பாக்கியாத் உலமாக்களுக்குப் பகிரங்க அழைப்பு



பாக்கியாத் உலமாக்களுக்குப் பகிரங்க அழைப்பு 



8.5.2005 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக வேலூரில் ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பொதுக் கூட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு வேலூர் பாக்கியாத் மதரஸா மிகவும் முயன்றது. அதன் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து, அல்லாஹ்வின் மகத்தான அருளால் குறிப்பிட்ட தேதியில் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் திரண்டு வந்து சத்திய மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்டுப் பயனடைந்தனர்.
இந்தப் பொதுக் கூட்டத்தில் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பேசும் போது, "மார்க்க அறிஞர்களைத் தயார் செய்து தமிழகத்துக்கே வழங்கும் சிறப்பு பெற்றது வேலூர். மிகச் சிறந்த உலமாக்கள் இவ்வூரில் நிறைந்துள்ளனர். இத்தகைய உலமாக்கள் நிறைந்த இவ்வூரில் நான் அறைகூவல் விடுகின்றேன். மத்ஹபுகள் இஸ்லாத்திற்கு விரோதமானவை. மத்ஹபு நூற்களில் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணான சட்டங்களும் உளறல்களும் மலிந்து காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இப்போது பட்டியலிடுகின்றேன்'' என்று குறிப்பிட்டார். மேலும் மத்ஹபு நூற்களில் உள்ள அபத்தங்களில் சிலவற்றையும் அரபு மூலத்துடன் பாகம், பக்கத்துடன் வாசித்துக் காட்டி, இதைச் சரியென நிரூபிக்க இயலுமா? என்று சவால் விட்டார்.
நான் கூறியது தவறு என்றால் பாக்கியாத் உலமாக்களோ, வேறு எந்த உலமாக்களோ பகிரங்கமான விவாதத்துக்கு முன் வரட்டும் என்றும் அறைகூவல் விட்டார்.
விவாதத்திற்கான பி.ஜே.யின் இந்த அழைப்பை ஏற்று, தாங்கள் போற்றி மதிக்கும் மத்ஹபுகளைச் சரி என்று நிரூபிக்க வேண்டியது உலமாக்களின் கடமையாகும். ஆனால் அவர்களோ, "பி.ஜே. பொய் சொல்கின்றார். அவரை நம்பாதீர்கள். பலமுறை விவாதத்திற்கு அழைத்தும் அவர் வர மறுக்கின்றார்'' என்று உள்ளூர் பிரமுகர்களைத் தேடிச் சென்று சமாதானப்படுத்த முயன்றனர்.
அவ்வாறு அவர்கள் சந்தித்த பிரமுகர்களில் முனவ்வர் என்ற சகோதரரும் ஒருவர். அவர் உண்மையை அறிய விரும்பி, பி.ஜே.யைத் தொடர்பு கொண்டு விபரம் கேட்டார். உடனே முனவ்வர் அவர்களுக்கு பி.ஜே. ஒரு கடிதம் எழுதுகின்றார்.
அந்தக் கடிதத்தில்...
பாக்கியாத் உலமாக்கள் என்னை விவாதத்திற்குப் பல முறை அழைத்ததாகவும், நான் அதை ஏற்காமல் பின்வாங்கி விட்டதாகவும் பிரச்சாரம் செய்கின்றனர். அது உண்மையா? என்று கேட்டீர்கள்.
பாக்கியாத் உலமாக்களோ, ஜமாஅத்துல் உலமா சபையினரோ, தப்லீக் ஜமாஅத்தினரோ என்னை விவாதத்திற்கு ஒரு காலத்திலும் அழைத்ததில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தர்கா வழிபா, மத்ஹபுகள், கத்தம் பாத்திஹாக்கள் போன்ற பித்அத்கள், தரீக்காக்கள் உள்ளிட்ட எந்தப் பிரச்சனை பற்றியும் குர்ஆன் மற்றும் மற்றும் நபி வழியின் அடிப்படையில் விவாதம் நடத்த நான் தயார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாக்கியத் உலமாக்களிடம் இந்தக் கடிதத்தின் நகலைக் காட்டி அவர்கள் விவாதத்திற்குத் தயாரா? என்று கேட்டு எனக்குத் தகவல் தரவும்....
என்று பி.ஜே. குறிப்பிட்டிருந்தார்.
தவ்ஹீத் ஜமாஅத்துக்கும், உலமா சபையினருக்கும் இடையேயுள்ள கருத்து வேறுபாடுகளில் முதன்மையாக உள்ளது மத்ஹபு தான். வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பி.ஜே. பேசும் போதும், மத்ஹபுகள் குறித்து பேசிய கருத்துக்கள் தான் உலமாக்களின் கோபத்திற்குக் காரணமாக அமைந்தது.
விவாதத்திற்கு ஒப்புக் கொண்டு நாம் கடிதம் கொடுத்தும் பாக்கியாத் அதைக் கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டது. ஆனால் பொது மக்கள் விடுவதாக இல்லை. வேலூர் மக்களின் நச்சரிப்பு தாங்காமல் இரண்டு மாதங்கள் கழித்து 12.07.05 அன்று பாக்கியாத் அரபிக் கல்லூரியின் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஹய்அத்தின் சார்பில் தவ்ஹீத் ஜமாஅத்துடன் விவாதத்திற்கு ஏற்பாடு செய்வது. பி.ஜே. விவாதத்திற்கு வந்தால் பாக்கியாத் சார்பாக மவ்லானா மஹ்மூதுல் ஹஸன், மவ்லான இக்பால் காசிமி ஆகிய இருவருடன் ஹய்அத் விரும்பும் ஆலிம்களைச் சேர்த்துக் கொள்வது. இது சம்பந்தமாக ஹாஜி முனவ்வர் பாஷாவுடன் பேசி இதற்கான ஏற்பாடுகளைச் செய்வது.
என தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
பொது மேடையில் பி.ஜே. விவாதத்திற்கு சவால் விட்டிருந்தும், அதை 10.05.05 அன்று எழுதிய கடிதத்தில் பி.ஜே. உறுதி செய்திருந்தும், "பி.ஜே. வந்தால் நாம் விவாதம் செய்வது'' என்று பாக்கியாத் வேண்டா வெறுப்பாக முடிவு செய்தது.
பொதுக் கூட்டத்தில் பி.ஜே. கூறிய மத்ஹபுகள் பற்றிய குற்றச்சாட்டு களுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல்
அஹ்லு சுன்னத்தும் தக்லீதும்
குர்ஆன் ஹதீஸ் இருந்த போதும் இஜ்மா கியாஸ் அவசியம் என்ன?
கொள்கைக் குழப்பங்களும் தெளிவுகளும்
என்ற தலைப்புகளில் கே.ஏ. நிஜாமுத்தீன், முஹம்மத் இக்பால் காசிமி, கலீல் அஹ்மத் கீரனூரி ஆகியோரைக் கொண்டு மத்ஹபுகளை நியாயப்படுத்திப் பேசுவதற்கும் அதே கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதுவெல்லாம் எதைக் காட்டுகிறது? நமக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனை மத்ஹபு தான் என்பதற்கு இது சான்றல்லவா!
இதைத் தொடர்ந்து வேலூர் ஆலிம்கள், இமாம்கள், முத்தவல்லிகள் ஆகியோரின் அவசர ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. அதற்கான அழைப்பிதழ் 12.07.05 அன்று அனுப்பப்பட்டது.
உருது மொழியில் அனுப்பப்பட்ட அந்த அழைப்பிதழில்...
கடந்த சில தினங்களுக்கு முன்பாக நம்முடைய ஊர் வேலூரில் அஹ்லெ சுன்னத் வல்ஜமாஅத்தின் அடிப்படையான கொள்கைகளையும் ஃபிக்ஹ் மஸாயில்களையும் எடுத்துக் கொண்டு சில தவறான ஜமாஅத்தார்கள் குர்ஆன், ஹதீஸ் என்ற பெயரில் இளைஞர்களை மூளைச் சலவை செய்ய அதிக முயற்சி செய்து வருகின்றனர்.
சங்கை மிகு ஸஹாபாக்களையும், மேன்மை மிக்க உலமாக்களையும் பிரபலமான பிக்ஹ் நூல்களையும் உண்மை மற்றும் பொய்யான விஷயங்களைக் கற்பனையாகத் திரித்துக் கூறுவது அவர்களுடைய பிரியத்திற்குரிய வேலையாக உள்ளது. பல இடங்களில் இவர்களது பிரச்சாரத்தின் மூலம் சண்டை சச்சரவை ஏற்படுத்தி இருக்கிறார்கள்....
என்று குறிப்பிட்டு அது தொடர்பாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அந்த அழைப்பிதழில் கூறப்பட்டிருந்தது.
பிக்ஹ் மஸாயில்களை எடுத்துக் கொண்டு குழப்பம் செய்கிறார்கள்; பிரபலமான பிக்ஹ் நூல்களைப் பற்றி உண்மை மற்றும் பொய்யான விஷயங்களைக் கற்பனையாகத் திரித்துக் கூறுவதன் மூலம் சண்டை சச்சரவை ஏற்படுத்தி வருகின்றார்கள் என்றெல்லாம் நம்மைப் பற்றிக் குறிப்பிட்டு ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்தது ஏன்?
நமக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனையே மத்ஹபு தான் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.
12.07.05 அன்று பாக்கியாத் ஆலோசனைக் கூட்டம்
16.07.05 அன்று ஆலிம்கள், இமாம்கள், முத்தவல்லிகள் ஆலோசனைக் கூட்டம்
21.07.05 அன்று ஹய்அத்து ஷரீஆ மற்றும் விஷேச அழைப்பாளர்கள் கூட்டம்
31.07.05 அன்று மத்ஹபு விளக்கக் கூட்டம் என்று அடுத்தடுத்துப் போடப்பட்ட கூட்டங்களும் அவற்றுக்கிடையே முக்கியஸ்தர்களைத் தனித்தனியே சந்தித்து மத்ஹபை நியாயப்படுத்தி விளக்கங்கள் அளித்ததும் எதற்காக?
நமக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனை மத்ஹபு தான் என்பதற்கு இவை அனைத்தும் சான்றுகளாக உள்ளன.
ஆனால் விவாதம் என்று வந்து விட்டால் மத்ஹபுகளை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என்பதாலும் மத்ஹபு நூல்களில் உள்ள பைத்தியக்காரத் தனமான சட்டங்கள் மக்களுக்கு வெட்ட வெளிச்சமாகி விடும் என்பதாலும் பாக்கியாத் அந்தர் பல்டி அடிக்க முயற்சி செய்தது.
01.08.05 அன்று மத்ஹபைப் பற்றி விவாதிக்க மறுத்தும், வேறு ஒரு தலைப்பில் மட்டும் தான் விவாதம் செய்வோம் என்று கூறியும் முனவ்வர் அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள்.
அந்தக் கடிதத்தில்....
"தர்கா வழிபாடு, மத்ஹபுகள், கத்தம் பாத்திஹாக்கள் போன்ற பித்அத்கள், தரீக்காக்கள் உள்ளிட்ட எந்தப் பிரச்சனை பற்றியும் குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் விவாதம் நடத்த பி.ஜே. தயாராக உள்ளதாக''
தங்களுக்கு வந்த கடிதத்தை அனுப்பியிருந்தீர்கள். ஆனால் எங்களுக்கும் அவருக்கும் இடையே உள்ள அடிப்படைப் பிரச்சனையான பின்வரும் தலைப்பில் விவாதம் நடைபெற வேண்டும் என்பதே எங்கள் நிலையாகும்.
எனவே ஷரீஅத் பேரவை தலைமையில் பாக்கியாத் உலமாக்களும் இவ்விஷயத்தில் விவாதம் செய்யத் தயார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
விவாதத் தலைப்பு: ஷரீஅத்துடைய அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன், ஹதீஸிலிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா?
என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.
நமக்கும் பாக்கியாத்திற்கும் இடையே ஒரேயொரு விஷயத்தைத் தவிர வேறு எதிலும் பிரச்சனை இல்லை என்பதைப் போல் எழுதியுள்ளனர்.
தர்ஹா, கத்தம் பாத்திஹா, தரீக்கா போன்ற விஷயங்களில் அவர்களுக்கு உள்ளேயே ஏகப்பட்ட முரண்பாடுகள். அந்தத் தலைப்புகளில் அவர்கள் விவாதிக்க ஒப்புக் கொண்டாலே பாக்கியாத் பல கூறுகளாகப் பிரிந்து விடும். ஷரீஅத் பேரவையும் பல துண்டுகளாகி விடும். ஜமாஅத்துல் உலமா சிதைந்து சின்னாபின்னமாகி விடும்.
எனவே மேற்கண்ட தலைப்புகளில் விவாதம் செய்வதால் உலமாக்களுக்கு இடையே பிளவுகள் ஏற்படும் என்று அவர்கள் அஞ்சுவதில் நியாயம் இருக்கின்றது.
ஆனால் மத்ஹபைப் பற்றி அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ஜமாஅத்துல் உலமாவில் அங்கம் வகிக்கும் அனைத்து உலமாக்களும் மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் என்பதில் ஒருமித்தக் கருத்தில் தான் உள்ளனர். நாம் மட்டும் தான் மத்ஹபுகளைக் கடுமையாக எதிர்க்கிறோம்.
எனவே பாக்கியாத் குறிப்பிட்டுள்ள தலைப்பை விட, மத்ஹபைப் பற்றி விவாதிக்கத் தான் அவர்கள் முன் வந்திருக்க வேண்டும்.
குர்ஆன், ஹதீஸை அனைவரும் புரிந்து கொள்ள இயலும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். ஆனால் இதை விட முக்கியமான பிரச்சனையான மத்ஹபைப் பற்றியும் விவாதம் நடத்த அவர்கள் ஒப்புக் கொள்வது தான் முறையாகும்.
குர்ஆன், ஹதீஸை அனைவரும் புரிந்து கொள்ள முடியாது என்று அவர்கள் ஒருவேளை நிரூபித்து விட்டாலும் அதனால் மத்ஹபு நூல்களில் உள்ள உளறல்கள் அனைத்தும் சரி என்று ஆகி விடாது. மத்ஹபு நூல்களில் எழுதப்பட்டது சரியா? தவறா? என்று தனி விவாதம் நடத்தித் தான் அதை முடிவு செய்ய வேண்டும்.
எனவே நழுவுவதற்கான தந்திரங்களைக் கையாள்வதை விட்டு விட்டு பாக்கியாத் உலமாக்கள் கருத்து வேறுபாடுள்ள அனைத்து விஷயங்கள் பற்றியும் அவற்றுள் முதன்மையான மத்ஹபு பற்றியும் விவாதிக்க முன் வர வேண்டும்.
பாக்கியாத்தின் திருப்திக்காக அவர்கள் கூறும் தலைப்பில் விவாதம் செய்ய நாம் தயார். அதே சமயம் மற்றொரு தலைப்பாக மத்ஹபும் விவாதிக்கப்பட வேண்டும்.
இதை ஒப்புக் கொள்வதே நியாயமானது என்று தெரிவிக்கிறோம்.
பாக்கியாத் உலமாக்கள் குறிப்பிட்டது போல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் விவாதிக்கும் குழுவில் பி.ஜே.யும் இன்ஷாஅல்லாஹ் இடம் பெறுவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு நாம் பாக்கியாத்திற்குப் பதில் கடிதம் அனுப்பியிருந்தோம்.
நாம் அனுப்பிய இக்கடிதத்திற்குப் பதிலாக பாக்கியாத் சார்பில் 21.08.05 அன்று வெள்ளை அறிக்கை என்ற பெயரில் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டது.
அதில், மத்ஹபைப் பற்றி நாம் கேட்ட கேள்விகளுக்கு ஏற்கனவே அவர்கள் பதில் சொல்லி விட்டதாகவும், தற்போது ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன் ஹதீஸிலிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்ற தலைப்பில் மட்டுமே நாங்கள் விவாதிப்போம் என்பதை அந்தப் பிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
இவர்களது இந்த அறிக்கைக்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இறுதியாகக் கொடுத்த பதில் இதோ:
நாங்கள் தயார்!
நீங்கள் தயாரா?
ஹைஅத்துஷ் ஷரீஅத்தின் வெள்ளை அறிக்கையும் விவாத ஒப்பந்தமும் என்ற தலைப்பில் 21.08.05 அன்று பாக்கியாத் மத்ரஸா மூலம் வெளியிடப்பட்ட பிரசுரம் கிடைக்கப் பெற்றோம்.
ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன் ஹதீஸிலிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்ற தலைப்பில் மட்டுமே நாங்கள் விவாதிப்போம் என்று நீங்கள் மிகவும் பிடிவாதமாக உள்ளீர்கள்.
நீங்கள் கூறிய தலைப்பிலும் விவாதிக்கத் தயார். ஆனால் அந்தத் தலைப்பு முழுமையாக இல்லை என்று நாங்கள் காரண, காரியங்களோடு விளக்கியிருந்தோம்.
ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளை குர்ஆன் ஹதீஸில் இருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? அல்லது ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் மத்ஹபு நுல்களிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்று தலைப்பின் வாசகத்தை திருத்தம் செய்யக் கோரினோம்.
அதற்கு பதிலளிக்கும் வண்ணம்,
வாதத் தலைப்பு : "ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன் ஹதீஸிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்ற மார்க்க அடிப்படையை நிர்ணயிக்கிற, இன்று இவர்கள் முன்வைக்கிற மத்ஹப் முதற்கொண்டு அனைத்து பிரச்சனைகளையும் உள்ளடக்கி தீர்வு காண முடிகிற அர்த்தபுஷ்டியுள்ள ஒரு தலைப்பை நாம் விவாதத்துக்குக் கொடுத்துள்ளோம். ஏனெனில் தனித்தனியே ஒவ்வொன்றையும் விவாதிப்பதென்பது எந்தப் பிரச்சனைக்கும் தீர்வாக ஆகாது. நாம் கொடுத்துள்ள இந்தத் தலைப்பு எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஒட்டு மொத்தமாகத் தீர்வு கிடைத்து விடுகிற ஓர் உயர்ந்த தலைப்பு. அவர்கள் கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கும் மத்ஹபு பற்றிய விவாதத்துக்கும் இறுதி முடிவு கிடைத்துவிடும்''
என்று நீங்கள் விளக்கம் அளித்துள்ளீர்கள். நீங்கள் கொடுத்துள்ள விளக்கத்தை உள்ளடக்கிய மேற்கண்ட தலைப்பை ஏற்றுக் கொள்கிறோம். மத்ஹப் முதற்கொண்டு அனைத்து பிரச்சனைகளையும் உள்ளடக்கி தீர்வு காண முடிகிற அர்த்தபுஷ்டியுள்ள ஒரு தலைப்பு என்று நீங்கள் விளக்கம் தருகின்ற, ஷரீஅத்தின் அனைத்துப் பிரச்சனைகளையும் குர்ஆன் ஹதீஸிருந்து மட்டும் நேரடியாக அனைவரும் புரிந்து செயல்பட முடியுமா? என்ற அந்த தலைப்பிலேயே உங்களுடன் விவாதம் செய்ய நாங்கள் தயார். எவருடனும் விவாதம் செய்ய நாம் தயார் என்ற போதும் 8.05.2005ல் நாம் பாக்கியாத்திற்குத் தான் நேரடி அறைகூவல் விடுத்தோம். ஹைஅத்துஷ் ஷரீஅத் எங்களின் சவாலை ஏற்று பதிலளித்தது. நாங்களும் அதனை ஏற்றுக் கொண்டோம். எனவே இந்த விவாதம் பாக்கியாத் மற்றும் ஹைஅத்துஷ் ஷரீஅத் என்ற இரு அமைப்புகள் அடங்கிய ஒரு அணிக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற மற்றொரு அணிக்கும் இடையில் நடக்கும் விவாதமாகும். எங்களது முந்தயை அறிக்கையில் ஒப்பந்தம் செய்வதற்கு ஏற்ற தேதியை அறிவிக்கும்படி உங்களைக் கேட்டிருந்தோம். அதற்கு நீங்கள் அளித்த பதிலில் "நாங்கள் மேற்குறிப்பிட்ட அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு தரத்தக்க அத்தலைப்பில் எப்போதும், எங்கும் ஒளிவு மறைவின்றி விவாதிக்கவும், அதற்குரிய ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறோம்''
என்று தெரிவித்துள்ளீர்கள். எப்போதும் தயார் என்று எழுதி ஒப்பந்தத் தேதியை அறிவிக்கும் பொறுப்பை எங்களிடமே விட்டதற்கு மிக்க நன்றி. நீங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க விவாத ஒப்பந்தம் செய்வதற்காக 01.10.2005 திங்கட் கிழமை பகல் 12.00 மணிக்குக் கீழ்க்காணும் முகவரியில் உங்களுக்காகக் காத்திருக்கிறோம். (இன்ஷாஅல்லாஹ்) பசபஓ மஸ்ஜிதே நூர் காம்பவுன்ட்
5, அப்துல் கலாம் நகர்,
ரஹ்மத் பாலா, வேலூர். 1 நேரடியாக 01.10.2005 அன்று சந்திப்பதைத் தவிர வேறு எதனையும் உங்களிடம் நாங்கள் எதிர் பார்க்கவில்லை. நீங்கள் இனியும் இழுத்தடிக்கும் கடிதங்களை எழுதினால் அவற்றை நாங்கள் அலட்சியப்படுத்தி விடுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். விவாத ஒப்பந்தத்தில் பேசி இறுதி செய்வதற்காக எங்கள் தரப்பில் ஐந்து பேர் வருகிறோம். தாங்களும் ஐந்து பேருக்கு மிகாமல் வரவும். எங்கள் தரப்பில் வீடியோ பதிவு செய்ய நாங்கள் ஏற்பாடு செய்து கொள்கிறோம். உங்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை நீங்கள் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு நாம் பதில் எழுதியிருந்தோம். இதற்கு அவர்கள் இன்று வரை எந்தப் பதிலும் அனுப்பவில்லை.
நேரில் சென்றும் வரவில்லை
இறுதியாக நாம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது போல் 01.10.05 அன்று கலீல் ரசூல், எம்.எஸ். சுலைமான் உட்பட ஐந்து பேர் அடங்கிய குழு வேலூருக்குச் சென்றது. சரியாக காலை 11.45 மணி முதல் மாலை 3.30 மணி வரை கடிதத்தில் குறிப்பிட்டிருந்த இடத்தில் காத்திருந்தும் பாக்கியாத் தரப்பிலிருந்து யாரும் விவாத ஒப்பந்தத்திற்கு வரவில்லை.
வெகு நேரமாகியும் யாரும் வராததைக் கண்ட நமது குழுவினர் பாக்கியாத் மதரஸாவிற்கே தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். தொலைபேசியை பாக்கியாத் மதரஸாவின் வாட்ச்மேன் எடுத்தார். "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக விவாத ஒப்பந்தத்திற்குக் கடிதத்தில் குறிப்பிட்டபடி நாங்கள் வந்துள்ளோம். நீங்கள் வரவில்லையா? உங்கள் முதல்வரைக் கூப்பிடுங்கள்'' என்று நமது குழுவினர் கூறினர். அங்கிருந்த பாக்கியாத் முதல்வரிடம் இது குறித்து வாட்ச்மேன் கேட்டு விட்டு, "முதல்வர் வர மறுத்து விட்டார்' என்று கூறி போனை வைக்கச் சொல்லி விட்டார்'' என்று கூறி விட்டு போனை வைத்து விட்டார்.
பல அறிஞர்களை தமிழ்நாட்டிற்கு சப்ளை செய்யும் தமிழகத்தின் தாய்க் கல்லூரி என்று பெருமையுடன் கூறிக் கொள்ளும் வேலூர் பாக்கியாத்தில் உள்ள ஒருவருக்குக் கூட விவாத ஒப்பந்தத்திற்கு வருவதற்குத் துணிவில்லாமல் போய் விட்டது தான் வேதனைக்குரிய விஷயம்.
மத்ஹபுகள் தான் இஸ்லாத்தின் வழிகாட்டி என்று அவர்கள் கூறுவதில் உண்மையாளர்களாக இருந்தால் நாம் விவாதத்திற்கு அழைத்ததை ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருதி அவர்கள் வந்திருக்க வேண்டும்.
நமது தரப்பில் எவ்வளவோ இறங்கிச் சென்றும், அவர்கள் சொல்லும் நிபந்தனைகள் அத்தனைக்கும் சம்மதித்தும், அவர்கள் சொல்லிய தலைப்பிலேயே விவாதிக்க ஒப்புக் கொண்ட பிறகும் விவாதம் செய்ய அவர்கள் வர மறுக்கின்றார்கள் என்றால் அதற்குக் காரணம் என்ன?
மத்ஹபு நூல்களில் உள்ள பைத்தியக்காரத்தனமான உளறல் களுக்கும், ஆபாசக் களஞ்சியத்திற்கும் அவர்களால் ஒரு போதும் பதில் சொல்ல முடியாது என்பதைத் தவிர வேறு காரணம் இல்லை.
மத்ஹபுகள் தான் மார்க்கத்தின் வழிகாட்டி என்று இவர்கள் பிரச்சாரம் செய்வது மக்களை ஏமாற்றுவதற்காகத் தான் என்பதையும், மத்ஹபுகள் இஸ்லாத்திற்கு முரணானவை என்று தெரிந்து கொண்டே தான் இந்த ஆலிம்கள் மார்க்கத்தை மறைக்கின்றார்கள் என்பதையும் பாக்கியாத் உலமாக்களின் இந்த நடவடிக்கைகள் தெளிவாக உணர்த்தி விட்டன.
உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் எப்படியேனும் விவாதத்தை நடத்தி விட வேண்டும் என்று முயற்சி செய்த பிரமுகர்களும், பொதுமக்களும் பாக்கியாத் உலமாக்களிடம் உண்மையில்லை என்பதை உணர்ந்து கொண்டார்கள், அல்ஹம்துலில்லாஹ்.
"மத்ஹபுகள் மார்க்க ஆதாரங்கள் அல்ல; குர்ஆன், ஹதீஸ் தான் மார்க்கத்தின் அடிப்படை ஆதாரங்கள்'' என்ற சத்தியக் கருத்துக்கு அல்லாஹ் அளித்த மகத்தான வெற்றி இது என்றால் மிகையல்ல.
www.onlinepj.com 

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை