தன்னம்பிக்கையின் சிகரம் - இப்ராஹீம் (அலை)

தன்னம்பிக்கையின் சிகரம் - இப்ராஹீம் (அலை)


வாழ்க்கையே போரடிக்குது பா..... என்ன லைப் இது.....??? எனக்கு மட்டும் ஏன் இப்டிலாம் நடக்குது.....??? நான் பட்ட கஷ்டம் யாருமே படக்கூடாது பா....?? என்னை போல கஷ்டப் பட்டவங்க யாருமே இல்லை...!!!
அந்த ஆண்டவனுக்கு கண்ணே இல்லையே....!!! நான் யாருக்கு
என்ன துரோகம் பண்ணுனேன்....???

ஊரை அடிச்சு உலையில போட்டவன் எல்லாம் நல்லா இருக்கான்...!!!??
நான் பாட்டுக்கும் நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருக்கேன்.... எனக்கு மட்டும் இவ்ளோ கஷ்டத்தை ஏன் அந்த ஆண்டவன் கொடுக்கிறான்???னு தினமும் நாம் புலம்பிக் கொண்டு இருக்கிறோம்.

இவ்வுலகம் என்பது ஒரு சோதனைக்களம்.உதாரணத்திற்கு நாம் ஒரு தேர்வு கூடத்திற்குள் சென்றால் நமக்கு வினா தாள் கொடுக்கப் படும். அதில் ஒரு மார்க் கொஸ்டின், இரண்டு மார்க் கொஸ்டின், ஐந்து மார்க் கொஸ்டின், பத்து மார்க் கொஸ்டின், இருபது மார்க் கொஸ்டின் என வகை வகையாக பிரிக்கப் பட்டு வினாக்கள் கேட்கப் பட்டிருக்கும். 

ஒரு மார்க் கொஸ்டின் ஈசியோ ஈசியாக இருக்கும். மதிப்பெண்ணின் தரத்திற்கேற்ப வினாக்கள் கடுமையாக இருக்கும்.... பத்து மார்க் கொஸ்டின் படிச்ச மாறி இருக்கும். முதல் வரி மறந்து போயிருக்கும்.... இருபது மார்க் கொஸ்டின் பார்த்தாலே பயங்கரமா இருக்கும்.

அது போல சோதனைக் கூடமான இந்த உலகத்தில் நமக்கு கொடுக்கப்படும் சோதனைகளுக்கும் மதிப்பெண்கள் கொடுக்கப்படுது.
ஒரு மார்க், இரண்டு மார்க் கொஸ்டின் போல உள்ள கஷ்டம் எல்லாம் அட்டெண்ட் பண்ணிருவோம்... ஆனால், இந்த பத்து மார்க், இருபது மார்க் கொஸ்டின்போல இருக்கே கஷ்டம்.... அது ரொம்ப கஷ்டமா இருக்கும்.

இருபது மார்க் கொஸ்டின் போல கஷ்டங்கள் நம்மிடம் கண்டிப்பாக இருக்கும். அதில் எவ்வாறு பொறுமையோடு இருக்கிறோம் என்பதை பொறுத்துதான் நம் மறுமை வாழ்வு இருக்கும்.

சோதனைகளும்,சிரமங்களும் இல்லாமல் சொர்க்கம் போக முடியாது.
யாரை அல்லாஹ் விரும்புகிறானோ அவரை சோதிக்கிறான்’’னு நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

இவ்வளவு சிரமங்களையும் தாண்டித்தான் சொர்க்கம் போக முடியுமானு நாம மலைச்சு போய்டுவோம்....

நமக்கு முன்னாடியே அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஒருத்தரைப் படைச்சு அவருக்கு எக்ஸாமுக்கு மேல எக்ஸாமா வச்சு அவரும் எல்லாம் எக்ஸாமிலும் பாஸ் ஆயி அல்லாஹ்வின் நெருங்கிய தோழரும் ஆயிட்டாரு!...

அல்லாஹ் அவரை நமக்கு எல்லாம் இமாமுன் முத்தக்கீன் (பயபக்தியாளர்களின் முன்மாதிரி)னு சிறப்பிச்சு சொல்றான்.

ஒவ்வொரு நாளும் 5 வேளைத் தொழுகையிலும் அவருக்குக் கொடுக்கப் பட்ட அருளும், பரக்கத்தும் நமக்கு வேண்டும்னு துஆ செய்றோம்....

நாம் அனைவரும் போக பேராசைப்படும் சொர்க்கத்தின் கதவை தட்டி முதல் முதலாக நுழையப்போகும் நம் தலைவர் நபி ஸல் அவர்கள் கூட அவருக்கு கொடுக்கப்பட்ட அருளும், பரகத்தும் தனக்கும் வேண்டி து ஆ செய்துள்ளார். உண்மையில் அவர்தான் தன்னம்பிக்கையின் சிகரம்!...
அஞ்சா நெஞ்சன்!...

எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தன்னந்தனி ஆளாக நின்னு அவர் தன் வாழ்க்கையில் ஜெயித்துக் காட்டியவர்!...

இறைவனின் தோழர் இப்ராஹீம் அலை அவர்கள்!...
அப்படி என்ன காரியம்தான் செய்தார்கள்?...

வார்த்தைகளில் நல்லறங்களை உபதேசித்தால் மட்டுமே மனிதர்கள் உத்தமர்களாக மாறிவிடுவார்களா?? என்றால் இல்லை என்பதுதான் பதில்.வழிப்பாதைக்கு மட்டுமல்லாமல் வாழ்க்கைபாதைக்கும் வழி காட்டிகள் தேவைப்படுகிறார்கள்.

என்னைப்போல உள்ள ஒரு மனிதனாலும் இப்படியெல்லாம் வாழ முடிகின்றது-என்கிற உணர்வுதான் உத்வேகமாக மாறி அவனைத் தூண்டி விடுகின்றது. இவரால் முடிகின்றபோது நம்மால் மட்டும் ஏன் முடியாதுஎன்ற நம்பிக்கை அவன் மனதில் இடம் பிடிக்கின்றது.

ஆகையால்தான் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டுள்ளார்கள்.
இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. அல்குர் ஆன்-60:4.

அச்சு பிசகாமல் அடி பிறழாமல் மக்களால் பின்பற்றப்படுகின்ற தலைமையே வழிகாட்டியேஉஸ்வா என சொல்லப்படும்.நாம் பின்பற்றவேண்டிய உஸ்வாக்கள்என வான்மறை இருவரை மட்டுமே குறிப்பிடப்படுகிறது.

அந்த இருவர் மட்டுமே தன்னம்பிக்கையின் சிகரங்கள்!...
அவர்களை பின்பற்றவேண்டும் என்பதற்காகதானே ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழுகையிலும் ஸலவாத்தில் அவர்கள் இருவரையும் நினைவு கூறுகிறோம்!... உஸ்வா!.... ஆம்!...

அழகிய முன்மாதிரி என இப்ராஹீம் {அலை} முஹம்மது நபி {ஸல்} அவர்களையும் ரப்பு குறிப்பிடுகிறான்.

சிலைகளை வணங்கிய தன் தந்தைக்கு அழைப்புபணி செய்கிறார்.... தன் சமுதாய மக்களிடம் அழைப்புப்பணி செய்கிறார். சிந்தனையை உசுப்பி விடும் கேள்விகளை கேட்டு அம்மக்களை சிந்திக்க செய்கிறார்.

அதற்கு இப்றாஹீம்) கூறினார்: “நீங்கள் அவற்றை அழைக்கும் போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா?“அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா; அல்லது தீமை செய்கின்றனவா? (எனவுங் கேட்டார்).26:72,73.

இறைவனை ஏற்க மறுப்பவர்களின் அறிவுவாசலை எப்படியாவது தட்டித்திறந்து விட வேண்டும் என்பதுதான் ஓர் இறை நம்பிக்கையாளரின் லட்சியமே தவிர அவர்களை வாதத்தில் வீழ்த்தி வாயடைக்க செய்வது அல்ல!...

தந்தையின் எதிர்ப்பு.... ஊர் மக்களின் எதிர்ப்பு.... அந்நாட்டு அரசனின்
எதிர்ப்பு.... தீக்குண்டத்தில் போடும் போதும் தன்னந்தனியாக அதை எதிர்கொண்டவர்.... ஊரை விட்டு வெளியேறி மனைவியோடு ஹிஜ்ரத்.... வயதான காலத்தில் தான் குழந்தைபேறு.... குழந்தை பிறந்தவுடன் பச்சிளம்பாலகனை, மனைவியோடு பாலைவனத்தில் விட்டு விடச் சொல்லி அல்லாஹ் கட்டளையிட்டவுடன் உடனே அதை நிறைவேற்றிய முன்மாதிரி.... அவருடைய மனைவி ஹாஜரா அலை அவர்களிடத்திலும் மிக அழகிய முன்மாதிரி உள்ளது... கணவன் பாலவனத்தில் விட்டு செல்லும்போது,

’’இப்ராஹீமே, இறைவன் சொல் கேட்டா இவ்வாறு செய்கிறீர்கள்’’ என கேட்ட போது ’’ஆமாம்’’ என பதில் அளித்தார்கள்....

’’அப்படியென்றால் அல்லாஹ் எங்களைக் கண்டிப்பாக கைவிட மாட்டான்’’.... இப்படிகூறியது ஒரு பெண் என அனைவரும் நினைவில் வைப்போம்... வீடு, வாசல், வசதி என சுகபோகமாக இருக்கும்பெண்கள்... சிறு சிறு விசயங்களுக்கெல்லாம் அழும் பெண்கள் ஹாஜரா {அலை} அவர்களைமுன்மாதிரியாக எடுத்துக்கொள்ளவேண்டும்...
சொல்லி அழ ஆள் இல்லை...

உதவி செய்ய ஆள் இல்லை... வானம் பார்த்த பூமிதான் வீடு.... குடிக்க தண்ணீர் வசதி இல்லை.. அடுத்த வேளை சாப்பிட உணவு இல்லை.... தன் கணவர் எப்பொழுது திரும்வி வருவார் என தெரியாது... பிள்ளையின் தண்ணீர் தாகத்துக்கு என ஸஃபா, மர்வாக்கிடையே ஓடிய அந்த வீரப்பெண்மணிக்கு இறைவன் கொடுத்த பரிசே ஜம்ஜம் நீருற்று!...


ஹஜ்ஜூக்கு செல்லும் ஆண்கள் முதற்கொண்டு எல்லோரும் ஸஃபா,மர்வாக்கிடையே தொங்கோட்டம் ஓடுவது இந்த வீரப் பெண்மணியின் செயலை நினைவூட்டத்தான்.....
பெண்களை குறை சொல்லும் ஆண்கள் இப்படி தன்னந்தனியாக ஒரு ஆணால் இக்காலத்தில் இருக்க முடியுமா என யோசிக்க வேண்டும்....
இப்ராஹீம் அலை அவர்கள் அவர்களுக்காக ஒரு அழகிய பிரார்த்தனைசெய்கிறார்கள்....

“எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக..... 14:37. இப்றாஹீமிடமும், அவரோடு இருந்தவர் களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது. அல்குர் ஆன் -60:4.

அவரின் அழகியபிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொண்டான்...

வாழ்நாள் எல்லாம் இறைப்பணிக்காக கஷ்டப்பட்டு சொல்ல முடியாத துன்பங்களை எல்லாம் சகித்துக்கொண்டு ஊரையும், நாட்டையும், உறவுகள் யாவையும் விட்டு இத்தனை வருடம் பிள்ளை இல்லாமல் இருந்து அந்த பிள்ளை பிறந்த உடன் பாலைவனத்தில் கொண்டு சென்று விட்டு இறைக்கட்டளையை நிறைவேற்றியவருக்கு அடுத்த சோதனை காத்திருந்தது....

தான் பெற்ற மகனை பலி கொடுக்கச்சொன்னால் நாம் செய்வோமா?? இல்லை... நம்முடைய மகன் தான் ஒத்துக்கொள்வானா??
இல்லை... நம்முடைய மனைவி ஏற்றுக்கொள்வாரா??

“எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். 25 :74.

ஆம்.... இது இப்ராஹீம் நபி {அலை} செய்த துஆ... எப்படிப்பட்ட கண்குளிர்ச்சியான குடும்பத்தை ரப்புல் ஆலமீன் அவருக்கு பரிசாக கொடுத்துள்ளான்...

"பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”37:102.

மகனை அறுக்கும் பரிட்சையிலும் இப்ராஹீம் வென்றார்.... அதற்கு பதிலாகதான் ஆட்டை அறுத்து குர்பானி கொடுத்தார்.
அவரின் தியாகத்தை நினைவு கூறத்தான் குர்பானி கொடுக்கிறோம். வருடம் இருமுறை கொண்டாடும் பெருநாளில் ஒரு பெருநாளே
இப்ராஹீம் அலை அவர்களின் தியாகத்தை நினைவு கூறத்தான்.....

இப்படிப்பட்ட தலைவரைக்கொண்டுதான் அல்லாஹு தன் இறையில்லத்தை உயர்த்தினான்.... அவர்நின்றுதொழுத இடத்தை
மகாமு இப்ராஹீம் என சிறப்பித்துகூறுகிறான். அவரும்அவர் மனைவியும் செய்த அமல்களே நாம் ஹஜ்ஜில் செய்கிறொம்....

"மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்றாஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்றாஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.அல்குர் ஆன் 4:125

என்று பல நூற்றாண்டுகளாக குர் ஆன் மனித சமுதாயத்தைப் பார்த்துக்கேட்கிறது.

"இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.
அவரிடம் அவருடைய இறைவன் “(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்” என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்” என்று கூறினார்.அல்குர் ஆன்.2:130,131.

முஸ்லிமின் லட்சியமே இறைவனுக்கு கீழ்படிவதுதான்.... வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால் இப்ராஹீமைப்போல வாழ்!!
இப்ராஹீம் என்னும் ஒற்றைமனிதரைப் பார்த்து உம்மத் என
அல்லாஹ் கூறுகிறான்....

(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்; அதற்கு இப்ராஹீம் “என் சந்ததியினரிலும் (இமாம்களை ஆக்குவாயா?)” எனக் கேட்டார்; என் வாக்குறுதி (உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.2:124.

அல்லாஹ் வைத்த எல்லா சோதனைகளிலும் வெற்றி பெற்றார். அதனால் தான் அல்லாஹ் அவரை உலக மக்களுக்கு தலைவராக ஆக்கியுள்ளான்.

இறைவனின் நண்பரான இப்ராஹீம் அலை அவர்களுக்கு ஏற்ப்பட்ட சோதனைகளுக்கு முன் நாம் கஷ்டப்படுவது எல்லாம் ஒரு விசயமே அல்ல....

எந்த ஒரு கஷ்டம் ஏற்படும்போதும் இப்ராஹீம் அலை அவர்களின் சோதனைகளைசிந்தித்தால் நம் கஷ்டங்களும், துன்பங்களும் லேசாகத்தெரியும்.

அல்லாஹ் நம்மை வாழும் போது முஸ்லிமாகவும், மரணிக்கும் போதும் முஸ்லிமாகவும், மறுமையில் எழுப்பும் போதும் முஸ்லிமாக ஆக்கி அருள்புரிவானாக! ஆமின்!!

நன்றி -ஆஷா பர்வீன்

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை