பிரபஞ்சம் தோன்றியது எவ்வாறு?


பிரபஞ்சம் தோன்றியது எவ்வாறு?

எந்த ஒரு பொருளானாலும் அதற்கு ஒரு ஆரம்பமும், ஒரு முடிவும் இருப்பது நியதி. இது பொருட்களுக்கு மட்டுமல்லாது உயிரினங்களுக்கும் உள்ள பொதுவான நியதி. இவ்வனைத்தின் உருவாக்கத்திற்கும் படைப்பாளன் ஒருவன் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும். அப் படைப்பாளனுக்கு தொடக்கமும், முடிவும் இருக்கவே கூடாது. அப்படி இருந்தால் படைப்பாளனுக்கு படைப்பாளன், படைப்பாளனுக்கு படைப்பாளன்,படைப்பாளனுக்கு படைப்பாளன்……. என்ற அர்த்தமில்லாத முடிவிலி ஆன ஒரு சங்கிலித் தொடர்  ஏற்படும்.
எனவே, இதிலிருந்து நிச்சயமாக ஒரு படைப்பாளன் இருக்கின்றான் என்று எந்தவித சந்தேகமும் இன்றி புலனாகின்றது.
இப்பொழுது அவனை எவ்வாறு அறிந்து கொள்வது என்ற கேள்வி நம்மில் எழும். படைப்பாளனுக்கு மட்டும் தான் அவனது படைப்பினங்களைப் பற்றியும், அதன் உருவாக்கங்கள் பற்றியும், அப் படைப்பினங்களின் இயக்கங்கள் எவ்வாறு இருக்கும், எவ்வாறு இருக்க வேண்டும் என்ற முழு அறிவும் இருக்கும். அவன் இவ்வுலகிற்கு தன் படைப்பினங்கள் பற்றியும்,அதன் உருவாக்கம், செயற்பாடுகள் பற்றியும் தெளிவுபடுத்தினால் நம்மால் நிச்சயமாக நம்மையும், அண்டங்கள் அனைத்தையும் படைத்த இறைவன் இவன் தான் என்று எந்தவித மறுப்பும் இன்றி தெளிவாக புரிந்து கொள்ள முடியும். 

அல்குர்ஆன் படைப்பாளனைப் பற்றி என்ன கூறுகின்றது?
முஸ்லிம்களால் இறைவேதம் என்று நம்பப்படும் அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் அண்டங்கள் அனைத்தையும் படைத்த படைப்பாளனாகிய இறைவன் தன் படைப்பினங்களைப் பற்றியும், அதன் உருவாக்கம் பற்றியும்,அதன் செயற்பாடுகள் பற்றியும் மிகத் தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக பேசுகின்றான்.
அல்லாஹ்வே முதலில் படைத்தான். மீண்டும் அவன் படைப்பான். பின்னர் அவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! (அல்குர்ஆன் 30:11)
அல்லாஹ் தான் ஒன்றுமே இல்லாதிருந்த நிலையில் இப் பிரபஞ்சத்தை படைத்தவன் என்பது இந்த குர்ஆன் வசனத்திலிருந்து தெளிவாகின்றது. அல்லாஹ் இப் பிரபஞ்சத்தின் ஆரம்பத்தை குர்ஆனில் குறிப்பிடும்போது,
(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். ஒரு காரியத்தை அவன் முடிவு செய்யும் போது அது குறித்து ஆகுஎன்றே கூறுவான். உடனே அது ஆகி விடும். (அல்குர்ஆன் 2:117)
இந்த குர்ஆன் வசனத்திலிருந்து அல்லாஹ் வானங்களையும், பூமியையும் எந்தவித முன்மாதிரி இன்றி படைத்ததாக குறிப்பிடுகின்றான். மனிதனால் சுற்றுப்புறச் சூழலை அறிந்து கொள்வதன் மூலம் வெறும் கருதுகோள்களையும், கோட்பாடுகளையும் மாத்திரமே உருவாக்க முடியும்.
வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்ததாக படைப்பாளனாகிய அல்லாஹ் திருமறைக் குர்ஆனிலே குறிப்பிடுகின்றான்.
பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான் என்று கூறுவீராக!    
நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.
பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.
இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான். கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். (அவற்றை) பாதுகாக்கப்பட்டதாக (ஆக்கினோம்). இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.(அல்குர்ஆன் 41: 9,10,11,12)
உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான். இரவைப் பகலால் அவன் மூடுகிறான். பகல், இரவை வேகமாகத் தொடர்கிறது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தனது கட்டளையால் கட்டுப்படுத்தினான். கவனத்தில் கொள்க! படைத்தலும், கட்டளையும் அவனுக்கே உரியன. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் பாக்கியம் பொருந்தியவன்.(அல்குர்ஆன் 7:54)
வானங்கள், பூமி மட்டுமல்லாது அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவைகளையும் சேர்த்து ஆறு நாட்களில் படைத்ததாக அல்லாஹ் கூறுகின்றான்.
வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டதையும் ஆறு நாட்களில் படைத்தோம். நமக்கு எந்தக்களைப்பும் ஏற்படவில்லை.(அல்குர்ஆன் 50:38)
அல்குர்ஆன் வசனங்களின் படி பூமியைப் படைக்க இரு நாட்கள், அதில் மனிதன் வாழத் தேவையான ஏற்பாடுகள் செய்ய இரண்டு நாட்கள்,வானங்களைப் படைக்க இரு நாட்கள் என ஆறு நாட்களில் அனைத்தையும் அல்லாஹ் படைத்தான். கீழுள்ள அல்குர்ஆன் வசனங்களும் இதற்கு ஆதாரமாக உள்ளன.
(அல்குர்ஆன்  10:3, 11:7, 41:9, 10, 41:12, 25:59, 32:4, 57:4)
பிரபஞ்சம் தானாக உருவாகியதா?
சில விஞ்ஞானிகள் இப் பிரபஞ்சம் தானாக உருவாகியது என்ற கோட்பாட்டில் உள்ளனர். மேலும், கடவுள் என்று ஒருவன் இல்லை என்றும் இப் பிரபஞ்சத்தின் எல்லா நிகழ்வுகளும் இயற்கையின் நிமித்தமே நிகழ்கின்றது என்றும் வாதிடுகின்றனர்.
அல்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு ஏராளமான இறை வசனங்கள் சான்று பகர்கின்றன. அல்குர்ஆனிலுள்ள அறிவியல் வசனங்களை தற்போதைய விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் உண்மைப்படுத்தி அல்குர்ஆன் இறைவேதம் தான் எனவும் இறைவன் ஒருவன் இருக்கின்றான் எனவும் எந்தவித சந்தேகமும் இன்றி தெளிவாக எடுத்தியம்புகின்றன.
அவர்களுக்கு உண்மை தெளிவாக வேண்டும் என்பதற்காகப் பல பாகங்களிலும், அவர்களுக்கு உள்ளேயும் நமது சான்றுகளை அவர்களுக்குக் காட்டுவோம். உமது இறைவன் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது போதுமானதாக இல்லையா? (அல்குர்ஆன் 41:53)
எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது அவர்களே படைக்கக் கூடியவர்களா?
அல்லது வானங்களையும், பூமியையும் அவர்களே படைத்தார்களா?அவ்வாறில்லை! அவர்கள் உறுதியாக நம்ப மாட்டார்கள். (அல்குர்ஆன் 52: 35,36)
படைத்த இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதற்கு அல்குர்ஆனில் நிறைய அறிவியல் சான்றுகள் காணப்படுகின்றன. இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் அச் சான்றுகள் உண்மைபடுத்துகின்றன. அவற்றில் நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளான இப் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய பெரு வெடிப்புக் கொள்கை (Big bang theory) பற்றியும், விரிவடையும் பிரபஞ்சம் பற்றியும் அல்குர்ஆன் 1400 வருடங்களுக்கு முன்பே அறிவிக்கின்றது.
அல்குர்ஆன் இப் பிரபஞ்சத்தின் தோற்றம், விரிவு பற்றி என்ன கூறுகின்றது?
பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். ”விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்” என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். ”விரும்பியே கட்டுப்பட்டோம்” என்று அவை கூறின.(அல்குர்ஆன் 41:11)
வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?  (அல்குர்ஆன் 21:30)
மேலுள்ள அல்குர்ஆன் வசனங்களின் படி வானங்கள், பூமி முன்னர் ஒரே பொருளாக இணைந்திருந்தன எனவும் அவை பிரிக்கப்படுவதற்கு முன் புகை மண்டலமாக இருந்து அதைத் தொடர்ந்து வானங்கள், பூமி, கோள்கள் உருவாக்கப்பட்டன என்றும் கூறப்படுகின்றது. 
(நமது) வலிமையால் வானத்தைப் படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம். (அல்குர்ஆன் 51:47)
அல்குர்ஆன் இப் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி மட்டும் கூறாமல் அது விரிவாகிக்கொண்டே செல்கின்றது என்ற உண்மையையும் 1400வருடங்களுக்கு முன்பே அறிவித்து விட்டது. 
நவீன விஞ்ஞான அறிக்கைகளின் படி இப் பிரபஞ்சம் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒரு கட்டத்தில் இப் பிரபஞ்சமானது வெறும் புகை மண்டலமாகக் காணப்பட்டது. அதாவது இப் புகை மண்டலமானது ஓளி ஊடுருவ முடியாத,அடர்த்தியான வெப்ப வாயுக் கலவையாகும். இது விஞ்ஞானத்தின் பிரபஞ்சத்தின் பிறப்பு பற்றிய மறுக்க முடியாத உறுதியான நம்பிக்கையாகும். தற்போது விஞ்ஞானிகளின் அவதானிப்பின் படி மீதமுள்ள புகை மண்டலத்தின் மூலம் புதிய நட்சத்திரங்கள் உருவாகின்றன.
