நபி(ஸல்)அவர்களின் இறுதி நாட்கள்

அழைப்புப் பணியின் வெற்றிகளும் அதன் தாக்கங்களும்

நபி (ஸல்) அவர்களின் இறுதி காலக் கட்டத்தைப் பற்றி நாம் அறிவதற்கு முன் இதுநாள் வரை அவர்கள் புரிந்த செயல்பாடுகள், ஆற்றிய பணிகள் பற்றி சுருக்கமாகக் கூறுவது நல்லது. அதற்குக் காரணம், இச்செயல்பாடுகள்தான் நபி (ஸல்) வாழ்க்கையின் இதயப் பகுதியாகும். இதனால்தான் ஏனைய இறைத்தூதர்களிலிருந்து நமது நபி (ஸல்) தனிச் சிறப்புற்று விளங்குகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு “முன்னோர்கள் மற்றும் பின்னோர்களின் தலைவர்” என்று மகுடம் சூட்டியிருப்பதற்கும் காரணம் இதுதான்.

(நபியே!) போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் நீங்கள் (தொழுகைக் காக எழுந்து) நில்லுங்கள். (முழு இரவிலுமல்ல அதிலொரு) சொற்ப பாகம். (அல்குர்ஆன் 73:1, 2)

(வஹியின் அதிர்ச்சியால்) போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! நீங்கள் எழுந்து நின்று (மனிதர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள் (அல்குர்ஆன் 74:1, 2)


என்று அல்லாஹ் கூறியதுதான் தாமதம்.

நபி (ஸல்) எழுந்தார்கள், நின்றார்கள்... இருபது ஆண்டுகளுக்கு மேலாக நின்றார்கள். இப்புவியில் மாபெரும் அமானிதச் சுமையை... தங்களது தோளில் சுமந்தவர்களாக நின்றார்கள்... முழு மனித சமுதாயச் சுமையை... கொள்கைச் சுமையை... பல துறைகளில் போராட்டச் சுமையை... சுமந்து நின்றார்கள்... மடமை இருள்களிலும் வழிகேடுகளிலும் மூழ்கிப்போன மனித இதயத்தை... மீட்க எழுந்து நின்றார்கள்... அற்ப ஆசைகளின் பிடியிலும், மன இச்சை சிறைகளிலும், சிக்குண்டிருக்கும் உள்ளங்களை மீட்கும் போராட்டங்களுக்காக நின்றார்கள்... ஆம்! ஒரு நேரத்தில் தங்களுக்கென உன்னதத் தோழர்களை வார்த்தெடுத்தார்கள்... அறியாமை அழுக்குகளிலிருந்தும் அற்ப உலக ஆசைகளில் இருந்தும் அவர்களின் உள்ளங்களை புடம் போட்டத் தங்கமாக மாற்றினார்கள்.

அடுத்து சில சோதனைகள்... போர்கள்... ஒன்றா?... இரண்டா?... தொடர்ந்த சங்கிலிகளைப் போன்று போர்களே போர்கள்! அல்லாஹ்வின் எதிரிகளுடன்... எதிரிகளா அவர்கள்?... கல் நெஞ்சம் கொண்ட அநியாயக்காரர்கள்... இஸ்லாமிய அழைப்புப் பணியை அழிக்க... இறை நேசர்களை ஒழிக்க... இஸ்லாமிய இளஞ்செடி பூமியில் வேரூன்றி... வானளாவ அதன் கிளைகள் உயர்ந்து... அதன் நிழல்கள் உலகை வியாபிப்பதற்கு முன்பாக... அதைக் கிள்ளி எறிய நப்பாசைக் கொண்டவர்கள்! எதிரிகளுடன் ஓயாத ஒழியாத போர் ஒருபுறம்! உள்ளத்துடன் உக்கிரமான போர் மறுபுறம்! உள்ளத்துடன் போர் நிரந்தரம்!... என்றுமே அது ஷைத்தானுடன் நடைபெறும்!... உள்ளத்தின் ஆழங்களில் ஊசலாட்டத்தை ஊடுருவச் செய்து மனிதனை வழிகெடுக்க வேண்டும்! அவனது நேர்வழிப் பயணத்தைத் திசை திருப்ப வேண்டும் என்பதற்காக ஒரு கணமும் ஷைத்தான் அயர்வதில்லை... உள்ளத்தின் போர் என்பது அவனுடன் செய்யும் போரே!

இந்த இடுபாடுகள் நிறைந்த எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வின் அழைப்பை எட்டச் செய்வதற்காக நபி (ஸல்) நின்றார்கள். தொடர்ந்தாற்போல் ஒன்றன்பின் ஒன்றாய்... கோணங்கள் மாறுபட்ட பல போர்களை எதிர்கொள்ள நபி (ஸல்) நின்றார்கள். தங்களை நோக்கி வந்த உலகைக் கடைக் கண்ணாலும் பாராமல் சிரமத்திலும் துன்பத்திலும், நெருக்கடியான நிலையிலும் நிலைகுலையாது நின்றார்கள்... நின்ற நபியின் நிழலிலே... விசுவாசிகள் சுகத்தையும் நிம்மதியையும் சுவாசித்தார்கள்... முடிவுபெறா சிரமங்கள் தொடர்ந்தாலும்... அழகிய பொறுமையுடன் இரவில் நின்று... ஏக இறைவனை வணங்குவதுடன்... அருள்மறை குர்ஆனை ஓதுவதுடன்... அல்லாஹ் ஒருவனையே சார்ந்திருந்து... இறை ஆணையை நிறைவேற்ற நின்றார்கள்... (ழிலாலுல் குர்ஆன்)

இருபது ஆண்டுகளுக்கு மேலாக இறைப் பணியில் கவனம் சிதறாமல் தொடர் போராட்டத்தில் எதிர் நீச்சல் போட்டு, இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு வெற்றி தேடித் தந்தார்கள்... அந்த வெற்றிக்கு அரபுலகம் பணிந்தது! அறியாமை இருள் அகன்றது! பிணிகொண்ட அறிவுகள் சீர்பெற்றன! இதனால் சிலைகளை விட்டு விலகியது மட்டுமல்ல அதனை உடைத்து தவிடு பொடியாக்கினார்கள். அவர்களின் ஏகத்துவ முழக்கம் விண்ணுலகை எட்டியது. இறை வணக்கத்திற்கான பாங்கொலி விண்ணின் செவிகளைப் பிளந்தன. புதிய நம்பிக்கையால் உயிர்பெற்று எழுந்த அழைப்புப் பணி (ஏகத்துவ முழக்கம்) வறண்ட பாலைவனங்களை ஊடுருவிச் சென்றன.

நாலாத் திசைகளிலும் குர்ஆனை கற்றுத் தேர்ந்த அறிஞர்கள் பரவிச் சென்று இறைவேதத்தை ஓதிக் காண்பித்து, அவனது சட்டங்களை நிலை நிறுத்தினார்கள். பிரிந்து கிடந்த வம்சங்களும் சமூகங்களும் ஒன்றாயின. மனிதன் மனிதனை வணங்குவதிலிருந்து விடுபட்டு... அல்லாஹ்வை வணங்க முற்பட்டான். அநியாயக்காரன்-அநீதியிழைக்கப்பட்டவன், அரசன்-ஆண்டி, எஜமான்-அடிமை என்ற பாகுபாடுகள் நீங்கின. மக்கள் அனைவரும் அல்லாஹ்வின் அடிமைகளே அனைவரும் தங்களுக்குள் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்ள வேண்டும் இறைக் கட்டளைக்கு ஒவ்வொருவரும் அடிபணிய வேண்டும் என்ற சூழ்நிலை உருவானது. அறியாமைக் கால கர்வம், முன்னோர்களைக் கூறி பெருமையடிப்பது, இனவெறி கொள்வது அனைத்தையும் விட்டு அல்லாஹ் இவர்களை தூரமாக்கினான்.

இறையச்சத்தைத் தவிர வேறெந்த வகைளிலும் ஓர் அரபியருக்கு அரபியல்லாதவரை விட, ஓர் அரபியல்லாதவருக்கு அரபியரை விட, ஒரு வெள்ளையருக்கு கருப்பரை விட, ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விட எவ்விதச் சிறப்பும் மேன்மையும் இல்லாமல் போனது. மக்கள் எல்லோரும் ஆதமின் மக்களே! ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர் என்ற உண்மை உள்ளத்தில் பதிய வைக்கப்பட்டது. இறுதியாக இந்த அழைப்புப் பணியின் சிறப்பால் முழு மனித சமுதாயம், சமூகம் அரசியல் என அனைத்தாலும் ஒன்றுபட்டது. இம்மை மறுமை பிரச்சனைகளில் மானுடம் ஈடேற்றம் கண்டது. காலங்கள் மாறி புதிய உலகம் தோன்றிது. புதிய வரலாறு உருவானது. புதிய சிந்தனை எழுந்தது.

இஸ்லாமிய அழைப்புப் பணி தோன்றுவதற்கு முன்னதாக உலகை அறியாமை ஆட்சி செய்தது. மனித உள்ளங்கள் சீர்கெட்டு பண்பாடின்றி இருந்தன. நன்மை தீமைகளின் அளவு கோல்கள் கோளாறாயிருந்தன. அநியாயம் புரிதலும் அடிமைபடுத்துதலும் சமுதாயத்தில் பரவி இருந்தன. ஒருபுறம் சிலர் வரம்பு மீறிய செல்வத்தில் கொழிக்க, மறுபுறம் ஏழைகள் வறுமையில் வாடினர்.

எத்தனையோ முந்திய மார்க்கங்கள் இருந்தன. ஆனால், அவற்றில் குளறுபடிகளும், குழப்பங்களும், பலவீனங்களும் வேரூன்றி விட்டதால், மனித இதயங்களை அவை ஆட்சி செலுத்த முடியவில்லை. அவை உயிரற்ற, உணர்ச்சியற்ற, இறுகிப்போன சடங்குகளாகவே மாறிவிட்டன. இதனால் மனிதர்களை இறைநிராகரிப்பும் வழிகேடுகளும் சூழ்ந்திருந்தன. இஸ்லாமிய அழைப்புப் பணி, மனித சமுதாயத்திற்குச் செய்ய வேண்டிய பணிகளைச் சிறப்பாக செவ்வனே செய்தது கற்பனை, வீண் குழப்பங்கள், பிறருக்கு அடிமையாகுதல், விஷமம், கலகம், கெட்ட குணங்கள், ஒழுக்கக் கேடுகள் ஆகியவற்றிலிருந்து மனித உயிரை தூய்மைப்படுத்தியது.

அநியாயம், அட்யூழியம், அத்துமீறல், பிரிந்து சிதறி ஒற்றுமையின்றி வாழுதல், நிற, இன பேதங்கள் பாராட்டுதல், அதிகாரிகளின் அடக்குமுறைக்கு ஆளாகுதல், குறிகாரர்கள், ஜோசியர்களால் இழிவடைதல் ஆகிய அனைத்திலிருந்தும் இஸ்லாமிய அழைப்புப் பணி மனித சமுதாயத்தைக் காப்பாற்றியது. ஒழுக்கம், கட்டுப்பாடு, அக, புற தூய்மை, முழு சுதந்திரம், புதுமை, கல்வியறிவு, தெளிவு, உறுதி, பிடிப்பு, இறை நம்பிக்கை, மனித நேயம், வாழ்க்கையை வளப்படுத்த, மேம்படுத்த, உயர்வாக்கத் தொடர்ந்து முயற்சித்தல், அவரவர் உரிமையைக் கொடுத்தல் என்ற உறுதிமிக்க அஸ்திவாரத் தூண்களின் மீது மனித சமுதாயக் கட்டடத்தை இஸ்லாம் நிறுவியது. இதுவரை கண்டிராத வளமிக்க எழுச்சிகளையும், மாற்றங்களையும் இந்த அழைப்புப் பணியின் முன்னேற்றத்தால் அரபுலகம் அடைந்தது. தனது வாழ்க்கை வரலாற்றில் என்றுமே கண்டிராத ஒளி வெள்ளத்தை இந்நாட்களில் அரபுலகம் கண்டது.

ஹஜ்ஜத்துல் விதா
அழைப்புப் பணிகள் நிறைவுற்றன. இறைத்தூது உலகின் முன் வைக்கப்பட்டது. “லாஇலாஹஇல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை, முஹம்மது நபி (ஸல்) அல்லாஹ்வுடைய தூதராக இருக்கின்றார்கள்” என்ற அஸ்திவாரத்தின் மீது புதிய சமூகம் செம்மையாக அமைந்தது. இத்தருணத்தில் நபி (ஸல்) அவர்களின் உள்மனம், தாம் உலகில் இருக்கும் காலங்கள் சொற்பமே என்ற மெல்லிய ஒலிக்கீற்றை ஒலித்துக் கொண்டிருந்தது. ஆம்! அவ்வாறுதான், நபி (ஸல்) ஹிஜ்ரி 10ம் ஆண்டு யமன் தேசத்துக்கு முஆத் (ரழி) அவர்களை அனுப்பும் போது கூறிய பொன்மொழிகள் ஞாபகம் இருக்கலாம்.

“அநேகமாக இந்த ஆண்டிற்குப் பின் என்னை சந்திக்கமாட்டாய் முஆதே! இந்த பள்ளிக்கும் எனது மண்ணறைக்கும் அருகில்தான் நீ செல்வாய்.” நபி (ஸல்) அவர்களின் இந்த சொற்களால் நபி (ஸல்) அவர்களை நாம் பிரியப் போகிறோம் என்ற வருத்தத்தால் முஆது (ரழி) கண் கலங்கினார்கள். அல்லாஹ் தனது தூதருக்கு அவர்கள் செய்த அழைப்புப் பணியின் பலன்களை காட்ட நாடினான். இந்த அழைப்புப் பணிக்காகவே இருபது ஆண்டுகளுக்கு மேலாக பலவகை சிரமங்களைச் சகித்தார்கள்.

மக்காவிலும் அதன் ஓரங்களிலும் வாழ்கின்ற அரபிய வமிசங்களும், அதன் முக்கிய பிரமுகர்களும் ஒன்று சேர்ந்து இஸ்லாமிய மார்க்கச் சட்டத் திட்டங்களை நபி (ஸல்) அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நபி (ஸல்) அமானிதத்தை நிறைவேற்றினார்கள் தூதுத்துவத்தை முழுமையாக எத்திவைத்தார்கள் சமுதாயத்திற்கு நன்மையை விரும்பினார்கள் என்ற வாக்கை மக்களிடமிருந்து நபி (ஸல்) வாங்க வேண்டும் என்றும் அல்லாஹ் விரும்பினான். அல்லாஹ்வின் இந்த விருப்பத்திற்கேற்பவே கண்ணியமிக்க ஹஜ்ஜை நிறைவேற்ற மக்கா செல்லவிருக்கிறேன் என நபி (ஸல்) அறிவித்தார்கள். இதனைக் கேட்ட மக்கள் பல திசைகளில் இருந்தும் மதீனா வந்தனர். துல் கஅதா முடிய ஐந்து நாட்கள் இருக்கும் போது சனிக்கிழமை நபி (ஸல்) பயணம் மேற்கொண்டார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஃபத்ஹுல் பாரி)

தலையில் எண்ணெய் தடவி தலைவாரி, கீழாடையாக கைலியையும், மேலாடையாக போர்வையையும் அணிந்து கொண்டு, தனது ஒட்டகப் பிராணிக்கு மாலை அணிவித்தார்கள். ளுஹ்ர் தொழுகைக்குப் பிறகு புறப்பட்டு அஸ்ர் தொழுகைக்கு முன்பாக ‘துல் ஹுலைஃபா’ வந்தார்கள். அங்கு அஸ்ரை இரண்டு ரக்அத்தாக தொழுதுவிட்டு அங்கே அன்று முழுதும் தங்கி, மறுநாள் காலை ஸுப்ஹ் தொழுத பின்பு, தமது தோழர்களைப் பார்த்து, “அந்த பரக்கத் (அருள் வளம்) பொருந்திய பள்ளத்தாக்கில் தொழுது, “ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ரா எனக் கூறுங்கள்” என என்னுடைய இறைவனிடமிருந்து வந்த ஒருவர் இன்றிரவு கூறிவிட்டுச் சென்றார் என்று அறிவித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ளுஹ்ர் தொழுகைக்கு முன்பாக நபி (ஸல்) இஹ்ராமுக்காகக் குளித்துக் கொண்டார்கள். ஆயிஷா (ரழி) அவர்கள் தங்கள் கரங்களால் கஸ்தூரி கலந்த ஒரு நறுமணத்தையும் ‘தரீரா’ என்ற நறுமணத்தையும் நபி (ஸல்) அவர்களின் உடலிலும் தலையிலும் தடவினார்கள். அந்த நறுமணத்தின் மினுமினுப்பு நபி (ஸல்) அவர்களின் தலை வகிடுகளிலும் தாடியிலும் காணப்பட்டது. அந்த நறுமணத்தை அவர்கள் அகற்றவில்லை. பின்னர் வேறொரு கைலியையும் போர்வையினையும் அணிந்து கொண்டு ளுஹ்ரை இரண்டு ரக்அத்தாக தொழுதார்கள். தொழுத இடத்திலிருந்தே ஹஜ் உம்ரா இரண்டையும் சேர்த்து நிறைவேற்றுவதாக நிய்யத் செய்து கொண்டு ‘தல்பியா’ கூறினார்கள். தொழுகையை முடித்து வெளியேறி, கஸ்வா ஒட்டகத்தின் மீதேறி, மீண்டும் தல்பியா கூறினார்கள். பாலைவனங்களில் செல்லும் இடமெல்லாம் தல்பியா கூறினார்கள். இவ்வாறு கடந்து வந்து, மக்கா அருகில் ‘தூத்துவா’ என்ற இடத்தில் தங்கினார்கள். அங்கு ஸுப்ஹ் தொழுகையை முடித்துக் கொண்டு குளித்துவிட்டு மக்கா நோக்கி புறப்பட்டார்கள். அது ஹிஜ்ரி 10, துல்ஹஜ் பிறை 4, ஞாம்று காலை நேரமாகும். ஆக, பயணத்தில் நபி (ஸல்) எட்டு நாட்கள் கழித்தார்கள். சங்கைமிக்க கஅபா வந்தபோது தவாஃப் செய்துவிட்டு ஸஃபா மர்வாவில் ஸயீ செய்தார்கள். ஆனால், இஹ்ராமைக் களையவில்லை. ஏனெனில், நபி (ஸல்) உம்ராவையும் ஹஜ்ஜையும் சேர்த்து நிறைவேற்றுவதற்காக தங்களுடன் குர்பானி பிராணியையும் அழைத்து வந்திருந்தார்கள். தவாஃபையும் ஸயீயையும் முடித்துக் கொண்டு கஅபாவிலிருந்து புறப்பட்டு மக்காவின் மேட்டுப் பகுதியிலுள்ள ‘ஹஜுன்’ என்ற இடத்தில் தங்கினார்கள். தவாப் செய்வதற்காக மீண்டும் நபி (ஸல்) அவர்கள் கஅபா வரவில்லை. பிறை 8 வரை அங்கேயே தங்கிவிட்டார்கள்.

தன்னுடன் குர்பானி பிராணியைக் கொண்டுவராத தோழர்களை உம்ரா முடித்துக் கொண்டு இஹ்ராமிலிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டார்கள். அதற்குத் தோழர்கள் தயங்கினர். அதைப் பார்த்து நபி (ஸல்) “நான் மீண்டும் ஒருமுறை இதுபோன்ற பயணத்தை நாடினால் என்னுடன் குர்பானி பிராணியைக் கொண்டு வரமாட்டேன். என்னுடன் இப்போது குர்பானி பிராணி இல்லை என்றால் நானும் இஹ்ராமைக் களைந்திருப்பேன்.” என்று கூறினார்கள்.

‘தர்வியா’ என்றழைக்கப்படும் துல்ஹஜ் பிறை 8ல் நபி (ஸல்) மினா நோக்கிப் புறப்பட்டார்கள். மினாவில் ளுஹ்ர், அஸ்ர், மஃரிப், இஷா, ஃபஜ்ர் என ஐந்து நேரத் தொழுகைகளைத் தொழுதார்கள். ஃபஜர் தொழுகைக்குப் பின் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்குப் பின் அரஃபா நோக்கி பயணமானார்கள். அரஃபாவில் ‘நமிரா’ என்ற இடத்தில் அவர்களுக்காக கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அக்கூடாரத்தில் சூரியன் நடுப்பகலை தாண்டும் வரை தாமதித்திருந்தார்கள். நடுப்பகல் நேரம் தாண்டியவுடன் தனது கஸ்வா ஒட்டகத்தைத் தயார்படுத்தச் செய்து அதில் வாகனித்து ‘பத்னுல் வாதி’ என்ற இடத்திற்கு வந்தார்கள். அங்கு நபி (ஸல்) அவர்களைச் சுற்றி ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் (1,24,000) அல்லது ஒரு இலட்சத்து நாற்பத்தி நான்காயிரம் (1,44,000) முஸ்லிம்கள் ஒன்று கூடியிருந்தனர். அவர்களுக்கு மத்தியில் நின்று கொண்டு நபி (ஸல்) உரையாற்றினார்கள்.

ஹஜ்ஜத்துல் விதா உரை

மக்களே! மிகக் கவனமாகக் கேளுங்கள். ஏனெனில், இந்த ஆண்டுக்குப் பிறகு இந்த இடத்தில் உங்களை நான் சந்திப்பேனா! என்று எனக்குத் தெரியாது.

மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதத்தையும், இந்த (பிறை 9ஆம்) நாளையும், இந்த (மக்கா) நகரையும் புனிதமாகக் கருதுவதுபோல் உங்களில் ஒருவர் மற்றவன் உயிரையும் பொருளையும் மானத்தையும் புனிதமாகக் கருதுங்கள். ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினருக்கு அல்ல. தந்தை தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காகப் பிள்ளையை அல்லது பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையை தண்டிக்கப்பட மாட்டாது.

அறிந்துகொள்ளுங்கள்! அறியாமைக் காலத்தின் அனைத்து செயல்களையும் நான் எனது கால்களுக்குக் கீழ் புதைத்து அழித்து விட்டேன். அறியாமைக் காலக் கொலைகளுக்குப் பழி வாங்குவதை விட்டுவிட வேண்டும். முதலாவதாக, எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபீஆ இப்னு ஹாரிஸின் மகனுக்காகப் பழிவாங்குவதை நான் விட்டு விடுகிறேன். அறியாமைக் கால வட்டியும் தள்ளுபடி செய்யப்பட்டது. முதலாவதாக நான் என் குடும்பத்தாரின் வட்டியிலிருந்து அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபுக்கு உரித்தான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்கிறேன்.

பெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அமானிதமாக அவர்களை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். அவனது நாட்டப்படி அவர்களை நீங்கள் மனைவியராக ஏற்றிருக்கிறீர்கள். அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாவது நீங்கள் விரும்பாத வர்களை உங்கள் இல்லத்துக்குள் அவர்கள் அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதித்தால் காயம் ஏற்படாத வகையில் அடியுங்கள். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாதெனில் நல்ல முறையில் அவர்களுக்கு உணவும் ஆடையும் அளிக்க வேண்டும்.

நான் உங்களிடம் விட்டுச் செல்வதை நீங்கள் உறுதியாகப் பின்பற்றினால் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள். அதுதான் அல்லாஹ்வின் வேதமாகும்.

மக்களே! எனக்குப் பின் எந்தவொரு நபியும் (இறைத்தூதரும்) இல்லை. உங்களுக்குப் பின் எந்தவொரு சமுதாயமும் இல்லை. உங்களைப் படைத்துக் காப்பவனான அல்லாஹ்வையே வணங்குங்கள். உங்களுக்கு விதிக்கப்பட்ட ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றுங்கள். ரமழான் மாதத்தில் நோன்பு வையுங்கள். மனமுவந்து உங்கள் செல்வத்துக்கான ஜகாத்தை நிறைவேற்றுங்கள். உங்கள் இறைவனின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள். உங்கள் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள். (மேற்கூறிய நற்செயல்களால்) இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள சுவனத்தில் நுழைவீர்கள்.

உங்கள் இறைவனை அதிவிரைவில் நீங்கள் சந்திப்பீர்கள். அவன் உங்கள் செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரணை செய்வான். எனக்குப் பிறகு நீங்கள் உங்களுக்குள் கொலை குற்றம் புரிந்து வழிகேடர்களாக மாறிட வேண்டாம். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஷைத்தான் உங்களது இந்த பூமியில் அவனை நீங்கள் வணங்குவதிலிருந்து முற்றிலும் நிராசையடைந்து விட்டான். எனினும், நீங்கள் மிக எளிதாகக் கருதும் செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்து ஷைத்தானுக்கு வழிப்படுவீர்கள். அதனால் அவனோ மகிழ்ச்சியடைவான்.

மக்களே! அறிந்து கொள்ளுங்கள். உங்கள் இறைவன் ஒருவனே. உங்கள் தந்தையும் ஒருவரே. இறையச்சத்தைத் தவிர வேறெந்த வகையிலும் ஓர் அரபியருக்கு அரபி அல்லாதவரை விட, ஓர் அரபி அல்லாதவருக்கு அரபியரை விட, ஒரு வெள்ளையருக்கு கருப்பரை விட, ஒரு கருப்பருக்கு வெள்ளையரை விட எவ்விதச் சிறப்பும் மேன்மையும் இல்லை.

“மறுமையில் என்னைப் பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது நீங்கள் என்ன பதில் கூறுவீர்கள்?” என்று கேட்டார்கள்.

கூடியிருந்தோர் “நிச்சயமாக நீங்கள் எடுத்துரைத்தீர்கள் நிறைவேற்றினீர்கள் நன்மையையே நாடினீர்கள் என நாங்கள் சாட்சி கூறுவோம்” என்றார்கள்.

நபியவர்கள் தங்களது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி, பின்பு மக்களை நோக்கித் திருப்பி “அல்லாஹ்! இதற்கு நீயே சாட்சி!” என்று மூன்று முறை கூறினார்கள். இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் இங்கு வராத மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுங்கள். ஏனெனில், செய்தியை கேள்விப்படுபவர்களில் சிலர் நேரடியாகக் கேட்பவர்களைவிட நன்கு விளக்கமுடையவர்களாக இருப்பார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதி, முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர், இப்னு ஹிஷாம்)

நபி (ஸல்) ஒவ்வொன்றாகக் கூறியபோது அதை ரபிஆ இப்னு உமையா இப்னு கலஃப் (ரழி) மக்களுக்குச் சப்தமிட்டு எடுத்துரைத்தார்கள். (இப்னு ஹிஷாம்)

நபி (ஸல்) தங்களது உரையை முழுமையாக முடித்தபோது,

இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். (அல்குர்ஆன் 5:3)

என்ற வசனம் இறங்கியது.
இந்த வசனத்தைக் கேட்ட உமர் (ரழி) கண் கலங்கினார்கள். நபி (ஸல்) “உமரே! நீங்கள் அழுவதற்கு காரணமென்ன?” என வினவினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஒவ்வொரு நாளும் மார்க்கத்தை அதிகம் அதிகம் தெரிந்து கொண்டே வந்தோம். இப்போது மார்க்கம் முழுமையாக்கப்பட்டு விட்டது. முழுமையான ஒன்று மீண்டும் குறைய ஆரம்பித்து விடுமே என எண்ணி நான் அழுகிறேன்” என உமர் (ரழி) கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) “நீங்கள் உண்மைதான் கூறினீர்கள்” என்றார்கள். (இப்னு கஸீர், இப்னு ஜரீர், இப்னு அபீ ஷய்பா)

நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கிணங்க பிலால் (ரழி) பாங்கு கூறி, பிறகு இகாமத் கூறினார்கள். நபி (ஸல்) மக்களுக்கு முதலில் ளுஹ்ரை தொழ வைத்தார்கள். பின்பு பிலால் (ரழி) இகாமத் கூற, நபி (ஸல்) அஸ்ர் தொழுகையைத் தொழ வைத்தார்கள். இவ்விரண்டிற்கும் இடையில் நபி (ஸல்) எந்தத் தொழுகையையும் தொழவில்லை. பின்பு தங்களது வாகனத்தில் ஏறி, தான் தங்கியிருந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கு தங்களது ஒட்டகத்தின் வயிற்றுப் பகுதியை ஜபலுர் ரஹ்மாவை நோக்கிய பாறைகளின் பக்கமாக ஆக்கிக் கொண்டு, நடந்து செல்லும் மக்களை தனக்கு முன்பக்கமாக ஆக்கிக் கொண்டு கிப்லாவை முன்னோக்கியவர்களாக சூரியன் மறையும் வரை ஒட்டகத்தின் மேல் அதே இடத்தில் இருந்தார்கள்.

சூரிய வட்டம் மறைந்தவுடன் உஸாமாவை தங்களது வாகனத்தின் பின்பக்கத்தில் வைத்துக் கொண்டு முஜ்தலிபாவுக்குச் சென்றார்கள். அங்கு மஃரிப், இஷா இரண்டையும் ஒரு அதான் (பாங்கு) இரண்டு இகாமத் கூறி தொழுதார்கள். இரண்டு தொழுகைகளுக்கு மத்தியில் எந்த தஸ்பீஹும் செய்யவில்லை. பிறகு காலை வரை ஓய்வெடுத்தார்கள். ஃபஜ்ர் நேரமானவுடன் பாங்கு இகாமத் கூறி காலைத் தொழுகையை நிறைவேற்றினார்கள். பின்பு மஷ்அருல் ஹரமுக்கு ஒட்டகத்தில் வந்து சேர்ந்தார்கள். அங்கு கிப்லாவை முன்னோக்கி நின்று கொண்டு தக்பீர், தஹ்லீல், தஸ்பீஹ், துஆ போன்றவற்றில் ஈடுபட்டிருந்தார்கள். சூரியன் உதயத்திற்கு முன் அங்கிருந்து புறப்பட்டு மினா வந்தடைந்தார்கள். அப்போது ஃபழ்லு இப்னு அப்பாஸை தங்களுக்குப் பின் அமர்த்தியிருந்தார்கள். ‘பத்ரின் முஹஸ்ஸிர்’ என்ற இடம் வந்தபோது சற்று விரைவாகச் சென்றார்கள். அங்கிருந்து நடுபாதையில் சென்று முதல் ஜம்ராவை அடைந்தார்கள். அக்காலத்தில் முதல் ஜம்ரா அருகே ஒரு மரம் இருந்தது. அந்த ஜம்ராவுக்கு ‘ஜம்ரத்துல் அகபா, ஜம்ரத்துல் ஊலா’ என இரு பெயர்கள் உள்ளன.

பொடிக் கற்களை எடுத்து பத்னுல் வாதியிலிருந்து ஜம்ராவை நோக்கி எறிந்தார்கள். பிறகு குர்பானி கொடுக்குமிடம் வந்து தங்களது கரத்தால் 63 ஒட்டகங்களை அறுத்தார்கள். பிறகு கத்தியை அலீ (ரழி) அவர்களிடம் கொடுக்க, மீதமுள்ள முப்பத்து ஏழு ஒட்டகங்களை அலீ (ரழி) அறுத்தார்கள். நபி (ஸல்) அலீயை தங்களது குர்பானியில் கூட்டாக்கியிருந்தார்கள். ஒவ்வொரு ஒட்டகையிலிருந்து ஒரு சதைத் துண்டு வீதம் எடுத்து சமைத்து, தானும் அலீயும் சாப்பிட்டார்கள். ஆணத்தையும் (சால்னா) குடித்தார்கள்.

பிறகு அங்கிருந்து வாகனம் மூலம் கஅபத்துல்லாஹ் வந்தார்கள். அங்கு ளுஹ்ர் தொழுது விட்டு ஜம்ஜம் கிணற்றருகே வந்தார்கள். அங்கு முத்தலிப் கிளையினர் ஜம்ஜம் கிணற்றில் இருந்து நீறைத்து மக்களுக்கு வழங்கினார்கள். அவர்களைப் பார்த்து “முத்தலிப் கிளையினரே! நன்றாக நீரை இறைத்து வழங்குங்கள். உங்களுடன் போட்டியிட்டு மக்களும் தண்ணீரை இறைக்க ஆரம்பித்து விட்டால் நீங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு விடுவீர்கள் என்ற அச்சம் மட்டும் எனக்கு இல்லாதிருந்தால் நானும் உங்களுடன் சேர்ந்து தண்ணீர் இறைப்பதில் பங்கு பெறுவேன்” என்றார்கள்.

முத்தலிப் கிளையார் ஒரு வாளி தண்ணீரை இறைத்து கொடுக்க, நபி (ஸல்) அதிலிருந்து குடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

அன்றும் நபி (ஸல்) முற்பகலில் மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது நபி (ஸல்) கோவேறுக் கழுதை மீது இருந்தார்கள். அலீ (ரழி) நபி (ஸல்) அவர்களின் உரையை எடுத்துரைத்து கொண்டிருக்க, மக்கள் நின்றுகொண்டும் அமர்ந்துகொண்டும் செவிமடுத்தனர். தங்களது இன்றைய உரையில் நேற்று கூறிய சிலவற்றையும் சேர்த்துக் கூறினார்கள். (ஸுனன் அபூதாவூது)

அபூபக்ரா (ரழி) வாயிலாக இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் (ரஹ்) அறிவிக்கிறார்கள்:

பிறை 10ல் நபி (ஸல்) எங்களுக்கு உரையாற்றினார்கள். “காலம், அல்லாஹ் வானங்கள் பூமியைப் படைத்த தினத்தின் அமைப்பை போன்றே இருக்கிறது. ஆண்டு 12 மாதங்கள் கொண்டது. அவற்றில் நான்கு கண்ணியமிக்கது. துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் என்று தொடர்ந்து வரும் மூன்று மாதங்களும் ஜுமாதா அஸ்ஸானியா, ஷஅபான் ஆகிய இரண்டிற்கு மத்தியிலுள்ள ரஜப் மாதமும் ஆகும். பிறகு “இது எந்த மாதம்?” என்று நபி (ஸல்) கேட்க “அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கு அறிந்தவர்கள்” என்று கூறிவிட்டோம். நபி (ஸல்) சற்று நேரம் அமைதியாக இருந்ததும் நபி (ஸல்) இதற்கு வேறு பெயர் கூறப்போகிறார்கள் என்று எண்ணினோம். “இது துல்ஹஜ் மாதமில்லையா?” என்று கேட்க, “ஆம்! துல்ஹஜ் மாதம்தான்” என்றோம். “இது எந்த ஊர்?” என்று நபி (ஸல்) கேட்டார்கள். “அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிந்தவர்கள்” என்றோம். நபி (ஸல்) அமைதி காத்தபோது இதற்கு வேறு பெயர் கூறுவார்கள் என எண்ணினோம். “இது அந்த ஊர் இல்லையா?” என்று கேட்க, “நாங்கள் ஆம்! அந்த ஊர்தான்” என்று கூறினோம். பின்பு “இன்றைய தினம் என்ன நாள்?” என்று கேட்டார்கள். “அல்லாஹ்வும் அவனது தூதரும் அறிவார்கள் என்றோம்”. பிறகு நபி (ஸல்) “இது அறுத்து பலியிடும் 10வது தினம்தானே என்றார்கள்.” நாங்கள் “ஆம்! 10வது நாள்தான்” என்றோம்.

உங்களது உயிரும் பொருளும் கண்ணியமும் உங்களது இந்த மாதம், இந்த ஊர், இந்த தினத்தைப் போன்று கண்ணியம் பெற்றதாகும். உங்களுடைய இறைவனை சந்திப்பீர்கள். உங்களது செயல்களைப் பற்றி உங்களிடம் விசாரணை செய்வான். எனக்குப் பின் நீங்கள் ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்டு வழி தவறிவிடாதீர்கள். “நான் உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேனா?” என்று கேட்க, குழுமி இருந்தோர் “ஆம்!” என்றனர். “யா அல்லாஹ்! நீயே இதற்கு சாட்சி, செய்தியைக் கேள்விப்படுபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவர்களை விட விளக்கமுள்ளவராக இருக்கலாம்.”என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், ஸுனனுத் திர்மிதி, இப்னு ஹிஷாம், இப்னு ஜரீர்)

மேலும் இப்பிரசங்கத்தில் நபி (ஸல்) கூறினார்கள்: “ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனை அவருக்கே வழங்கப்படும் அவரது உறவினர்களுக்கல்ல. எந்தத் தந்தையும் தன் பிள்ளைக்கு அநியாயம் செய்ய வேண்டாம் எந்த பிள்ளையும் தன் தந்தைக்கு அநியாயம் செய்ய வேண்டாம். தந்தையின் குற்றத்திற்காக பிள்ளையையோ அல்லது பிள்ளையின் குற்றத்திற்காக தந்தையையோ தண்டிக்கப்பட மாட்டாது.

நிச்சயமாக ஷைத்தான் உங்களது இந்தப் பூமியில் அவனை நீங்கள் வணங்குவதிலிருந்து முற்றிலும் நிராசையடைந்து விட்டான். எனினும், நீங்கள் அற்பமாகக் கருதுபவற்றில் அவனுக்கு வழிப்படுவீர்கள். அதனால் அவன் மகிழ்ச்சி அடைவான். (ஜாமிவுத் திர்மிதி, இப்னு மாஜா)

நபி (ஸல்) அவர்கள் பிறை 11, 12, 13 ஆகிய நாட்கள் மினாவில் தங்கி ஹஜ் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டும், மார்க்கச் சட்டத் திட்டங்களை மக்களுக்கு கற்றுக் கொடுத்து கொண்டும் இருந்தார்கள். இப்றாஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தின்படி நேரிய வழிமுறைகளை நிலை நிறுத்தி இணைவைப்புடைய அடையாளங்களையும் அடிச்சுவடுகளையும் அடியோடு அழித்தார்கள்.

இந்த மூன்றில் சில நாட்களிலும் நபி (ஸல்) உரை நிகழ்த்தி இருக்கிறார்கள். ‘ஸர்ரா பின்த் நப்ஹான்’ என்ற பெண்மணி வாயிலாக ஓர் அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. நபி (ஸல்) எங்களுக்கு பிறை 12ல் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் “தஷ்ரீக் (பிறை 11, 12, 13) நாட்களில் இது நடுநாள் அல்லவா?” என்று வினவினார்கள். தொடர்ந்து பிறை 10ல் ஆற்றியது போன்றே இன்றும் உரை நிகழ்த்தினார்கள். (ஸுனன் அபூதாவூது)

நபி (ஸல்) அவர்களின் இவ்வுரை,

(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வுடைய உதவியும், (மக்காவின்) வெற்றியும் கிடைத்து, அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதையும் நீங்கள் கண்டால், (அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு) உங்களது இறைவனைப் புகழ்ந்து துதி செய்து, அவனுடைய (அருளையும்) மன்னிப்பையும் கோருவீர்களாக! நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை அங்கீகரித்து) மன்னிப்புக் கோருதலையும் அங்கீகரிப்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 110:1-4)

என்ற அத்தியாயம் நஸ்ர் இறங்கியதற்கு பின் நடைபெற்றது.

துல்ஹஜ் பிறை 13ல் நபி (ஸல்) மினாவில் இருந்து புறப்பட்டு ‘அப்தஹ்’ என்ற இடத்திலுள்ள கினானா என்ற கிளையினரின் இடத்தில் அன்று பகலும் இரவும் தங்கியிருந்தார்கள். அங்குதான் ளுஹ்ர், அஸர், மஃரிப், இஷா தொழுதார்கள். இஷாவுக்குப் பிறகு சிறிது தூங்கிவிட்டு கஅபாவிற்கு வந்து ‘தவாஃபுல் விதா’ நிறைவேற்றினார்கள். மக்களையும் அதை நிறைவேற்ற பணித்தார்கள்.

ஹஜ் கடமைகளை நிறைவேற்றிய பின்பு, மதீனா முனவ்வரா நோக்கிப் புறப்படுமாறு தங்களுடன் வந்தவர்களைக்கு கூறினார்கள். அவர்கள் சற்று ஓய்வு எடுப்பதற்கும் அவகாசம் அளிக்கவில்லை. அல்லாஹ்வின் பாதையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளையும், தியாகங்களையும் புரிவதற்காக உடனடியாக புறப்படும்படி அழைப்பு விடுத்தார்கள்.

குறிப்பு: நபியவர்களின் இந்த இறுதி ஹஜ்ஜை பற்றிய விவரங்கள் ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம், இப்னு ஹிஷாம், ஜாதுல் மஆது, ஃபத்ஹுல் பாரி ஆகிய நூற்களிலிருந்து எடுக்கப்பட்டன.

இறுதிப் படை

தற்பெருமையும் அகம்பாவமும் கொண்ட ரோமானியர்கள், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களின் வாழ்க்கைக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். தங்களுக்கு கீழுள்ளவர்கள் யாராவது இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் அவரைக் கொன்றனர். ரோமர்களின் ஆளுநராக மஆன் பகுதியிலுள்ள ஃபர்வா இப்னு அம்ர் ஜுதாமி இஸ்லாமை ஏற்றபோது அவரைக் கொடுமைப்படுத்திக் கொன்ற நிகழ்ச்சியை முன்னர் விவரித்துள்ளோம்.

ரோமர்களின் இந்த அடக்குமுறைகளையும் அத்துமீறலையும் முடிவுக்கு கொண்டுவர பெரும் படை ஒன்றை ஹிஜ்ரி 11ல் நபி (ஸல்) தயார்படுத்தினார்கள். ரோமன் கட்டுப்பாட்டிலுள்ள ஃபலஸ்தீன் பகுதியின் ‘பல்கா“, ‘தாரூம்’ எல்லைகள் வரைச் சென்று எதிரிகளை எச்சரித்து வருமாறு அந்தப் படைக்கு ஆணையிட்டார்கள்.

எல்லைகளில் வசித்து வந்த அரபியர்களின் உள்ளங்களில் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் மீது நம்பிக்கையை வரவைப்பதற்காகவும், கிறிஸ்துவ ஆலயங்களின் ஆதிக்கத்தை யாராலும் எதிர்க்க முடியாது என்ற நம்பிக்கையை தகர்ப்பதற்காகவும், இஸ்லாமை ஏற்றுக் கொள்வது ஆபத்துகளையும் மரணத்தையும் தேடித் தரும் என்று எவரும் எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவும் இப்படை அனுப்பப்பட்டது.

இப்படையின் தளபதி வயது குறைந்தவராக இருப்பதைக் குறித்து மக்கள் பலவாறாகப் பேசினர். அவருடன் புறப்படத் தயங்கினர். இதைக் கண்ட நபி (ஸல்) “அவரது தலைமையை இடித்துரைத்தீர்கள் என்றால் இதற்கு முன் அவரது தந்தையின் தலைமையையும் இடித்துரைத் திருப்பீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் தலைமைக்கு ஏற்றவரே! தகுதியானவரே! மக்களில் எனக்கு மிக நேசமானவர்களில் அவரும் ஒருவரே. அவருக்குப் பின் நிச்சயமாக இவரும் எனக்கு நேசமானவர்களில் ஒருவரே. (ஸஹீஹுல் புகாரி)

நபி (ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு மக்களெல்லாம் உஸாமாவின் படையில் சேர்வதற்கு ஆர்வத்துடன் குழுமினர். உஸாமா (ரழி) படையை முழுமையாக ஒழுங்குபடுத்திக் கொண்டு மதீனாவிலிருந்து புறப்பட்டு 8 கி.மீ. தூரத்திலுள்ள ‘ஜுர்ஃப்’ என்ற இடத்தில் தங்கினார். இத்தருணத்தில் நபி (ஸல்) நோய்வாய்ப்பட்டார்கள் என்ற துக்கமான செய்தி கிடைத்தது. அல்லாஹ்வின் முடிவு என்ன என்று தெரிந்து கொள்வதற்காக சற்றுத் தாமதித்தார். இப்படை அபூபக்ர் (ரழி) ஆட்சியின் போது புறப்பட வேண்டிய முதல் ராணுவப்படையாக அமைய வேண்டும் என்பது இறைவனின் நாட்டமாக இருந்து விட்டது. (ஸஹீஹுல் புகாரி, இப்னு ஹிஷாம்)
உயர்ந்தோனை நோக்கி...
புறப்படுவதற்கான அறிகுறிகள்

அழைப்புப் பணி நிறைவுற்று, இஸ்லாம் நிலைமைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போது இவ்வுலக வாழ்க்கையிலிருந்தும் அதில் வாழ்பவர்களிடமிருந்தும் விடைபெறும் அறிகுறிகள் நபி (ஸல்) அவர்களின் உணர்வுகளில் தோன்றின. அவர்களது சொல் செயல்களிலும் வெளிப்பட்டன.

ஹிஜ்ரி 10, ரமழான் மாதத்தில் நபி (ஸல்) இருபது நாட்கள் ‘இஃதிகாஃப்’ இருந்தார்கள். பொதுவாக 10 நாட்கள் இஃதிகாஃப் இருப்பதுதான் நபி (ஸல்) அவர்களின் வழக்கமாக இருந்தது. இம்முறை வானவர் ஜிப்ரயீல் நபியவர்களிடம் வந்து இருமுறை குர்ஆனைப் பரிமாறிக் கொண்டார்கள். இறுதி ஹஜ்ஜில் ‘இந்த ஆண்டிற்குப் பின் இந்த இடத்தில் உங்களை நான் சந்திக்க முடியாமல் போகலாம்’ என்று நபி (ஸல்) கூறியிருந்தார்கள். ஜம்ரத்துல் அகபாவில் நபி (ஸல்) நிற்கும் போது “உங்களது வணக்க வழிபாடுகளை, ஹஜ் கடமைகளை என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். இந்த ஆண்டிற்குப் பிறகு நான் ஹஜ்ஜுக்கு வர முடியாமல் போகலாம்” என்றும் கூறியிருந்தார்கள். ஹஜ் பிறை 12ல் சூரத்துன் நஸ்ர் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இவற்றிலிருந்து நபி (ஸல்) இவ்வுலகை விட்டு விடைபெறப் போகிறார்கள், அவர்களது மரணச் செய்தி அவர்களுக்கு வந்துவிட்டது என்பதைத் தெளிவாக உணரலாம்.

துல்ஹஜ் முடிந்து முஹர்ரமும் முடிந்தது. ஸஃபர் மாதம் பிறந்தது. ஹிஜ்ரி 11, ஸஃபர் மாத தொடக்கத்தில் நபி (ஸல்) உஹுதுக்குச் சென்றார்கள். அங்கு ஷஹீதானவர்களுக்காக அல்லாஹ்விடம் இறைஞ்சித் தொழுதார்கள். இருப்பவர்களுக்கும் இறந்தோருக்கும் விடை கூறுவது போல் நபி (ஸல்) அவர்களின் இச்செயல் அமைந்தது. பின்பு தங்களது பள்ளிக்கு வந்து மிம்பரில் ஏறி “நான் உங்களுக்கு முன் செல்கிறேன். நான் உங்களுக்கு சாட்சியாளன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தற்போது எனது நீர் தடாகத்தைப் பார்க்கிறேன். எனக்கு பூமியிலுள்ள பொக்கிஷங்களின் சாவிகள் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்குப் பின் நீங்கள் இணை வைப்பவர்களாக மாறிவிடுவீர்கள் என்று நான் அஞ்சவில்லை. இவ்வுலகத்திற்காக நீங்கள் சண்டையிட்டுக் கொள்வீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

ஒரு நாள் நடுநிசியில் ‘பகீஃ’ மண்ணறைக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக பாவ மன்னிப்புத் தேடினார்கள். மேலும் “மண்ணறைவாசிகளே! மக்கள் இருக்கும் நிலையைவிட உங்களது நிலை உங்களுக்கு இன்பம் பயக்கட்டும். இருள் சூழ்ந்த இரவுப் பகுதிகளைப் போன்று குழப்பங்கள் வரவிருக்கின்றன. ஒன்றன்பின் ஒன்றாக தொடராக வந்து கொண்டிருக்கும். பிந்தியது முந்தியதைவிட மோசமானதாக இருக்கும்” எனக் கூறிவிட்டு “நிச்சயமாக நாமும் உங்களிடம் வந்து சேருவோம்” என்ற நற்செய்தியையும் அவர்களுக்குக் கூறினார்கள்.

நோயின் ஆரம்பம்

ஹிஜ்ரி 11, ஸஃபர் மாதம், திங்கட்கிழமை பிறை 28 அல்லது 29 ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்ள பகீஃ சென்றார்கள். நல்லடக்கம் செய்துவிட்டு திரும்பும் வழியில் நபி (ஸல்) அவர்களுக்குக் கடும் தலைவலி ஏற்பட்டது. உடல் சூடு அதிகமானது. தலைமேல் கட்டியிருந்த துணிக்கு மேல் புறத்திலும் அனலை உடனிருப்போர் உணர்ந்தனர். பதினொரு நாட்கள் நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். 13 அல்லது 14 நாட்கள் கடினமான நோயில் கழித்தார்கள்.

இறுதி வாரம்

நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையாகவே “நாளை நான் எங்கிருப்பேன்? நாளை நான் எங்கிருப்பேன்?” என துணைவியரிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். நபி (ஸல்) அவர்களின் துணைவியர் நபி (ஸல்) விரும்பிய வீட்டில் தங்குவதற்கு அனுமதித்தனர். ஒருபுறம் ஃபழ்ல் இப்னு அப்பாஸ் (ரழி), மறுபுறம் அலீ இப்னு அபூதாலிப் (ரழி) தாங்கலாக, கால்கள் தரையில் உரசிக் கோடு போட்ட நிலையில் ஆயிஷா (ரழி) வீட்டிற்குச் சென்றார்கள். அவர்களின் தலை துணியால் கட்டப்பட்டிருந்தது. ஆயிஷா (ரழி) வீட்டிலேயே தங்களது வாழ்வின் இறுதி வாரத்தை நபி (ஸல்) கழித்தார்கள். அன்னை ஆயிஷா (ரழி) சூரா ஃபலக், நாஸ் மற்றும் நபி (ஸல்) அவர்களிடம் தான் கற்ற துஆக்களை ஓதி ஊதி வந்தார்கள். பரக்கத்தை நாடி நபி (ஸல்) அவர்களின் கரத்தாலேயே அவர்களைத் தடவி விட்டார்கள்.

மரணத்திற்கு ஐந்து நாட்கள் முன்பு

மரணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு புதன்கிழமை உடல் நெருப்பாய் கொதித்தது. வலியும் அதிகமானது. அவ்வப்போது நபி (ஸல்) அவர்களுக்கு மயக்கமும் ஏற்பட்டது. அப்போது “பல கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து ஏழு துருத்திகள் என் மீது ஊற்றுங்கள். நான் மக்களிடம் சென்று ஒப்பந்தம் வாங்கப் போகிறேன்” என்று கூறினார்கள். தோழர்கள் நபி (ஸல்) அவர்களை ஒரு பெரியபாத்திரத்தில் அமர வைத்து நீர் ஊற்றினார்கள். நபி (ஸல்) “போதும்! போதும்!” என்று கூறினார்கள். அப்போதுதான் நபி (ஸல்) அவர்களின் சூடு தணியக் கண்டார்கள். தலையில் தடிப்பான துணியைக் கட்டிக் கொண்டு போர்வையைப் போர்த்தியவர்களாக மிம்பரில் வந்து அமர்ந்தார்கள். அதுதான் நபி (ஸல்) அவர்களின் கடைசி சபையாகும். அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்துவிட்டு “மக்களே! என்னிடம் வாருங்கள்” என்று கூறியபோது மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி விரைந்து வந்தனர். அப்போது நபி (ஸல்) கூறியவற்றில் இதுவும் ஒன்று. “யூத கிருஸ்தவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படட்டும்! தங்களின் தூதர்களுடைய அடக்கத் தலங்களை வணக்கத்தலங்களாக மாற்றி விட்டனர்.” மற்றொரு அறிவிப்பில்: “யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் அல்லாஹ் அழிப்பானாக! தங்களது தூதர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களை வணங்கும் இடங்களாக மாற்றி விட்டனர். எனது கப்ரை வணங்கும் இடமாக ஆக்காதீர்கள்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, முவத்தா மாலிக்)

தன்னிடம் பழிதீர்த்துக் கொள்ள மக்களிடம் தன்னை ஒப்படைத்தார்கள். யாரையாவது நான் முதுகில் அடித்திருந்தால் இதோ எனது முதுகை தந்து விட்டேன். பழி தீர்க்கட்டும். யாரையாவது கண்ணியம் குலைய திட்டியிருந்தால் இதோ நான் முன் வந்துள்ளேன். அவர் பழிதீர்த்துக் கொள்ளட்டும். பின்பு மிம்பலிருந்து இறங்கி ளுஹ்ரைத் தொழ வைத்தார்கள். மீண்டும் மிம்பரில் ஏறி முன்னர் உரை நிகழ்த்தியவாறே பழி தீர்த்துக் கொள்ள வேண்டுவோர் பழி தீர்க்கக் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து “எனக்கு நீங்கள் மூன்று திர்ஹம் தர வேண்டும்” என்று கூறவே, “ஃபழ்லே! நீங்கள் அதைக் கொடுத்து விடுங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

பின்னர் அன்சாரிகளைப் பற்றி விசேஷமாக சிறப்பித்துக் கூறினார்கள்: “அன்சாரிகளைப் பற்றி நான் விசேஷமாக அறிவுரை கூறுகிறேன். அவர்கள் எனது ஈரலும் இதயமும் ஆவார்கள். அவர்கள் தங்களது கடமையை நிறைவேற்றி விட்டார்கள். அவர்களுடைய உரிமையும், சலுகையும் மீதமிருக்கிறது. அவர்களில் நல்லோர்களின் செயலை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர்களில் தவறிழைப்போரை மன்னியுங்கள்.” மற்றொரு அறிவிப்பில், “மக்கள் அதிகமாகினர். ஆனால் அன்சாரிகள் குறைகின்றனர். இறுதியில் அவர்கள் உணவில் உள்ள உப்பைப் போன்று குறைந்து விடுவார்கள். உங்களில் ஒருவர் மற்றவருக்கு நன்மையோ, தீமையோ செய்யும் அளவு அதிகாரம் பெற்றால், அன்சாரிகளில் நல்லோன் சொல்லை ஏற்கட்டும். அவர்களில் தவறிழைப்போரை மன்னிக்கட்டும். (ஸஹீஹுல் புகாரி)

இவ்வாறு உபதேசம் செய்த பின்பு “ஓர் அடியாருக்கு இவ்வுலகில் உள்ளவற்றை உங்களுக்கு வழங்கட்டுமா? அல்லது மறுமையில் என்னிடமுள்ளவற்றை உங்களுக்குத் தரட்டுமா? என்று அல்லாஹ் வினவ, அதற்கு அந்த அடியாரின் அல்லாஹ்விடமுள்ளதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்” என்று நபி (ஸல்) கூறினார்கள். இந்த ஹதீஸை அறிவிக்கும் அபூ சயீத் அல் குத் (ரழி) கூறுவதாவது:

நபி (ஸல்) அவர்களின் இப்பேச்சைக் கேட்ட அபூபக்ர் (ரழி) அழ ஆரம்பித்து “எங்களது தந்தையரையும் தாய்மாரையும் உங்களுக்கு அர்ப்பணமாக்குகிறோம்” என்று கூறினார்கள். நாங்கள் அவரைக் கண்டு ஆச்சரியமுற்றோம். “இம்முதியவரைப் பாருங்கள்! அல்லாஹ் ஓர் அடியாருக்கு உலக வசதிகளை வழங்கட்டுமா? அல்லது தன்னிடம் மறுமையில் உள்ளதை வழங்கட்டுமா என வினவினான் என்றுதான் நபி (ஸல்) கூறினார்கள். அதற்குத் தந்தையரும் தாய்மாரும் அர்ப்பணம் என்று கூறுகிறாரே?” என்று மக்கள் பேசினர். அபூபக்ர் (ரழி) எங்களில் மிகுந்த அறிஞராக இருந்தார். எனவேதான் இவ்வாறு கேட்கப்பட்ட அடியார் இந்தத் தூதர்தான் என்பதை புரிந்து கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மேலும் நபி (ஸல்) கூறினார்கள்: “தனது நட்பாலும் பொருளாலும் எனக்கு மக்களில் அதிகமதிகம் உபகாரம் செய்தவர் அபூபக்ர் ஆவார். என் இறைவனே! உன்னைத் தவிர மற்றெவரையும் உற்ற நண்பனாக ஆக்கிக் கொள்வதாக இருந்தால் அபூபக்ரை உற்ற நண்பராக ஆக்கியிருப்பேன். என்றாலும் அவருடன் இஸ்லாமிய சகோதரத்துவமும் அதன் நேசமும் எனக்கு இருக்கிறது. பள்ளியிலுள்ள எல்லா வீட்டினுடைய வாசல் கதவுகளும் அடைக்கப்பட வேண்டும் அபூபக்ருடைய வீட்டு வாசலைத் தவிர!” (ஸஹீஹுல் புகாரி)
நான்கு நாட்களுக்கு முன்பு

மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன், வியாழக்கிழமை நபி (ஸல்) அவர்களுக்கு வலி கடுமையானது. மக்களை நோக்கி “வாருங்கள்! நான் உங்களுக்கு ஒன்றை எழுதித் தருகிறேன். அதன்பின் ஒருக்காலும் நீங்கள் வழி தவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள். அப்போது வீட்டில் இருந்த பலல் உமர் (ரழி) அவர்களும் ஒருவர். “நபி (ரழி) அவர்களுக்கு வலி அதிகமாகிவிட்டது. உங்களிடம் குர்ஆன் இருக்கிறது. அல்லாஹ்வின் வேதமே உங்களுக்குப் போதுமானது” என்று உமர் (ரழி) மக்களிடம் கூறினார்கள். இதனால் அங்கிருந்தவர்களுக்கிடையில் கருத்து வேற்றுமை நிலவியது. சிலர் “நபி (ஸல்) நமக்கு எழுதித் தரட்டும்” என்று கூற, மற்றும் சிலர் உமர் (ரழி) கூறியது போல கூறினார்கள். இரு சாரார்களிடையே கருத்து வேற்றுமை விவாதமாக மாறவே “நீங்கள் இப்போது என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்” என நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அன்றைய தினம் நபி (ஸல்) மூன்று விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்:

1) யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஷ்ரிக்குகள் ஆகியோரை அரபிய தீபகற்பத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்.

2) இங்கு வருகை தரும் மக்களை நான் கவனித்து உபசரித்தவாறே நீங்களும் உபசரித்து விருந்தோம்பல் செய்ய வேண்டும்.

3) மூன்றாவது விஷயத்தை அறிவிப்பாளர் மறந்துவிட்டார். அது இம்மூன்றில் ஒன்றாக இருக்கலாம்: 1) அல்லாஹ்வின் வேதத்தையும் நபி வழியையும் நன்றாகப் பிடித்துக் கொள்ளுங்கள். 2) உஸாமாவின் படையை அனுப்பி விடுங்கள். 3) தொழுகையையும் நீங்கள் உரிமையாக்கிக் கொண்டவர்களையும் பேணுங்கள்.

தனக்கு நோய் கடினமாக இருந்தும் அன்றைய தினத்தின் (மரணத்திற்கு நான்கு நாட்களுக்கு முன் வியாழக்கிழமை) தொழுகை அனைத்தையும் நபி (ஸல்) அவர்களே தொழ வைத்தார்கள். அன்றைய தினத்தின் மஃரிபு தொழுகையில் ‘வல் முர்சலாத்தி உர்ஃபன்’ என்ற சூராவை ஓதித் தொழ வைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி)

அன்றைய தினம் இஷா நேரத்தில் மேலும் நோயின் வேகம் அதிகமானது. நபி (ஸல்) அவர்களால் பள்ளிக்கு வரமுடியவில்லை. இந்நிலையைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதைக் கேட்போம். “மக்கள் தொழுதார்களா?” என நபி (ஸல்) கேட்டார்கள். “இல்லை இறைத்தூதரே! தங்களை எதிர்பார்க்கிறார்கள்” என்றோம். எனக்காக ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வையுங்கள் எனக் கூற, நாங்கள் தண்ணீர் வைத்தோம். நபி (ஸல்) குளித்து விட்டு செல்வதற்கு முனைந்தார்கள். ஆனால், அவர்களை மயக்கம் ஆட்கொண்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு மயக்கம் தெளிந்து “மக்கள் தொழுதார்களா?” என்றார்கள். நாங்கள் முதலில் கூறியது போல் இம்முறையும் பதில் கூறினோம். மீண்டும் தண்ணீர் வரவழைத்து முன்னர் போல குளித்தார்கள். பிறகு, நபி (ஸல்) அபூபக்ரை தொழ வைக்கும்படி கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அப்போதிலிருந்து பதினேழு நேர தொழுகைகளை நபி (ஸல்) நோயுடன் இருக்கும் போது அபூபக்ர் (ரழி) மக்களுக்குத் தொழ வைத்தார்கள். (வியாழன் இஷாவிலிருந்து திங்கட்கிழமை ஃபஜ்ரு தொழுகை வரை) “இந்நாள்களில் அபூபக்ர் (ரழி) அவர்களைத் தொழ வைக்க சொல்ல வேண்டாம், காரணம், மக்கள் அதைத் துர்குறியாக எடுத்துக் கொள்வர்” என ஆயிஷா (ரழி) மூன்று அல்லது நான்கு முறை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி (ஸல்) அதனை மறுத்து விட்டார்கள். “நீங்கள் தானே யூசுஃபுடைய அந்தத் தோழிகள். அபூபக்ரே மக்களுக்கு தொழ வைக்கட்டும்” என நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மூன்று நாட்களுக்கு முன்பு...

நபி (ஸல்) இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கூற, தான் கேட்டதாக ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: “அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் எவரும் அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொண்டவராகவே தவிர மரணிக்க வேண்டாம்.” (தபகாத் இப்னு ஸஅது, முஸ்னத் அபூதாவூது, முஸ்னத் அபூ யஃலா)

இரண்டு அல்லது ஒரு நாளுக்கு முன்பு...

அது சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை. நபி (ஸல்) உடல் நலனில் முன்னேற்றத்தை உணர்ந்தார்கள், இரண்டு பேர் உதவியுடன் தங்களது அறையிலிருந்து பள்ளிக்கு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) ளுஹ்ர் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். நபியவர்களை அபூபக்ர் (ரழி) பார்த்தவுடன் நகர்ந்து கொள்ள முயன்றார்கள். ஆனால், அவ்வாறு செய்ய வேண்டாம் என சைகை செய்தார்கள். பிறகு, என்னை அபூபக்ர் அருகில் அமர வையுங்கள் என்று கூற, அவர்களை அபூபக்ரின் இடப்பக்கத்தில் உட்கார வைத்தார்கள். நபி (ஸல்) தொழ வைக்க அவர்களின் தொழுகையைப் பின்பற்றி அபூபக்ர் (ரழி) தொழது கொண்டு, நபியவர்களின் தக்பீரை மக்களுக்கு கேட்கும்படி சப்தமிட்டுக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ஒரு நாள் முன்பு...

நபி (ஸல்) மரணிப்பதற்கு ஒரு நாள் முன்பு, அதாவது ஞாயிற்றுக்கிழமை தங்களிடமுள்ள அடிமைகளை அனைத்தையும் உரிமையிட்டார்கள். மேலும், தங்களிடமுள்ள ஆறு அல்லது ஏழு தங்கக் காசுகளைத் தர்மம் செய்தார்கள். தங்களுடைய ஆயுதங்களையும் முஸ்லிம்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள். அன்றிரவு நபி (ஸல்) அவர்களின் வீட்டிலுள்ள விளக்கில் எண்ணெய் தீர்ந்து போகவே அதை ஒரு பெண்ணிடம் கொடுத்தனுப்பி அண்டை வீட்டாரிடம் எண்ணெயிட்டுத் தரும்படி ஆயிஷா (ரழி) கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் கவச ஆடை முப்பது ‘சாஃ’ கோதுமைக்காக ஒரு யூதனிடம் அடைமானமாக வைக்கப்பட்டிருந்தது. (ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅது, முஸ்னது அஹ்மது)

வாழ்வின் இறுதி நாள்

அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கிறார்கள்: திங்கட்கிழமையன்று முஸ்லிம்கள் அபூபக்ர் (ரழி) அவர்களைப் பின்தொடர்ந்து ஃபஜ்ர் தொழுது கொண்டிருக்கும் போது திடீரென ஆயிஷாவுடைய அறையின் திரையை நபி (ஸல்) அவர்கள் நீக்கி மக்கள் அணி அணியாக தொழுகையில் நிற்பதைப் பார்த்து ஆனந்தமாகச் சிரித்தார்கள். தொழ வைப்பதற்கு நபி (ஸல்) வருகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர் (ரழி) அவர்கள், தொழ வைக்கும் இடத்திலிருந்து சற்று பின்னே வரிசையை நோக்கி நகர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் வருகையைப் பார்த்த மகிழ்ச்சியினால் முஸ்லிம்கள் தொழுகையில் நிலை குலைய ஆரம்பித்தனர். நபி (ஸல்) அவர்கள் ‘உங்களது தொழுகையை முழுமைப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு அறையில் நுழைந்து திரையிட்டுக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

இந்நிகழ்ச்சிக்குப் பின் இன்னொரு தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்களுக்குக் கிட்டவில்லை. முற்பகல் நேரம் வந்தவுடன் நபி (ஸல்) ஃபாத்திமாவை வரவழைத்து அவரிடம் சிலவற்றை இரகசியமாகப் பேசினார்கள். அதைக் கேட்டவுடன் ஃபாத்திமா (ரழி) அழலானார்கள். மீண்டும் அழைத்து சிலவற்றை இரகசியமாகக் கூறவே ஃபாத்திமா (ரழி) சிரித்தார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:

இந்நிகழ்ச்சி பற்றி பின்பு ஒரு நாள் ஃபாத்திமாவிடம் விசாரித்தோம். எனக்கு ஏற்பட்ட இதே வலியினாலே நான் இறந்து விடுவேன் என நபி (ஸல்) கூறியபோது நான் அழுதேன். அவர்களது குடும்பத்தாரில் நான்தான் முதலில் அவர்களை சென்றடைவேன் என்று நபி (ஸல்) கூறியபோது நான் சிரித்தேன்” என்று ஃபாத்திமா (ரழி) பதில் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

மேலும், “அகில உலக பெண்களின் தலைவி ஃபாத்திமா” என்று நபி (ஸல்) நற்செய்தி கூறினார்கள். (ரஹ்மத்துல் லில் ஆலமீன்)

நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான நிலைமையைக் கண்ட ஃபாத்திமா (ரழி) “எனது தந்தைக்கு ஏற்பட்ட கஷ்டமே!” என்று வேதனைப்பட்டார்கள். உன் தந்தைக்கு இன்றைக்குப் பிறகு என்றுமே சிரமம் இருக்காது என்று நபி (ஸல்) ஆறுதல் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

ஹசன், ஹுசைனை வரவழைத்து அவர்களை முத்தமிட்டு அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்கள். மனைவிமார்களை அழைத்து அவர்களுக்கும் உபதேசமும் அறிவுரையும் நல்கினார்கள்.

முன்பை விட வேதனை அதிகமானது. கைபர் போரின் போது உட்கொண்ட உணவில் கலக்கப்பட்ட விஷத்தின் விளைவை நபி (ஸல்) உணர ஆரம்பித்தார்கள். “ஆயிஷாவே! கைபர் தினத்தில் நான் உண்ட உணவின் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தில் அந்த விஷத்தினால் எனது நரம்புகள் துண்டாவதை நான் உணர்கிறேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

தங்கள் முகத்திலிருந்த போர்வையை நபி (ஸல்) தூக்கி எறிந்தார்கள். அவர்கள் மீது திரும்ப போர்த்தினால் முகத்தில் இருப்பதை மட்டும் அகற்றி விடுவார்கள். இந்நிலையில் சிலவற்றை நபி (ஸல்) கூறினார்கள். அதுவே அவர்களது கடைசி பேச்சாகும். அதாவது: அல்லாஹ்வின் சாபம் யூத, கிறிஸ்தவர்கள் மீது உண்டாகட்டும்! அவர்கள் தங்களது இறைத்தூதர்களின் அடக்கத்தலங்களை வணங்குமிடமாக மாற்றிக் கொண்டார்கள். அரபிகளின் பூமியில் இரண்டு மார்க்கங்கள் இருக்கக் கூடாது.” (ஸஹீஹுல் புகாரி, தபகாத் இப்னு ஸஅத்)

தொழுகையையும் நீங்கள் உரிமையாக்கிக் கொண்டவர்களையும் (அடிமைகள்) பேணுங்கள் என்று பலமுறை அறிவுறுத்தினார்கள். (ஸஹீஹுல் புகாரி) 
மரணத் தருவாயில்...

இறுதி நேரம் நெருங்கவே ஆயிஷா (ரழி) நபி (ஸல்) அவர்களைத் தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்கள். இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுவதாவது:

“நபி (ஸல்) என் அறையில் எனக்குரிய தினத்தில் எனது கழுத்துக்கும் நெஞ்சுக்குமிடையில் மரணமானார்கள். அவர்களது மரண நேரத்தில் எனது எச்சிலையும் அவர்களது எச்சிலையும் ஒன்று சேர்த்தேன். எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் அறைக்குள் வந்தார். அவரது கரத்தில் மிஸ்வாக் இருந்தது. நபி (ஸல்) அவர்களை எனது மடியில் கிடத்தியிருந்தேன். அப்துர் ரஹ்மான் கரத்திலுள்ள மிஸ்வாக்கை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் மிஸ்வாக் செய்ய விரும்புகிறார்கள் என புரிந்து கொண்டேன். “நான் உங்களுக்கு அதனை வாங்கித் தரவா?” என்று கேட்டபோது, “ஆம்!” என தலை அசைத்தார்கள். அதனை வாங்கிக் கொடுத்தேன். அது அவர்களுடைய பற்களுக்கு சிரமமாக இருந்தது. “நான் அதனை மிருதுவாக்கி தரட்டுமா?” என்று கேட்டேன். தலை அசைத்து “ஆம்!” என்றார்கள். நான் அதனை மிருதுவாக்கிக் கொடுத்தேன்.”

இன்னொரு அறிவிப்பில் வருவதாவது: “நபி (ஸல்) மிக அழகிய முறையில் அக்குச்சியால் பல் துலக்கினார்கள். அவர்களுக்கருகில் நீர் நிரம்பிய குவளை இருந்தது. அதில் கைகளை விட்டு முகத்தில் தடவிக் கொண்டார்கள். “லாஇலாஹஇல்லல்லாஹ் இன்னலில் மவ்த்தி சகராத்- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மரணத்திற்குப் பல மயக்கங்கள் இருக்கின்றன” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)

பல் துலக்கிய பின்பு தங்களது கையை அல்லது விரலை உயர்த்தினார்கள். அவர்களது பார்வை முகட்டை நோக்கியது. அவர்களது உதடுகள் அசைந்தன. அவர்கள் என்ன கூறுகிறார்கள் என ஆயிஷா (ரழி) செவிதாழ்த்திக் கேட்டார்கள்.

நபி (ஸல்) அப்போது “இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், இறைப்போர் தியாகிகள், நல்லோர்கள் ஆகிய நீ அருள் செய்தோருடன்...

அல்லாஹ்வே! என்னை மன்னிப்பாயாக! என்மீது கருணை காட்டுவாயாக! உயர்ந்த நண்பனுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வே! உயர்ந்த நண்பனை... (ஸஹீஹுல் புகாரி)

கடைசி வார்த்தையை மட்டும் மூன்று முறை நபி (ஸல்) கூறினார்கள். உயர்த்திய அவர்களுடைய கை சாய்ந்தது. உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லா வ இன்னா இலை ராஜிஊன்.

ஹிஜ்ரி 11, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை முற்பகல் முடியும் நேரத்தில் அவர்களுக்கு மரணம் ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு 63 வயது, 4 நாட்கள் ஆகியிருந்தன.

கவலையில் நபித்தோழர்கள்

நபி (ஸல்) அவர்களின் மரணச் செய்தி எங்கும் பரவியது. மதீனா இருண்டுபோனது. இதைப் பற்றி “நபி (ஸல்) எங்களிடம் வந்த தினத்தை விட மிக அழகிய, ஒளிமிகுந்த நாளை நான் கண்டதில்லை. நபி (ஸல்) மரணித்த தினத்தைவிட இருண்ட, வெறுப்பான நாளை நான் கண்டதில்லை” என அனஸ் (ரழி) கூறுகிறார்கள். (முஸ்னத் தாரமி, மிஷ்காத்)

ஃபாத்திமா (ரழி) “எனது தந்தையே! அழைத்த இறைவனுக்கு பதில் அளித்துவிட்டீரே! எனது தந்தையே! ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் தங்களின் தங்குமிடமாயிற்றே! எனது தந்தையே! உங்களின் மரணச் செய்தியை நாங்கள் ஜிப்ரயீலிடம் கூற வேண்டுமே” எனக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி)

உமரின் நிலை

உமர் (ரழி) எழுந்து நின்று “சில நயவஞ்சகர்கள் நபி (ஸல்) இறந்துவிட்டார்கள் என்று நினைக்கின்றனர். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் மரணிக்கவில்லை மூஸா இப்னு இம்ரான் (அலை) அல்லாஹ்வைச் சந்திக்கச் சென்று நாற்பது நாட்கள் தனது சமூகத்தாரை விட்டு மறைந்து இருந்த போது மக்கள் மூஸா மரணித்து விட்டார் என எண்ணினார்கள். ஆனால், மூஸா (அலை) திரும்பி வந்தார்கள். அவ்வாறே நபியவர்களும் தன் இறைவனைச் சந்திக்கச் சென்றுள்ளார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி (ஸல்) நிச்சயம் திரும்ப வருவார்கள். தான் மரணித்து விட்டதாகக் கூறியவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டுவார்கள்?” எனக் கூறினார்கள். (இப்னு ஹிஷாம்)

அபூபக்ரின் நிலை

அபூபக்ர் (ரழி) இந்நேரத்தில் மஸ்ஜிது நபவியிலிருந்து சற்று தொலைவிலுள்ள ‘சுன்ஹ்’ என்ற இடத்திலுள்ள வீட்டில் தங்கியிருந்தார்கள். இந்தத் துக்கமானச் செய்தியைக் கேட்டவுடன் தனது குதிரையில் ஏறி மஸ்ஜிது நபவிக்கு வந்து, யாரிடமும் பேசாமல் நபி (ஸல்) அவர்களைக் காண்பதற்காக ஆயிஷாவின் அறை நோக்கி நடந்தார்கள். நபி (ஸல்) ஹிபரா நாட்டு ஆடையால் போர்த்தப்பட்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் முகத்திலிருந்து போர்வையை அகற்றி முகத்தைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு அழலானார்கள். “என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ் தங்களுக்கு இரண்டு மரணத்தைத் தரமாட்டான். அல்லாஹ் உங்களுக்கு விதித்த முதல் மரணத்தையே நீங்கள் அடைந்து கொண்டீர்கள்” என்றும் கூறினார்கள்.

பின்பு அறையிலிருந்து வெளியேறி அபூபக்ர் (ரழி) மஸ்ஜிது நபவிக்கு வந்தார்கள். அங்கு உமர் (ரழி) மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரழி) “உமரே! அமருங்கள்” என்றுரைத்தும் உமர் (ரழி) அமர மறுத்து விட்டார்கள். அபூபக்ர் (ரழி) மிம்பரில் ஏறி சப்தமிட்டு தஷஹ்ஹுத் முழங்கினார். மக்கள் உமர் (ரழி) அவர்களை விட்டு நீங்கி அபூபக்ர் (ரழி) அவர்களை நோக்கி விரைந்தனர். அப்போது அபூபக்ர் (ரழி) “உங்களில் யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தாரோ! நிச்சயம் முஹம்மது மரணித்தார் என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்! உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கினாரோ! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிருடன் இருப்பவன் மரணிக்க மாட்டான். அல்லாஹ் கூறுகிறான்:

முஹம்மது (நபி) ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக் கூடிய இறைவன்) அல்ல. அவருக்கு முன்னரும் (இவ்வாறே) பல தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டு விட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்று விட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கி விடமாட்டான். நன்றி அறிபவர்களுக்கு அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான். (அல்குர்ஆன் 3:144)

என்று உரையாற்றினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்: “அபூபக்ர் (ரழி) இந்த வசனத்தை ஓதிக் காட்டும் வரை அல்லாஹ் இதனை இறக்கி வைத்ததை மக்கள் அறியாதது போல் இருந்தனர். அபூபக்ரிடமிருந்து அதை செவியேற்ற மக்கள் அதனையே திரும்பத் திரும்ப ஓதினர்.”

இப்னுல் முஸய்ம்ப் (ரழி) கூறுகிறார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரழி) அந்த வசனத்தை ஓதியவுடன் அவர்கள் கூறுவதுதான் உண்மை என நான் அறிந்து கொண்டேன். என்னுடைய கால்கள் சோர்ந்து என்னால் நிற்க இயலவில்லை. அப்படியே பூமியில் சாய்ந்து விட்டேன். நபி (ஸல்) இறந்து விட்டார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன்.” (ஸஹீஹுல் புகாரி)

அடக்கம் செய்ய ஏற்பாடுகள்

நபி (ஸல்) அவர்களை அடக்கம் செய்வதற்கு முன்னதாக முஸ்லிம்களின் காரியங்களை நிர்வகிக்கும் கலீஃபாவை நிர்ணயம் செய்வதில் மக்கள் ஈடுபட்டனர். பனூ சாம்தாவின் வீட்டு வராண்டாவில் இது தொடர்பாக நடந்த விவாதங்களுக்கும் கருத்து பரிமாற்றங்களுக்கும் பிறகு, முஹாஜிர்களும் அன்சாரிகளும் ஒரு மனதாக அபூபக்ரை கலீஃபாவாக நிர்ணயித்தனர். இந்த வேலையில் திங்கட்கிழமையின் பகல் முழுதும் முடிந்து இரவும் முழுமையாக முடிந்தது. அது வரை நபி (ஸல்) அவர்களின் புனித உடல் ஹிபரா போர்வையுடன் இருந்தது. நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார்கள் அறையை மூடி வைத்திருந்தனர். செவ்வாய் பகல் அன்று நபி (ஸல்) அவர்களின் ஆடையைக் களையாமல் அப்படியே குளிப்பாட்டினர்.

இப்பணியில் அப்பாஸ், அலீ, ஃபழ்ல் இப்னு அப்பாஸ், குஸம் இப்னு அப்பாஸ், நபி (ஸல்) அவர்களின் முன்னாள் அடிமை ஷுக்ரான், உஸாமா இப்னு ஜைத், அவ்ஸ் இப்னு கவ்லீ (ரழி) ஆகியோர் ஈடுபட்டனர்.

அப்பாஸ், ஃபழ்ல், குஸம் (ரழி) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் உடலைப் புரட்ட, உஸாமாவும் ஷுக்ரானும் நீர் ஊற்ற, அலீ (ரழி) குளிப்பாட்டினார்கள். அவ்ஸ் (ரழி) நபி (ஸல்) அவர்களை தனது நெஞ்சின் மீது சாய்த்திருந்தார்கள். (இப்னு மாஜா)

இவ்வாறே இலந்தை இலை கலந்த நீரால் மும்முறை குளிப்பாட்டினார்கள். நபி (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதற்காக ஸஅதுப்னு கைஸமாவுக்குச் சொந்தமான ‘கர்ஸ்’ என்ற கிணற்றிலிருந்து நீர் கொண்டு வரப்பட்டது. இந்நீரையே நபி (ஸல்) வாழ்நாளில் அருந்தி வந்தார்கள். (தபகாத் இப்னு ஸஅத்)

நபி (ஸல்) அவர்களை வெள்ளை நிற யமன் நாட்டு பருத்தி ஆடையினால் (கஃபன்) போர்த்தினார்கள். அதில் தைக்கப்பட்ட சட்டையோ தலைப்பாகையோ ஏதுமில்லை. (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

அடக்கம் செய்வது

நபி (ஸல்) அவர்களை எங்கு அடக்கம் செய்வது என்று கேள்வி எழுந்தது. அப்போது அபூபக்ர் (ரழி) “இறைத்தூதர்களின் உயிர் எங்கு பிரிகிறதோ அங்குதான் அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்” என்று நபி (ஸல்) கூற, நான் கேட்டிருக்கிறேன் என்றார்கள். உடனடியாக நபி (ஸல்) மரணித்த இடத்திலுள்ள விரிப்பை அகற்றி அங்கேயே அபூ தல்ஹா (ரழி) குழி தோண்டி அதில் பக்கவாட்டில் ஒரு குழி அமைத்தார்கள். மக்கள் பத்து பத்து பேர் கொண்ட கூட்டம், கூட்டமாக நபி (ஸல்) அவர்களின் அறைக்குள் சென்று தனித்தனியாக தொழுதார்கள்.

முதலில் நெருங்கிய குடும்பத்தார்களும், பின்பு முஹாஜிர்களும், அடுத்து அன்சாரிகளும், தொடர்ந்து சிறுவர்களும், பின்னர் பெண்களும் தொழுதனர். சிலர், “பெண்கள் முதலிலும் அடுத்து சிறுவர்களும் தொழுததாக அறிவிக்கின்றனர். (முவத்தா மாலிக், தபகாத் இப்னு ஸஅத்)

இதே நிலையில் செவ்வாயும் முழுமையாக கழிந்து புதன் இரவின் பெரும் பகுதி கழிந்தது. இதைப் பற்றி ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்:

“இரவின் நடுநிசியில் மண்வெட்டிகளின் சப்தத்தை வைத்தே நபி (ஸல்) அடக்கம் செய்யப்பட்டதை அறிந்து கொண்டோம்.”

இரவின் கடைசிப் பகுதியில் நல்லடக்கம் நடைபெற்றதாகவும் ஓர் அறிவிப்பு உள்ளது. (முஸ்னது அஹ்மது)


Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை