறை வசனங்களை சிந்தித்துப் பார்க்கட்டும்.
எந்தக் குடும்பத்திற்காக, எந்தப் பிள்ளை குட்டிகளுக்காக, எந்த உறவினர்களுக்காக தனது வாழ்வை இவ்வுலகில் அர்ப்பணித்தானோ அவர்கள் அனைவரையும் ஈடாகக் கொடுத்தாவது தான் விடுதலையாக வேண்டும் என்று மனிதன் விரும்புவான் என்றால் நம்மை இறைவனது நெறியை விட்டும் இறைத்தூதர் வழியை விட்டும் திசை திருப்பும் இந்த உறவுமுறைகள் தேவை தானா? இது போன்று நம்மை விட்டுவிட்டு மறுமை நாளில் ஓடக்கூடிய, நமக்கு எதிராகத் திரும்பக் கூடிய இந்த பயனிக்காத உறவுகள் பேச்சைக் கேட்க வேண்டுமா என்ன?
யாரை நேசிப்பதாக இருந்தாலும் அந்த நேசம் அல்லாஹ்வுக்காக அவன் தூதருக்காக இருக்க வேண்டும்.
“யார் அல்லாஹ்வுக்காக நேசித்து, அல்லாஹ்வுக்காக வெறுத்து, அல்லாஹ்வுக்காகக் கொடுத்து, அல்லாஹ்வுக்காக வெறுத்தால் அவனது ஈமான் நிறைவு பெற்றுவிட்டது” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி), நூல்: அபூதாவூத் (4061)
இந்தக் கருத்தை வலுவூட்டும் வண்ணம் நபிகளார் வேறு இடத்தில் இவ்வாறு கூறியுள்ளார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். (அவை:)
1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோராவது.
2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (16)
ஈமானை நன்றாக அறிந்தவர்கள் எந்த நிலையிலும் அல்லாஹ்வின் கூற்றை விட, அவன் தூதர் காட்டிய வழியை விட உறவினர்களின் பேச்சுக்கு முதலிடம் கொடுக்க மாட்டார்கள். படைத்தவனின் கட்டளைக்கும் அவன் விரும்பும் வழிகாட்டுதலுக்குமே முதலிடம் கொடுப்பார்கள்.
நபிமார்களும் உறவுகளும்
அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் உறவினர்கள் கூட இறைக்கட்டளையின்படி நடக்காவிட்டால் அவர்கள் இறைத்தூதர்களின் உறவினர்கள் என்பதற்காக மறுமையில் வெற்றியடைய முடியாது.
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையாக இருந்த ஆஸர், இறைத்தூதரின் தந்தை என்பதற்காக அவர் மறுமையில் வெற்றியடைந்து விட முடியாது. அவருக்காக பாவமன்னிப்புக் கூட கேட்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை.
“உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.
(அல்குர்ஆன் 60:4)
இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே! அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். (அல்குர்ஆன் 9:114)
இதைப் போன்று நபி நூஹ் (அலை) மற்றும் லூத் (அலை) அவர்களின் மனைவிமார்கள் மார்க்கத்திற்கு முரணாக நடந்தனர். அவர்கள் இறைத்தூதரின் மனைவி என்பதால் அவர்கள் சொர்க்கம் போக முடியவில்லை. மாறாக நரகவாதிகள் என்று தெளிவாக அல்லாஹ் கூறியுள்ளான்.
நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. “இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!” என்று கூறப்பட்டது.
(அல்குர்ஆன் 66:10)
இதைப் போன்று நூஹ் (அலை) அவர்களின் மகன், இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாததால் அவனையும் கடல் பேரலையால் மூழ்கடித்ததாக அல்லாஹ் கூறுகின்றான். அவர்களின் தந்தை, மகன் உறவு பயனளிக்கவில்லை.
நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது “ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!” என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.
“இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறினார்.
மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி “அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!” என்று நூஹ் கூறினார்.
“ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை” என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான். (அல்குர்ஆன் 11:40-43)
இவ்வுலகத்தின் அருட்கொடையாக வந்த நபிகளாரின் தந்தையும் தாயும் கூட இஸ்லாத்தை ஏற்காததால் அவர்களும் நரகவாதிகளாக ஆகிவிட்டார்கள். அவர்களின் உறவும் அல்லாஹ்விடத்தில் எந்தப் பயனையும் ஏற்படுத்தவில்லை.
நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்:முஸ்லிம் (1777)
ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நரக) நெருப்பில்” என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்ற போது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில் தான் (இருக்கிறார்கள்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (347)
மார்க்கத்திற்கு முதலிடம் கொடுத்த நபிகளார்
மிகவும் அன்பிற்குரியவர்களாக நேசித்த தன் மகள் பாத்திமா (ரலி) அவர்கள் மார்க்கத்திற்கு முரணான காரியத்தைச் செய்த போது அன்பிற்குரிய மகளின் செயல் என்று அதை அங்கீகரிக்காமல் அதைக் கண்டிக்கும் வண்ணமாக அவர்களது வீட்டிற்குச் செல்லாமல் திரும்பி வந்துவிட்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கன் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்கடம் செல்லவில்லை. அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்கடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்கடம் சொல்ல, “நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால்தான் திரும்பி வந்துவிட்டேன்)” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்கடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு. அவர் களுக்குத் தேவையுள்ளது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி), நூல்: புகாரி (2613)
எந்தச் சோதனை வந்தாலும் எதிர்த்து நின்று போராடக் கூடிய ஈமானிய வலிமை மிகுந்த ஏகத்துவவாதிகள் பலரும் உறவு முறை என்று வந்து விட்டால் அவர்களது ஈமானிய நிலை ஆட்டம் கண்டு விடுவதையும், அவர்கள் மிக உறுதியாக நின்றாலும் அவரது மனைவிமார்கள் அவர்களது மதியை மயக்கி ஈமானை மலுங்கடித்து விடச் செய்வதையும் காண்கிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்றால் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முன்மாதிரியை நம் வாழ்வில் எடுத்து நடக்க வேண்டும். தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பார்கள். மார்க்க விஷயம் என்று வந்து விட்டால் நபியவர்கள் தானும் ஆடவில்லை, தன் சதையையும் ஆடவிடவில்லை.
சிறந்த தோழர்கள்
பயனளிக்காத இந்த உறவுக்காக மறுமை வாழ்க்கையைப் பாழாக்கி விடாதீர்கள். மறுமை வாழ்க்கைக்குப் பயனளிக்கும் மார்க்கக் கடமைகளுக்கு முதலிடம் கொடுங்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் கூறிய கட்டளையை ஏற்று நடங்கள். அதற்கே முதலிடம் கொடுங்கள். மறுமை நாளில் சிறந்த தோழமை உங்களுக்குக் கிடைக்கும்.
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள்,
உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4:69)
மறுமை நாள் ஏற்படும் போது வரும் சப்தத்தைக் கேட்டவுடன் நம்மை விட்டும் ஓட்டம் எடுக்கும் உறவுகள் ஒருபுறம் இருக்க, அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்கள் மிக உயர்ந்த நபிமார்கள், உயிர் தியாகிகள், உண்மையாளர்கள், நல்லவர்கள் ஆகியோருடன் இருக்கும் நல்வாய்ப்பு கிட்டும். இந்த வாய்ப்பைப் பெறுவதற்கு முழு முயற்சியை நாம் எடுப்போம்.
www.tntj,net

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை