இரத்தத் துளிகளில் வளர்ந்த ஏகத்துவக் கொள்கை



இரத்தத் துளிகளில் வளர்ந்த ஏகத்துவக் கொள்கை 


 
இப்போது உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஏகத்துவ இதழ் ஒரு பரேலவிஸ எதிர்ப்பு இதழ் என்றால் அது மிகப் பொருத்தமான ஒன்று தான். அந்த அளவுக்கு இந்த இதழில் பரேலவிஸத்திற்கு எதிரான கருத்துக்கள் பரவிக் கிடக்கின்றன. பரேலவிஸத்தைப் பற்றிய இந்தப் பார்வைக்குப் பொறியாக அமைந்தது சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களால் நடத்தப்படும் ஒரு மாத இதழ்
இந்த உலமாக்கள் அன்று இது போன்று பரேலவிஸத்திற்கு எதிராக போர்க்குரல் கொடுக்கவில்லை. போர்க்கொடி உயர்த்தவில்லை. மாறாக மத்ஹபுகள் கூடாது என்று நாம் சொன்னதற்காக இவர்களும், பரேலவிகளும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு, நமக்கு எதிராகக் கை கோர்த்துக் கொண்டு நம்மைப் பூண்டோடு களையெடுக்கக் களமிறங்கினர்.
தப்லீக் அணியில் முன்னணி வகித்த கலீல் அஹ்மத் கீரனூரியார் நமக்கு எதிராக போர் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார். பரேலவிஸத்தை எதிர்ப்பதை விட நம்மை எதிர்ப்பதில் தான் முனைப்புடன் செயல்பட்டார். தப்லீக்கும், பரேலவிஸமும் ஒன்றுக்கொன்று எதிரும் புதிருமானது. இப்படிப்பட்டவர்கள் நம்மை எதிர்ப்பதில், ஒழிப்பதில் ஓரணியில் நின்றனர் என்றால் இவர்களது வெறுப்பு எந்த அளவுக்கு ஆழமானது என்பதை நம்மால் உணர முடிகின்றது.
இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் கலீல் அஹ்மத் கீரானூரி நம்மை மேடையில் பிளந்தெடுத்தது போன்று பரேலவிகளைப் பிளந்தெடுக்க வேண்டாம். கொஞ்சம் பிடித்தாவது விடலாம். அப்படிக் கூடச் செய்யவில்லை. ஆனால் நம்மை வாட்டி வறுத்தெடுக்க வகை வகையான கூட்டங்கள், மாநாடுகள்!
அரைக்க் அரக்க சந்தனம் மணக்கும்! தீட்டத் தீட்ட வைரம் மிளிரும் என்பது போல் இவர்கள் நம்மைத் திட்டத் திட்ட இறையருளால் நாம் வளர்ந்து கொண்டு தான் இருக்கறோம். அல்ஹம்துலில்லாஹ்!
இன்று இஸ்லாமிய மாநாடுகள் என்றால் அது ஏகத்துவ மாநாடுகள் என்றாகி விட்டன. இவர்களது மாநாடுகளே பள்ளிவாசலின் வளாகங்களில் தான் நடக்கின்றன. இது தமிழகத்தில் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கும் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஆகும்.
மதுரை ஷரீஅத் மாநாடு
இப்படி நம்மைத் திட்டித் தீர்ப்பதற்காகக் கூட்டிய மாநாடுகளில் நம்மால் மறக்க முடியாத மாநாடு மதுரையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஷரீஅத் மாநாடு.
1991ம் ஆண்டு, ஜூலை மாதம் 6, 7 ஆகிய திகதிகளில் இம்மாநாடு நடைபெற்றது.
அம்மாநாட்டின் தலைமைப் பேச்சாளர் கலீல் அஹ்மத் கீரானூரி, தலைப்பு, 'தராவிஹ் 20 ரக்அத்கள்.'
அப்போது அவர் பேசிய வெறிப் பேச்சை இப்போது கொஞ்சம் ஒலிபரப்புகிறோம்.