பூமியினதும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள், பால்வெளிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய வானத்தினதும் உருவாக்கத்திற்கு புகை மண்டலமே காரணம் எனவும் மேலும், இவை எல்லாம் ஒன்றாக ஒரு பொருளாக இருந்து வெடித்து சிதறி புகை மண்டலமாகி ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்பட்டு உருவாகின என்று நவீன விஞ்ஞானம் கூறுகின்றது.
Dr. Alfred Kroner என்பவர் புகழ்பெற்ற புவியியலாளர்களில் ஒருவர் இவர் புவியியற் துறை பேராசிரியரும், ஜேர்மனியில் உள்ள புவியியற் துறை நிறுவனத்தின் தலைவரும் ஆவார். இவர் கருத்து தெரிவிக்கையில்“முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இப் பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. காரணம், விஞ்ஞானிகள் கடந்த காலங்களில் தான் இதனை மிகவும் முன்னேறிய தொழில் நுட்ப உதவியுடன் கண்டறிந்தனர்”. மேலும் அவர் தெரிவிக்கையில் “1400 வருடங்களுக்கு முன்னர் அணு இயற்பியல் பற்றி சிறிதளவேனும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தைப் பொருத்தவரை இது அவரது சொந்த கருத்தாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. உதாரணமாக வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆரம்பம் பற்றிய அறிவு எந்த மனிதனுக்கும் அறவே இல்லாத காலம் அது”. என்று கூறுகின்றார்.
மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள வீடியோவைப் பாருங்கள்.
California Mount Wilson ஐச் சேர்ந்த அமெரிக்க வான சாஸ்திரியான Edwin Hubbleஎன்பவர் 1929ம் ஆண்டில் வானியல் வரலாற்றில் சிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தவர். அவரது கண்டுபிடிப்புகளில் ‘பிரபஞ்சத்தின் விரிவடைதல்’ மிக பிரபல்யமான ஒன்று.
இவர் மிகப் பெரிய தொலைநோக்கி மூலம் வானத்தை அவதானிக்கையில் நட்சத்திரங்களும், பால்வெளிகளும் நம்மிலிருந்து மட்டும் விலகிச் செல்லாமல் அவை தனக்குத் தானே ஒவ்வொன்றிலிருந்தும் விலகிச் செல்வதை அவதானித்தார்.
இதிலிருந்து அவர் பெற்ற முடிவு இப் பிரபஞ்சத்தின் அனைத்திலுமுள்ள அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்வதால் இப் பிரபஞ்சமானது தொடர்ந்து விரிவடைந்து கொண்டே செல்கின்றது.
இப் பிரபஞ்சம் விரிவடைதலைக் குறிப்பாக சொல்வதானால் ஒருவர் நேரத்தை நோக்கி பின்னோக்கியதாக நகர்ந்தால் அவர் இந்த பிரபஞ்சம் ஒற்றைப் புள்ளியில் (single point) உருவாக்கப்பட்டதை உணர்வார்.கணக்கெடுப்புகளின் படி இந்த ஒற்றைப் புள்ளியானது இப் பிரபஞ்சத்திலுள்ள அத்தனை அம்சங்களினதும் பூஜ்ஜியத் தொகுதியையும் (zero volume)> முடிவிலா அடர்த்தியையும் (infinite desity) உள்ளடக்கி உள்ளது.
இப் பிரபஞ்சம் ஆனது இப் பூஜ்ஜயத் தொகுதியின் ஒற்றைப் புள்ளியிலிருந்து வெடிப்புக்குள்ளாகி தோன்றியது. இப் பிரபஞ்சத்தின் ஆரம்பத்திற்கான இம் மாபெரும் வெடிப்பானது ‘Big Bang’ எனும் பெரு வெடிப்புக் கொள்கையாக விஞ்ஞானிகளால் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
விளக்க நோக்கங்களுக்காகவே இத் தத்துவார்த்த வெளிப்பாடானது பூஜ்ஜியத் தொகுதி என்று அழைக்கப்படுகின்றது. அதாவது விஞ்ஞானத்தில் இந் நிலை மனித அறிவுக்கு ஒன்றும் இல்லாத நிலை (Nothingness) என்பதற்காகவே பூஜ்ஜயத் தொகுதி என்று அழைக்கப்படுகின்றது.
‘Big Bang’ பெரு வெடிப்புக் கொள்கையின் படி பிரபஞ்சமானது ஒரு பொருளிலிருந்து வெடிப்புக்குள்ளாகி பல பொருட்கள் உருவாகின என்பதாகும். இக் கொள்கை 20ம் நூற்றாண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அல்குர்ஆன் இதை 1400 வருடங்களுக்கு முன்பே அறிவித்து விட்டது.  அல்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு இந்த சான்று ஒன்றே போதுமானது.
ஆக்கம் : பாத்திமா ஷஹானா.

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை