பாவங்களுக்கு பரிகாரம் இறைச்சோதனை!
பாவங்களுக்கு பரிகாரம் இறைச்சோதனை! சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறதே! இதற்கு முடிவே இல்லையா? என்று தினமும்; அதிகமானோர் புலம்புவதைக் காணலாம். ஆனால் இவ்வுலகத்தின் சோதனைகளிலிருந்து தப்பியோர் யாரும் கிடையாது என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய உண்மை. அதாவது இவ்வுலகில் அல்லாஹ் நம்மைப் படைத்து, சகல வாழ்வாதார வசதிகளையும் நமக்களித்து, சீரான வாழ்க்கைப் பாதைகளையும் அமைத்துக் கொடுத்து நமக்கு இன்பங்களையும் துன்பங்களையும் மாறி மாறி வரச் செய்வதிலிருந்து இவ்வுலக வாழ்க்கையை ஒரு சோதனைக் களமாக, பரீட்சை மண்டபமாக ஆக்கியுள்ளான். நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான். (திருக்குர்ஆன் 29 : 2,3) மேலும் கூறுகின்றான்: ஒவ்வொரு வருடமும் ஒரு தடவையோ, இரண்டு தடவையோ தாங்கள் சோதிக்கப்படுவதை அவர்கள் உணர மாட்டார்களா?பின்னரும் அவர்கள் திருந்திக் கொள்ளவில்லை.படிப்பினை பெறுவதுமில்லை. (அல்குர்ஆன்: 9:126)