மூலையிலே வண்ணார் பள்ளியிலே (இன்றைய மஸ்ஜிதுல் முபாரக்) ஒளிந்து இருந்து கொண்டு நீ எங்களைப் பார்த்துப் பேசுகிறாயா? 'ஷரீஅத் மாநாடு எதற்காக? மதுவை ஒழிக்கவா? விபச்சாரத்தைத் தடுக்கவா? வரதட்சணையைக் கண்டிக்கவா? சாராயக் கடைகளை மூடுவதற்காகவா?' என்றெல்லாம் கேட்டிருக்கிறாயா! இதைக் கேட்பதற்கு உனக்கு என்ன அருகதை இருக்கின்றது. நீ முதலில் இதையெல்லாம் செய்! அப்புறம் எங்களைப் பார்த்துக் கேள் நீ!
கப்ரு அனாச்சாரத்தை நாங்கள் போய் தடுக்க வேண்டுமாம்! இவர் (பி.ஜே.) ஒரு சந்திலே ஒதுங்கியிருந்து வெளியே வராமல் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருப்பாராம்.. ஏன்? நீ போய் தடுக்க வேண்டியது தானே! எப்போதாவது தடுத்திருக்கின்றாயா? தடுக்க முயன்று இருக்கின்றாயா? அப்போது நீ வெட்டப்பட்டாயா? யாரிடம் வந்து கதை சொல்கின்றாயா?
இது கீரனூரியார் மதுரை தமுக்கம் மைதானத்தில் நின்று கொண்டு பி.ஜே.வை நோக்கிப் பேசிய பேச்சாகும். பேசுகின்ற நாள் 07.07.1991 பேசுகின்ற நேரம் இரவு சுமார் 10 மணி.
தமுக்கம் மைதானத்தில் கீரானூரியார் இவ்வாறு கொதித்தெழுந்து, கொந்தளித்து, நெருப்பு வார்த்தைகளைக் கக்கிக் கொண்டிருந்த அதே வேளையில்...
மேலப்பாளையத்தில் மோத்தை மீறாப்பிள்ளை தெருவில் சிப்கத்துல்லாஹ் என்பவரது வீட்டு வாசலில், 'கர்பலா' என்ற தலைப்பில் பரேலவிஸத்தை எதிர்த்து பி.ஜே. உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.
முதலில் தெருவில் தான் மேடை அமைக்கப்பட்டது. மழைக்காலம்! அதனால் தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஒலிபெருக்கி உரிமையாளர் வந்து 'மைக் மழையில் நனையும், அதனால் வீட்டு வாசலில் மைக்கை வைப்போம்' என்று சொல்லவே நடுத் தெருவில் நின்ற மைக் வீட்டு வாசலுக்கு வருகின்றது.
ஆதனால் வீதியில் நின்ற பி.ஜே. வீட்டு வாசலுக்கு வருகின்றார். வீடு கிழக்குத் திசையில் மேற்கு நோக்கி அமைந்திருந்தது. அதனால் கிழக்கிரிருந்து மேற்கு நோக்கி நின்று பேசிக் கொண்டிருந்தார். மழை தூறிக் கொண்டிருந்ததால் வீட்டு வாசலுக்கு முன்னால் யாரும் அமரவில்லை.
எதிர் வீடுகளில் உள்ள திண்ணைகளில் தான் ஆட்கள் உட்கார்ந்து பேச்சை கேட்டுக் கொண்டிருந்தனர். எதிர் வீட்டுத் திண்ணையில் உள்ளவர்கள் மட்டும் பி.ஜேஇவைப் பார்க்க முடிந்தது. தெற்கு வடக்குப் பக்கம் உள்ளவர்களால் அவரைப் பார்க்க முடியவில்லை.
அவர் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு ஆள் சென்று வரும் இடைவெளி இருந்தது. அப்போது நான் வாசலுக்கு முன்னால் உள்ள ஒரு சிறிய திண்டில் வடக்கு நோக்கி அமர்ந்திருந்தேன்.
எதிர் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தவர்கள், கடுமையான குளிர் என்பதால் அரைத் தூக்கத்தில் அமர்ந்திருந்தனர். இந்நேரத்தில் வடக்கில் உள்ள ஒரு சந்திலிருந்து ஒருவர், ஒரு கையில்லாதவர் தோளில் துண்டு போட்டுக் கொண்டு வருவது போல் வந்தார்.
வித்தியாசமான அவரை சற்று வியப்புடன் நான் உற்று நோக்கிப் கொண்டிருக்கும் வேளையில் ஒரு நொடிப் பொழுதில் வீட்டு வாசலுக்கு வந்து, ஒரு வீச்சரிவாளை எடுத்து பி.ஜே.யின் கையில் வீசுகின்றார். அதே வேளையில் எனக்கு அருகில் நின்ற இன்னொருவர் மற்றொரு அரிவாளைத் திருப்பிப் பிடித்து என் இடது கையை தாக்குகின்றார். இவ்வாறு அவர் என்னை தாக்குவதற்குக் காரணம், பி.ஜே.வை வெட்ட வந்த முதலாமவரை நான் தடுத்து விடக் கூடாது என்பதற்காகத் தான். அரிவாளின் மறுபக்கத்தால் என் கையை தாக்கியதால் என் கை வீக்கத்தில் அப்படியே உப்பி விடுகின்றது.
பி.ஜே.யின் இடது கையில் வெட்டிய பிறகு, அவரது கழுத்தை நோக்கி மீண்டும் அரிவாளை வீசுகின்ற போது, பி.ஜே. தன் வலது கையால் மைக்கின் கம்பியைத் தூக்கி தடுக்கின்றார். மைக் ஸ்டாண்டின் மீது அரிவாள் பட்டவுடன் ஒரு சப்தம் எழுகிறது.
அப்போத தான் அதுவரை என்ன நடக்கின்றது என்பதை அறியாதவர்கள், அரைத் தூக்கத்தில் இருந்தவர்கள் சுதாரித்துக் கொண்டு வருவதற்குள்ளாக வந்த இருவரும் ஓட்டமெடுக்கிறார்கள். ஒரு சிலர் அவர்களைத் துரத்திக் கொண்டு பின் தொடர்ந்து ஓடுகின்றார்கள். ஆனால், அவர்கள் தப்பி விடுகின்றார்கள்.
அல்லாஹ் ஒருவரைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து விட்டால் அதை யார் தடுக்க முடியும்? தெருவின் மத்தியில் போட்ட மேடையில் பேசவிருந்த பி.ஜே. தூறல் விழுந்த காரணத்தால் வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டு உரையாறிறனார். அது தான் அவருக்குப் பாதுகாப்பானது. அதாவது வெட்டுக் கையுடன் நின்றது. அரிவாளை கழுத்தை நோக்கி லாவகமாக வீசுவதற்கு வழியில்லாமல் அந்த இடம் குறுகிய இடமாக அமைந்து விட்டது. அதனால் வந்தவர்கள் சாதிக்க முடியாமல் போனது. ஆனால் அவர் தெருவில் நின்று கொண்டு பேசியிருந்தால் வந்தவர்கள் கனகச்சிதமாக தலையைக் கையோடு கொண்டு சென்றிருப்பார்கள். அல்லாஹ்வின் அற்புதக் காவல், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது போல், கழுத்துக்கு வந்தது கையோடு போனது.
கையில் இரத்தம் பீறிட்டவாறு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பி.ஜே. அனுமதிக்கப்படுகின்றார். மரத்துப் போவதற்காக ஊசிகள் ஒன்றுக்கு இரண்டு போட்டும் காயத்தின் ஆழம் காரணமாக வேதனையில் அவர் விடிய விடியத் தூங்கவில்லை.
இந்தக் கொலை முயற்சி பற்றி காவல்துறையில் நான் புகார் தெரிவித்தேன். முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஆள் தான் பிடிபடவில்லை. நான் சாட்சி சொல்லி விடக் கூடாது என்பதற்காக எனக்கு ஒரு மொட்டைக் கடிதமும் வந்தது. அதில், 'உலகத்தில் நீ எந்தப் பகுதியில் இருந்தாலும் உன்னை வெட்டாமல் விட மாட்டேன்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே பி.ஜே.யும் சிகிச்சை முடிந்து தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஆனால் குற்றவாளிகள் பிடிபடவில்லை. பரேலவிகளின் செல்வாக்கு! பலமான பின்னணி!
இந்தக் கொலை வெறித் தாக்குதலின் இயக்குனராகச் செயல்பட்டவர் அடுத்த ஆண்டு அதே ஜூலை 7ம் திகதி அவரது எதிர் கோஷ்டியினரால் கொல்லப்பட்டார்.
இதை இங்கே குறிப்படக் காரணம், பரேலவிஸத்தின் வேகத்தையும் வீரியத்தையும் அதன் விஷத் தன்மையையும் விவரிப்பதற்காகத்தான்.
அந்தப் பரேலவிஸம், அதன் ஆதரவாளர்கள் மேலப்பாளையத்தில் பி.ஜே.யைக் கொன்று தீர்த்து விட வேண்டும் என்று கொடுவாளைத் தூக்கி வீசும் போது தான் கீரனூரியார் தமுக்கம் மைதானத்தில், 
வெட்டப்பட்டாயா? கொல்லப்பட்டாயா?... என்ற வசனங்களைப் பேசிக் கொண்டிருந்தார்.
அவர் கேட்டது போல் கப்ரு அனாச்சாரங்களை எதிர்த்து வெறும் சத்தம் மட்டும் போடாமல் இரத்தமும் சிந்திக் கொண்டிருந்தார்.
இதுபோன்று இந்த ஏகத்துவத்தல் இணைந்த எத்தனையோ சகோதரர்கள் இரத்தம் சிந்திக் கொண்டும், பொருள் இழப்பைச் சந்தித்துக் கொண்டும் இருக்கின்றனர். இந்தப் பரேலவிஸ எதிர்ப்புப் போராட்டத்தல் சிறைவாசம் அனுபவித்தவர்கள், ஊர் நீக்கம் செய்யப்பட்டவர்கள், காவல்துறையின் சித்ரவதைக்கு ஆளானவர்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அல்லாஹ்வின் பள்ளிவாசலில் கூட இதுவரை, இன்று வரை எத்தனையோ ஊர்களில் ஏகத்துவ சகோதரர்கள் தடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பவர்கள் கலீல் அஹ்மத் கீரனூரி போன்றவர்கள் தான்.
மேலப்பாளயத்தில் பி.ஜே. வெட்டப்பட்ட பிறகு தான் நமது ஜமாஅத்திற்கென்று தனிப் பள்ளிவாசல் மஸ்ஜிதுர்ரஹ்மான் என்ற பெயரில் கண்டோம். இன்று அந்த தவ்ஹீத் ஜமாஅத்தினர் பெருநாள் தொழுகை நடத்தும் போது சாதாரணமாக 10,000 பேர் கலந்து கொள்கின்றார்கள். 2,000 பெண்கள் கலந்து கொள்கின்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்! திருநெல்வேலி மாவட்டத்திலேயே அதிகமான ஆண்களும் பெண்களும் பங்கெடுக்கும் பெருநாள் தொழுகை இது தான் என்று பத்திரிக்கைகள் வர்ணிக்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. அதுபோல் நமது பிரச்சாரக் கூட்டங்களிலும் மக்கள் வெள்ளம் நிரம்பி வழிகின்றது.
அன்று திடலில் நின்று பேசிய கீரனூரி போன்றோர் இன்று பள்ளி வாசல் வளாகத்திற்குள் மட்டும் பேசி விட்டுச் செல்லும் நிலை! ஆனால் இன்னும், இன்றும் இந்த ஊரில் பரேலவிஸத்தை எதிர்த்துப் பேசவில்லை. இவ்வாறு நாம் குறிப்பிட்டுக் கூறுவதற்கான காரணம், இங்க அவரை வைத்துக் கூட்டம் நடத்துபவர்கள் பக்கா பரேலவிகள், முரீது ஏஜெண்டுகள்.
பரேலவிஸத்தை எதிர்த்து நடக்கும் இந்த யுத்தத்தில் இப்போதாவது இவர்கள் மூச்சு விட ஆரம்பித்துள்ளார்களே! அதற்காக நாம் இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.
எம். ஷம்சுல்லுஹா

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை