அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத்தரும் மவ்லிதுகள்


அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத்தரும் மவ்லிதுகள் 


கண்ணியமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன்திருமறையில்...
நபியே (முஹம்மதே!) உம்மை சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும்,எச்சரிக்கை செய்பவராகவும்,அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும், ஒளிவீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம்' (அல்குர்ஆன் 33:45,46)
அல்லாஹ்வின் இறுதித்தூதரான முஹம்மது(ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் யாரும் அடைந்திட முடியாத இடத்தை அடைந்திருக்கின்றார்கள். அவர்களுக்காக உயிரையே அர்ப்பணிக்கக் கோடானகோடி மக்கள் காத்திருக்கின்றனர்.ஆன்மீகத்தை வாழ்வின் சரியான அம்சமாக வாழ்ந்து காட்டியும்,அதை மனிதகுலத்துக்கு உணர்த்தியும் காட்டிய அழகான மாமனிதர் அண்ணலார் நபி(ஸல்) அவர்கள்! 
மானிட இனம் செல்லவேண்டிய சரியான திசையை இனங்காட்டியதில் அண்ணல் நபி(ஸல்) அவர்களைப்போன்று உலக வரலாற்றில் எவருமில்லை என்று அடித்துச் சொல்லலாம். 
இதுபோல் இன்னும் எத்தனையோ சீர்மிகு சிறப்புகளையும் மேன்மைகளையும் பெற்றிருக்கும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமான ரபீவுல் அவ்வல் வந்துவிட்டால் அதில் குறிப்பிட்ட சில தினங்களில் பெருமானார்(ஸல்) அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அவர்களை கண்ணியப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் காட்டித்தராத, கட்டளையிடாத காரியங்களையெல்லாம் வணக்கமாக நினைத்துச் செயல்படும் அவலநிலை முஸ்லிம் சமுதாயத்தில் நிலவிவருவதை நாம் பார்க்கின்றோம்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம் என்ற பெயரில் மவ்லிது என்ற அரபிப் பாடலைப் பாடுவதும், அதிலிருக்கும் வரம்புமீறிய கருத்துக்களைப் பற்றி கவலைப்படாமல் ராகமாகப் பாடி மகிழ்வதும், அண்ணலாரின் பிறந்தநாள்விழா என்று குறிப்பிட்ட பன்னிரெண்டு நாட்களிலும் மக்களிடம் காசு வசூலித்து பல பெரிய தேக்சா சட்டிகளில் சோறாக்கி கந்தூரி என்ற பெயரில் உணவு விழா கொண்டாடுவதையும் பார்க்கின்றோம்.
ஒன்றுக்கு மேற்பட்ட ஜமாஅத்துகள் உள்ள பல ஊர்களில் போட்டி மனப்பான்மையுடன் இரண்டு,மூன்று தேக்சாக்ளை அதிகப்படுத்தி சோறாக்கி வீண் பெருமையடிப்பதை காண்கின்றோம்.இதற்காக பல இலட்சம் ரூபாய்களில் பட்ஜெட் போட்டு செலவழித்து ஆக்கப்படும் சோறு போன்றவைகள் அறைகுறையாக சமைக்கப்பட்டு, அதை சரியான முறையில் மக்களுக்கு வினியோகிக்காமல் வீணாகக் கொட்டப்படுவதையும் பார்க்கின்றோம். இவற்றுக்காக செலவிடப்பட்டிருக்கும் பொருளாதாரமும், உழைப்பும் கணக்கில் அதிகமானவையே! இப்படித்தான் பெருமானார் நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிவிட்டு சென்றார்களா?! அல்லது வாழும்படிதான் கட்டளையிட்டார்களா?!
அதே அந்த முஸ்லிம் ஊர்களில் சுற்றுப்புற சுகாதாரம் மருந்துக்குக்கூட இருக்காது.சாக்கடை-சகதிகள், கொசுத்தொல்லைகள் என்று மக்கள் ஒருவித திணறலுக்கு தங்களை பழக்கப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வருவார்கள் இப்படிப்பட்ட சூழலை சீரமைக்க முஸ்லிம் ஜமாஅத்துகள் பொருளாதாரம் திரட்டவும்,உழைக்கவும் எந்தவொரு முயற்சியும் செய்திருக்க மாட்டார்கள்.
இப்படி வாழச்சொல்லித்தான் பெருமானார்(ஸல்) அவர்கள் போதித்துள்ளார்களா?!சத்தியத்தைப் பற்றிய தெளிவு, அசத்தியத்தைப் பற்றிய எச்சரிக்கை,ஆரோக்கியம் பற்றிய 
விழிப்புணர்வு, கல்வியின் முக்கியத்துவம் இவைகளெல்லாம் மக்களுக்கு சுவாசம் போன்ற தேவைகளாகும்.அதைப் பற்றியெல்லாம் கொஞ்சம்கூட அக்கறையில்லாத முஸ்லிம் ஜமாஅத்துகள் அட்ரஸ் இல்லாத மவ்லிதுகளுக்கும், கந்தூரிகளுக்கும் விழா எடுத்து அதற்கு இஸ்லாம் என்ற பெயரும் கொடுத்து தங்களின் பொன்னான உழைப்பையும், பொருளையும் வீணடிக்கின்றனர். இதுபோன்ற காரியங்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு பெருமை சேர்க்குமா?! எண்ணிப்பார்க்க வேண்டும் முஸ்லிம் சமுதாயமே!
வல்ல அல்லாஹ் தன் திருமறையில்...
வீண் விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன் பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)
மேலும், நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்... 
 நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.  அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம் 3243
இவ்வுலகில் மனிதன் ஒருவர்மீது அன்பு கொண்டுவிட்டால் அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரை வரம்புமீறி புகழ்வதும்,அதேபோல் புகழப்படும் மனிதர் சில நல்ல செயல்கள் செய்துவிட்டால் அவரை கடவுளின் அந்தஸ்திற்கு உயர்த்துவதும் நடைமுறையில் சர்வசாதாரணமாக ஆகிவிட்டது. இது எப்படிப்பட்ட விபரீதமான-அபாயகரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை மனிதர்கள் அவ்வளவாக உணர்வதில்லை.உண்மையான கடவுளின் அந்தஸ்தை உணராத காரணத்தினால்தான் கண்டதெல்லாம் கடவுள் என்ற அவலம் நிலவுவதைக் காணமுடிகிறது.
இறைவன் எப்போதும் இறைவன்தான். அவன் ஒருபோதும் மனித அந்தஸ்துக்கு இறங்குவது கிடையாது. மனிதன் எப்போதும் மனிதன்தான்.அவன் எவ்வளவு பெரிய காரியங்கள் செய்தாலும்,எத்தகைய சாதனைகள் புரிந்தாலும் ஒருபோதும் இறைவனின் அந்தஸ்துக்கு உயர்வது என்ன? நெருங்கக்கூட முடியாது.வேண்டுமானால் நல்லறங்கள் செய்து இறைவனின் அன்பைப் பெற்றவனாக ஆகலாமே தவிர மனிதன் ஒருபோதும் இறைவனாக முடியாது. இதை வலியுறுத்தும் விதமாகவே மாநபி(ஸல்) அவர்கள், மனிதர்கள் தங்களுக்குள் வரம்புமீறி புகழ்ந்துகொள்ளும் வாசலை அடைக்கின்றார்கள்.
''கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி 3445
நபி (ஸல்) அவர்கள் என்ன காரணத்திற்காக அஞ்சி, தம்மைப் புகழக் கூடாது என்றார்களோ அந்தக் காரணத்தை,புகழ்ச்சியில் வரம்பு மீறுதலை இந்தச் சமுதாயம் அப்படியே நிறைவேற்றுவதை நாம் பார்க்கின்றோம். 
தற்போது தமிழ்பேசும் முஸ்லிம்களிடம் பெரிய அபிமானத்தைப்பெற்ற மவ்லித் புத்தகங்கள் குர்ஆனுக்கும், இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிற்கும், நபி(ஸல்) அவர்களின் சொல்-செயல்களுக்கும் நேர்மாறானவை மற்றும் நேரடியாக மோதக்கூடியவையாகும். 
உதாரணமாக 'யாநபி பைத்' என்ற பாடல் தமிழகமெங்கும் பிரசித்திபெற்றது. 
அந்த பாடலின் துவக்கமே, ''யா நபி ஸலாம் அலைக்கும், யாரஸுல் ஸலாம் அலைக்கும்'' என்று மொட்டையாகவே வருகிறது.அந்த பாடலுக்குப் பெயரே யாநபி பாடல் என்றே கூறப்படும்.இந்த வரியைக் கவனியுங்கள்.  
அதில் ''யா நபியல்லாஹ்,யா ரஸுலுல்லாஹ்'' என்று  முறையாக இல்லாமல் குறையாக மரியாதை இல்லாமல், நபி(ஸல்) அவர்களுக்குச் சமமான அந்தஸ்து உடையவர்கள்  அவர்களை அழைப்பது போன்று உள்ளது.அத்தோடு மட்டுமல்லாமல் அதில் வரும் ஏழாவது அடியில் ''யாமுஹம்மத்''என்று நபியவர்களின் பெயரைச்  சொல்லி மிகவும் விகாரமாகவே மரியாதையில்லாமல்அழைக்கப்படுகிறது. அல்லாஹ் தன்னுடைய திருக்குர்ஆனில் நபி (ஸல்) அழைத்துக் கூப்பிடும் ஒழுங்கைப் பற்றிக் கூறுகையில், 
உங்களில் ஒருவர் மற்றவரை அழைப்பதைப் போல் இத்தூதரை அழைக்காதீர்கள்.  (அல்குர்ஆன் 24:63)
இந்த வசனம் இறங்கியதற்கான காரணத்தை அப்பாஸ்(ரலீ) அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள். ''அரபு மக்கள் 'யா முஹம்மத், யாஅபல் காசிம்' என்று கூறிக் கொண்டு இருந்தார்கள். அப்போது தான் நபியவர்களைக் கண்ணியத்தைப் பாதிக்கும் வகையில் அவ்வாறு கூறக் கூடாது என  அல்லாஹ் அவர்களைத் தடுக்கிறான்'' என கூறுகிறார்கள். இதை இமாம் இப்னு கஸீர் அவர்கள் தமது தப்ஸீரில் கூறுகிறார்கள்.
பகிரங்க இணை வைப்பு!
அல்லாஹ்விடம் மட்டுமே எல்லாப் பாவங்களுக்கும் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். வேறு யாரிமும் கேட்கக் கூடாது. அந்த ஏக வல்ல நாயன் அல்லாஹ்விடம் ஒரு நாள் ஒன்றுக்கு 100 தடவை நான் இஸ்திக்ஃபார் தேடுகிறேன்'' என்று கூறிய அந்த இறைத்தூதரிடத்திலேயே, ''கஃப்பிரூ அன்னீ துனூபீ வஃபு லீ அன் சய்யிஆ(த்)தீ'' (நீர் என் பாவங்களையும் குற்றங்களையும் மன்னித்திடுவீர். நீங்கள் நாசத்தை ஏற்படுத்தும் பாவங்களை மன்னிப்பவர்) என்று கூறும் வரிகளும் இந்தப் பாடலில் தான் இருக்கிறது
இது மட்டுமல்ல!இதுபோன்று ஏராளமான குப்பைகள் இந்த மவ்லித் புத்தகங்களில் மலிந்து காணப்படுகின்றன. இப்படிப்பட்ட பாடல்களை பாடுவதால் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிற்கும்,நபி(ஸல்) அவர்களின் போதனைகளுக்கும் மாறு செய்வதாக ஆகிவிடும். இதை தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் அனைத்தும் இஸ்லாத்தை கேலி செய்வதாக ஆகிவிடும். அதைத்தான் இன்றைய முஸ்லிம்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் புகழ்வதாகக் கூறி இயற்றப்பட்ட மவ்லிதுகள் புகழ் மாலைகளல்ல, பொய் மாலைகள் தான் என்பதையும் இவற்றை ஓதினால் சுவனம் கிடைக்காது, நரகம் தான் பரிசாகக் கிடைக்கும்.
அருளைப் பெற்றுத்தரும் ஸலவாத்!
அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேறு வாய்ப்பே இல்லையா?என்றால் நிச்சயமாக இருக்கின்றது. திருமறைக் குர்ஆனில்...
'நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன்:  3:31)
இந்த வசனத்தில், அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக்கூடிய ஸலவாத்தை ஓதவேண்டும். 
அல்லாஹ் தன் திருமறைக் குர்ஆனில்...
அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்! (அல்குர்ஆன் 33:56)
இந்த வசனத்தைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதருக்காக ஸலவாத், ஸலாம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது.இதற்காக நமது சொந்த வார்த்தைகளைக் கொண்டு புகழ் மாலை தொடுக்கும் போது நிச்சயமாக அது யூத,கிறித்தவர்கள் புகுந்த பாதையில் கொண்டு போய்ச் சேர்த்து விடும்.பாழாய்ப் போன ஷிர்க் என்னும் பெரும் பாவத்தில் நம்மைப் புதைத்து விடும். அதனால் தான் மேற்கண்ட வசனம் இறங்கியவுடன் நபித்தோழர்கள் ஸலவாத் சொல்வது எப்படி என்று நபி(ஸல்) அவர்களிடமே கேட்டு, கற்றுக் கொள்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ''அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்''என்று சொல்லுங்கள், என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி) நூல் : புகாரி 4797
ஒன்றுக்கு பத்து!.
யார் அல்லாஹ்விடம் என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆச் செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான்'' என்று அல்லாஹ்வின்    தூதர் நபி(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 577
நிச்சயமாக பூமியில் சுற்றித்திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) நூல்: நஸயீ 1265
ஆகவே அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத்தரும் மவ்லிதுகளை விட்டுவிட்டு அவனது அருளை அள்ளித்தரும் ஸலவாத்தைக் கூறுவோம். அளப்பரிய நன்மைகளை அடைவோம்.
puduvalasai.in

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை