பிற இயக்கங்கள் நடத்தும் போராட்டங்களில் கலந்துகொள்ளுமா? TNTJ


பிற இயக்கத்தினர் நடத்தும் போராட்டங்களில் தவ்ஹீத் ஜமாஅத் கலந்து கொள்ளாது. தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் மற்ற இயக்கங்களுக்கும் போராட்டவழிமுறைகள் உட்பட பல வேறுபாடுகள் உள்ளன.

போராட்டம் நடத்துவது நம்முடைய இருப்பைக்காட்டிக் கொள்வதற்கு அல்ல. கோரிக்கைகளை வென்றெடுக்கத்தான் போராட்டம் நடத்த வேண்டும். ஆனால் முஸ்லிம் இயக்கங்களை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பெரியகட்சியுடன் கூட்டணிவைக்கிறார்கள்.தேர்தலின்போது ஆதரவு அளிப்பதுடன் நிற்காமல் தொடர்ந்து அதில் நீடிக்கிறார்கள்.

இவர்கள் திமுக கூட்டணியில் இருந்தால் அந்தக்கட்சியின் கேடுகளை எதிர்த்துப் போராடமாட்டார்கள். அதிமுககூட்டணியில் இருந்தால் அதன் தீமைகளை எதிர்த்துப்போராடமாட்டார்கள்

திமுக ஆட்சி நடக்கும் போது அக்கட்சியுடன் கூட்டணி கண்டவர்கள் இடஒதுக்கீட்டுக்காகக் கூட போராடியதில்லை.

அதிமுகவுடன் கூட்டணி கண்டவர்கள் அக்கட்சியின் முஸ்லிம்விரோத நடவடிக்கைக்காகப் போராடியது இல்லை.

இரண்டு கூட்டணிகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டால் மட்டும் தான் போராட்டக்களத்துக்கே வருகிறார்கள்.

அப்படியானால் இவர்களின் நோக்கம் கோரிக்கைகள் அல்ல. தங்கள் கூட்டணிக்கட்சிக்கு ஆதரவாக மக்களைமாற்றுவதும் அதைக்காட்டி அரசியல் ஆதாயம் அடைவதும்தான்

இப்படி நன்றாகத் தெரியும் போது நாம் எப்படி அவர்களுடன் சேர்ந்து போராட முடியும்? நாளைக்கு கோரிக்கைகளைக் கைகழுவி விட்டு நீர்த்துப்போகச் செய்துவிட்டால் நடத்திய போராட்டம் அர்த்தமில்லாமல் போய்விடும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் ஒரு நேரத்தில் அதிமுக கூட்டணியை ஆதரித்துள்ளது. இன்னொரு கட்டத்தில் திமுக கூட்டணியை ஆதரித்துள்ளது.

ஆனால் தேர்தல் முடிந்த மறுகணமே ஆதரித்த கட்சி தவறு செய்யும் போது எதிர்த்துக்களம் இறங்கத் தயங்கவில்லை.

ஜெயலலிதாவை 2001 சட்டமன்றத் தேர்தலில் தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தது. தேர்தல் முடிந்தவுடன் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா 64

வகை உணவளித்து விருந்து அளித்த போது உடனே ஜெயலலிதாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தியது.அதிமுக நடத்திய நோன்பு துறக்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தும் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

அது போல் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து முதல்வர் வீடு முற்றுகை உள்ளிட்ட பல போராட்டங்களை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தத் தயங்கியதில்லை.

இது போல் ஒரு பக்கச் சார்பு இல்லாமல் முஸ்லிம் இயக்கங்கள் செயல்படுவதில்லை என்பதால் அவர்களின் சுயநலனுக்கு நாம் உதவக்கூடாது என்பதற்காக நாம் மற்றவர்களின் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை.

சில லட்டர் பேடு இயக்கங்கள் தங்களை வளர்த்துக் கொள்வதற்காக சார்பற்ற போராட்டங்கள் நடத்தினாலும் அவர்கள் மார்க்கத்தில் சமரசம் செய்கின்றனர். தாரை தப்பட்டை அடித்தும், தனி நபர்களைத் துதித்தும் இன்னும் பல சமரசங்களைச் செய்வதையும் பார்க்கிறோம். முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாம் பற்றி அறியாதவர்களை அழைத்து கவுரவப்படுத்தும் வகையிலும் அவர்களை சமுதாயத்தின் காவலர்களாகவும் சித்தரிக்க முயல்கின்றனர்.

இவற்றில் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு உடன்பாடு இல்லாததால் மற்றவர்களின் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை