ஜமாஅதே இஸ்லாமி பற்றி தங்கள் கருத்து என்ன?

ஜமாஅதே இஸ்லாமி பற்றி தங்கள் கருத்து என்ன? தாங்கள் தான் சரியான வழியில் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு இயக்கத்தினரும் தாங்கள் தான் சரியான வழியில் இருப்பதாகத் தான் சொல்வார்கள். அப்படிச் சொல்லாவிட்டால் அந்த இயக்கம் செத்து விடும்.
ஆனால் நேர்வழியில் இருப்பதாக ஒரு இயக்கம் சொல்லிக் கொள்வதால் மட்டும் அது நேர்வழியில் இருப்பதாக ஆகாது. குர்ஆனுக்கும் நபிவழிக்கும் உட்பட்டும் குர்ஆன் ஹதீஸுடன் மோதாமலும் அதன் கொள்கை கோட்பாடுகள் அமைந்திருந்தால் மட்டுமே அது நேர்வழியில் இருப்பதாக ஆகும்.
அபுல் அஃலா மவ்தூதி என்பவர் ஜமாஅத்தே இஸ்லாமீ இயக்கத்தை நிறுவினார். இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்பதே இந்த அமைப்பின் அடிப்படைக் கொள்கையாக இருந்தது.
ஆனால் இன்றைக்கு இந்தக் கொள்கை இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களால் பரப்பப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.  தற்போது எந்தக் கொள்கையும் இல்லாமல் குருட்டுப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர்.
குர்ஆனையும், நபிவழியையும் கடைப்பிடிக்குமாறு நாம் கூறி வருகிறோம். ஆனால் இவர்கள் பல இடங்களில் இந்த விஷயத்தில் வளைந்து கொடுக்க வேண்டும் என்று குர்ஆன் நபிமொழிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யத் துணிந்துள்ளார்கள்.
குர்ஆன் ஹதீஸ் கூறும் நல்ல விஷயங்களை எடுத்துரைப்பது இவர்களின் நோக்கமல்ல. மக்களிடம் உள்ள எந்தப் பாவங்களை குர்ஆனும் ஹதீஸ்களும் கண்டிக்கின்றனவோ அந்த பாவங்களைப் பற்றி இவர்கள் பேசமாட்டார்கள். அவற்றின் அபாயங்களை விளக்கி மக்களை எச்சரிக்க மாட்டார்கள். ஆனால் நம்மைப் போல் எச்சரிப்பவர்களை விமர்சனம் செய்யச் சளைக்க மாட்டார்கள்.
உதாரணமாக தர்ஹா வழிபாடுகள், பித்அத்கள், மத்ஹப், அனாச்சாரங்கள் ஆகியவை தவறு என்று தெரிந்தும் இவற்றைப் பற்றி மக்களிடம் பேச மாட்டார்கள். மத்ஹப்களில் ஏதாவது ஒரு மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என்று இவர்களுடைய அமைப்பினர் நிறுவனர் மௌதூதி கூறியுள்ளார்.
சுருங்கச் சொல்வதென்றால் மக்கள் எந்தக் கொள்கையில் இருக்கிறார்களோ அதுவே இவர்களின் கொள்கை. மக்கள் எதை வெறுக்கின்றார்களோ அதை இவர்களும் வெறுப்பார்கள். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதை இவர்களும் விரும்புவார்கள்.
மார்க்கத்தை நிலைநாட்டுங்கள் என்று கூறும் திருக்குர்ஆன் வசனத்தைக் சொல்லி மக்களை மாநாட்டிற்கு அழைப்பார்கள். ஆனால் மார்க்கத்தைப் புறக்கணிப்பவர்களில் இவர்களே முன்னோடியாகத் திகழ்வார்கள்.
இஸ்லாமிய ஆட்சியைக் கொண்டு வருவதற்காக இறைத் தூதர்கள் அனுப்பப்படவில்லை. இது இறைவனின் நோக்கமும் அல்ல. ஏகத்துவக் கொள்கையைப் போதிப்பதற்காகவும் அல்லாஹ் கூறிய அடிப்படையில் மக்களை வாழ வைப்பதற்காகவுமே இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டனர்.
وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنْ اُعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ فَمِنْهُمْ مَنْ هَدَى اللَّهُ وَمِنْهُمْ مَنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلَالَةُ فَسِيرُوا فِي الْأَرْضِ فَانْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِينَ(36)16
"அல்லாஹ்வை வணங்குங்கள்! தீய சக்திகளை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!'' என்று ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒரு தூதரை அனுப்பினோம்.
அல்குர்ஆன் (16 : 36)
அல்லாஹ் மனிதர்களாகிய நம்மைப் படைத்ததே அவனுக்குக் கட்டுப்பட்டு அவன் கூறியவாறு வாழ வேண்டும் என்பதற்காகத் தான்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِي(56)51
ஜின்னையும்மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.
அல்குர்ஆன் (51 : 56)
இவ்வாறு இஸ்லாத்தை ஏகத்துவக் கொள்கையை உறுதியாகப் பிரச்சாரம் செய்யும் போது அது அதிகமான மக்களை ஈர்த்து பெரும்பான்மையாக மாறினால் அப்போது ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்படலாம். மக்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் இஸ்லாமிய ஆட்சி அமையாது.
நபிமார்களீல் மிகச் சிலர் தான் உலகில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தனர். பல நபிமார்கள் உலகில் வெற்றி பெறவில்லை. ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் என்ற கணக்கில் கூட நபிமார்களை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்துள்ளது. சில நபிமார்கள் கொலை செய்யப்பட்டும் உள்ளனர். எனவே இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது இஸ்லாத்தின் கொள்கையாக ஒரு காலத்திலும் இருந்ததில்லை.
இந்த நச்சுக்கருத்து காரிஜிய்யாகளின் கொள்கையாக இருந்த்து. அதனால் முஸ்லிம்களே முஸ்லிம்களை வெட்டிக் கொலை செய்யும் நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் ஆயிரம் ஆண்டுகளாக இந்த நச்சுக் கருத்து தலை எடுக்காததால் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் தம்மைத் தாமே வெட்டிக் கொலை செய்யும் நிலை ஏற்படவில்லை.
 செத்துப் போன இந்தக் கொள்கையை இக்வானுல் முஸ்லிமீன் இயக்கமும் மவ்தூதியும் மறு உயிர் கொடுத்த பிறகு தான் இஸ்லாமிய ஆட்சி அமைப்பதாகச் சொல்லிக் கொண்டு முஸ்லிம்களே முஸ்லிம்களைக் கொலை செய்யும் முஸீபத் மீண்டும் தலை எடுத்தது.
இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்தப் புறப்பட்டுள்ள இவர்கள் சொல்வது சரியான கருத்து என்றே வைத்துக் கொள்வோம். ஆட்சி அமையும் வரை இஸ்லாத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் அல்லவா? ஆட்சி தான் இலட்சியம் என்று ஆன பின் அதற்கான ஆதராவைப் பெருக்கிக் கொள்வதற்காக வளைந்து கொடுப்பது மட்டுமே இவர்களின் ஒரே கொள்கையாகிப் போனது.
இஸ்லாமிய ஆட்சி இல்லாத போதும் நமது சக்திக்கு உட்பட்ட எத்தனையோ விஷயங்களை அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறிய அடிப்படையில் அமைத்துக் கொள்ள முடியும். இஸ்லாமிய ஆட்சி இருந்தால் தான் அல்லாஹ்வை வணங்க முடியும் என்ற நிலை தற்போது இல்லை.
தன் சக்திக்கு உட்பட்டு அல்லாஹ்வை முறைப்படி வணங்குவதற்கு வாய்ப்பிருந்தும் அந்த வாய்ப்பை ஜமாஅத்தே இஸ்லாமீ இயக்கத்தினர் பயன்படுத்துவதில்லை.
பெயரளவில் முஸ்லிம்களாக இருப்பவர்களை உண்மை முஸ்லிம்களாக மாற்ற முயற்சிப்பதில்லை.
இந்நிலையில்  இஸ்லாமிய ஆட்சியை இவர்கள் கொண்டு வரப் போகிறார்களாம்.
இப்படிப்பட்ட கொள்கையற்ற கூட்டத்தால் உருவாக்கப்படும் இஸ்லாமிய ஆட்சி எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை நாம் யோசிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.
குர்ஆன் ஹதீஸில் சொல்லப்படும் அனைத்தையும் வளைந்து கொடுக்காமல் வீரியமாக யார் பிரச்சாரம் செய்து அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றார்களோ அவர்களாலேயே உண்மையான இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த முடியும்.
وَلَقَدْ كَتَبْنَا فِي الزَّبُورِ مِنْ بَعْدِ الذِّكْرِ أَنَّ الْأَرْضَ يَرِثُهَا عِبَادِي الصَّالِحُونَ(105)21
ஸபூர் வேதத்தில் அறிவுரைக்குப் பின் "பூமியை எனது நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள்'' என்று எழுதியிருந்தோம்.
அல்குர்ஆன் (21 : 105)
ஏகத்துவக் கொள்கை உள்ளவர்களால் மட்டுமே இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த முடியும் என்று அல்லாஹ் கூறுகிறான்.
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُم  فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمْ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ  مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُوْلَئِكَ هُمْ الْفَاسِقُونَ(55)24
அவர்களுக்கு முன் சென்றோருக்கு அதிகாரம் வழங்கியதைப் போல் அவர்களுக்கும் பூமியில் அதிகாரம் வழங்குவதாகவும்,அவர்களுக்காக அவன் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை உறுதிப்படுத்தி வைப்பதாகவும்அவர்களின் அச்சத்திற்குப் பின்னர் அச்சமின்மையை ஏற்படுத்துவதாகவும் உங்களில் நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவர்கள் என்னையே வணங்குவார்கள். எனக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டார்கள். இதன் பிறகு (ஏக இறைவனை) மறுத்தோரே குற்றம் புரிபவர்கள்.
அல்குர்ஆன் (24 : 55)
நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவக் கொள்கையை வீரியத்துடன் மக்களுக்குப் போதனை செய்தார்கள். குர்ஆனுக்குக் கட்டுப்பட்டு வாழும் உண்ணதமிக்க சமுதாயத்தை உருவாக்கினார்கள். இதன் விளைவாக மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணைந்தனர். தானாக இஸ்லாமிய ஆட்சி அமைந்தது
நபி (ஸல்) அவர்கள் சென்ற அதே வழியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்றுகொண்டிருக்கின்றது. இந்த பாதையில் வீரியத்துடன் முழு முயற்சியையும் செலுத்தி பாடுபடும் போது இறைவன் நாடினால் இஸ்லாமிய ஆட்சி அமையும்.
இந்த வழியை விட்டுவிட்டு இஸ்லாமிய ஆட்சி வேண்டும் என்று வெறுமனே கூக்குரல் இட்டுக்கொண்டிருந்தால் கண்டிப்பாக இஸ்லாமிய ஆட்சி அமையாது. சமுதாயம் சீரழிந்து நாசமாகி விடும். இந்த தவறான பாதையிலே ஜமாஅத்தே இஸ்லாமீ பயணித்துக்கொண்டிருக்கின்றது.
 இது குறித்து முன்னர் வெளியிடப்பட்ட இந்த பதிலையும் பார்க்கவும் இந்த கட்டுரையையும் பார்க்கவும்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை