தடுமாற்றமா? இல்லை கொள்கை மாற்றமா?

தடுமாற்றமா? இல்லை கொள்கை மாற்றமா?


மார்க்க விஷயங்களைப் பற்றி ஆய்வு செய்யும் போது மனோஇச்சைகளுக்கு அப்பாற்பட்டு யார் மீதும் விருப்பு வெறுப்பின்றி , நடுநிலை சிந்னையுடன் ஆய்வுகள் அமைந்திருக்க வேண்டும். குர்ஆன், மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஆய்வுகள் அமைந்திருக்க வேண்டும். நாம் முன்னால் கூறியது தவறு என்று தெளிவாகும் போது அதை வெளிப்படையாகக் கூறுவதுதான் இறையச்சமுடையவர்களின் பண்பாகும்.

ஆனால் நாங்கள்தான் கொள்ளைவாதிகள் என்றும் குர்ஆன், ஹதீஸை பின்பற்றிவருபவர்கள் என்றும் கோஷமிட்டுக் கொண்டிருந்தவர்களின் கொள்கை தற்போது ஆட்டம் காணத்துவங்கிவிட்டது. ஒரு தனிநபரின் மீது கொண்டுள்ள வெறுப்பு, மார்க்க விஷயத்திலும் கூட இவர்களை தடுமாறச் செய்துள்ளது. இவர்களின் பேச்சுக்களும், எழுத்துகளும் இவற்றைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.


ஆரம்பகாலத்தில் மார்க்க விஷயங்களில் திருமறைக்குர்ஆன், நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளுக்கு மட்டும்தான் கட்டுப்படவேண்டும் என்று கூறிவந்தவர்கள் ஒரு தனிநபரின் மீது ஏற்பட்ட பொறாமையின் காரணமாக '' உலக, மார்க்க விஷயங்களில் அமீருக்குக் கட்டுப்பட வேண்டும் '' எனும் மார்க்கத்திற்கு புறம்பான புதுக்கொள்கையைப் புகுத்தினார்கள்.

குர்ஆனும், நபிவழியும் தான் மார்க்கத்தின் அடிப்படைகள் என்று கூறிவந்தவர்கள் ''குர்ஆனும் , நபிவழியும் அவர்களுடைய கருத்துக்கு தோதுவாக அமையாத காரணத்தினால் ''ஸஹாபாக்களுடைய கருத்துகளையும் மார்க்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என்று திருமறைக்குர்ஆனிலும் , நபிவழியிலும் இல்லாத ஈமானுக்கு மாற்றமான மூன்றாவது அடிப்படைக்குச் சென்றார்கள்.

ஆதாரப்பூர்வமான ஸஹீஹான நபிமொழிகளைத்தான் மார்க்கமாகக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் இருந்தவர்கள், ஒரு தனிநபரின் மீது கொண்டுள்ள பொறாமையின் காரணமாக இன்றைக்கு பலவீனமான செய்திகளையும் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றும் நிலைக்குச் சென்று விட்டனர்.

கொள்கையற்றவர்களையெல்லாம் தன்னுடைய உறவினர் என்பதற்காக தங்களுடைய மதரஸா நிகழ்ச்சிகளில் பங்கு பெறச்செய்து '' உமறுப்புலவர் கனவில் நபிகள் நாயகம் வந்தார்கள்'' என்று அவர் உளறியதையெல்லாம் ரசித்துக் கேட்ட கொள்கை வீரர்கள்தான் இவர்கள்.
குர்ஆன், ஹதீஸ் அனைவருக்கும் விளங்கும் என்று நாம் கூறிவருவதால் குர்ஆன், ஹதீஸ் யாருக்கும் விளங்காது, அறுபத்தி நான்கு கலைகளையும் படித்து, மதீனாவில் பட்டம் பெற்று, உலக அமீராக இருப்பவர் கூறினால்தான் விளங்க முடியும் என்று இவர்கள் கூறுவார்கள் என்று ஒருவர் கூறினாôல் அதை மறுக்கமுடியாது. ஏனென்றால் இவர்களின் தொடர் மனமாற்றம் இதை தெளிவுபடுத்துகிறது.
இது இவர்களிடம் ஏற்பட்ட தடுமாற்றமா? இல்லை கொள்கை மாற்றமா? என்றுதான் தெரியவில்லை.

ஆண்கள் தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் கட்டாயம் மறைக்க வேண்டிய பகுதிகள் யாவை? என்பதைப் பற்றிய ஆய்வுக்கட்டுரை ஏகத்துவ இதழில் வெளியிடப்பட்டிருந்தது.

இதற்கு மறுப்பு எழுதப் போகிறோம் என்று புறப்பட்ட சிலர் மறுப்பு என்ற பெயரில் தங்கள் அறியாமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆண்கள் தொப்புள் முதல் முட்டுக்கால் வரை கட்டாயம் மறைக்க வேண்டும் என்று அபூ ஹனீஃபா, ஷாஃபி உள்ளிட்ட பெரும்பாலான அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால் இன்னும் பல அறிஞர்கள் இதைவிட குறைந்த அளவிற்கு மறைத்துக் கொண்டால் போதுமானது என்று கூறியுள்ளனர். என்ற கருத்தைக் குறிப்பிட்டு முதல் சாரார் எடுத்து வைக்கக் கூடிய ஹதீஸ்கள் பலவீனமானவை, நபி (ஸல்) அவர்களுக்கு பல நேரங்களில் தொடை தெரிந்துள்ளது என்பதற்கு வலுவான பலசான்றுகளைக் காட்டி எனவே தொழுகையின் போது ஒருவர் தன்னுடைய தொடை தெரியும் வகையில் ஆடையணிந்து தொழுதால் அது குற்றமில்லை என்று தெளிவாக எழுதப்பட்டிருந்து.

இதற்கு மறுப்பு எழுதக் கூடியவர்கள் என்ன செய்ய வேண்டும்.? தொப்புளிலிருந்து முட்டுக்கால் வரை மறைப்பதற்கு சரியான ஆதாரத்தை எடுத்துக்காட்ட வேண்டும். அல்லது நாம் பலவீனம் என்று கூறியது இன்னின்ன காரணங்களால் தவறு எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் குராபிகளைப் போல் அன்றைக்கு இதை ஸஹீஹ் என்று கூறிவிட்டு இன்றைக்கு ''ளயீஃப்'' என்று கூறுகிறீர்களே ''அன்று இருந்த ஹதீஸ்கள்தான் இன்றும் இருக்கின்றன. ஹதீஸ்களில் எந்த மாற்றமும் இல்லை. அப்படியானால் 2005 ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் எப்படி உதயமானது?'' என்று உளறியுள்ளனர். சில ஆய்வாளர்கள் வயதான காலத்தில் ''தல்கீன்'' சொன்னதை அப்படியே சிந்திக்காமல் கூறுவார்கள். இந்த மறுப்பாளர் அந்நிலைக்கு வந்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வை எந்த அளவிற்கு விகாரமாக்கமுடியுமோ அந்த அளவிற்கு விகாரமாகக் கூறியுள்ளனர். தொடைப்பகுதி கட்டாயம் மறைக்க வேண்டிய உறுப்புகளில் அடங்காது என்று நாம் கூறிய பிறகும் அதற்கு தெளிவான சான்றைக்காட்டாமல் அதற்குத் தொடர்பில்லாத சில வசனங்களைக் கூறி '' இந்த வசனங்கள் மூலம் ஒரு மனிதன் தனது மானத்தை மறைப்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் மனிதர்கள் மானக்கேடானது என்று வெறுக்கக் கூடியவற்றை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்பதையும் புரியமுடிகிறது'' என்று கூறியுள்ளனர்.

''தொழுகையின் போது ஒரு அளவு , தொழுகைக்கு வெளியே ஒரு அளவு ஆடை அணியவேண்டும் என்று வேறுபடுத்துவதாக இருந்தால் அதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும். நபிகள் நாயகம் (,ஸல்) அவர்கள் மேற்கண்டவாறு (தொடை தெரியும் வகையில்) ஆடை அணிந்து விட்டு தொழுகைக்கு இது பொருந்தாது என்று கூறியிருந்தால் இக்கேள்வி நியாயமாக இருக்கும். அப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏதும் கூறவில்லை. அப்படி வித்தியாசப்படுத்தும் எந்த ஆதாரமும் கிடைக்காத போது இக்கேள்வி அர்த்தமற்றதாகிவிடுகிறது.'' என்று ஏகத்துவத்தில் குறிப்பிடப்பட்ட விஷயங்களுக்கு பதில் கூறமால்
''நபி (ஸல்) அவர்கள் அரைக்கால் சட்டை அணிந்து முக்கால் தொடையும் தெரிவது மாதிரி தொழுகையில் இமாமாக நின்று தொழுதார்கள் அல்லது தொழுகை நடத்தினார்கள் என்பதற்கு ஒரு சான்றையாவது கொண்டு வர முடியுமா?'' என்று கேட்டுள்ளனர். ஒரு விஷயத்தை கூடாது என்று மறுப்பவர்கள்தான் அதற்குரிய சான்றைக் காட்ட வேண்டும். இந்த அடிப்படையைக் கூட இவர்கள் மறந்து விட்டனர். மேலும் நபியவர்கள் செய்திருந்தால்தான் ஒரு காரியத்தைச் செய்யவேண்டும் என்று கூறுவது அறியாமையாகும்.. அவர்கள் அங்கீகரித்து இருந்தாலும் அதுவும் மார்க்கச் சட்டம்தான்.

நபி (ஸல்) அவர்கள் உடும்புக்கறி சாப்பிட்டதில்லை. ஆனால் அதற்கு அங்கீகாரம் தந்துள்ளார்கள். எனவே ஒருவர் உடும்புக்கறி சாப்பிடுவது கூடும் எனக்கூறும்போது நபியவர்கள் சாப்பிட்டதாக ஒரு சான்றையாவது காட்ட முடியுமா? என்று கேட்பது அறியாமையாகும். சுபுஹýத் தொழுத பிறகு அதனுடைய முன்சுன்னத்தை நபியவர்கள் தொழுததில்லை. ஆனால் அதற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள். எனவே முன்சுன்னத் தவறிவிட்டால் சுபுஹýக்குப் பின் அதைத் தொழலாம் என்று ஒருவர் கூறினால் நபியவர்கள் இவ்வாறு செய்ததாக ஒரு சான்றாவது காட்ட முடியுமா? என்று கேட்பதும் அறியாமையாகும். நபியவர்கள் செய்யாவிட்டாலும் எதற்கெல்லாம் அனுமதி கொடுத்துள்ளார்களோ அவையெல்லாம் மார்க்கம்தான். கூடாது என்று கூறுபவர்கள்தான் அதற்குரிய தடையைக் காட்டவேண்டும்.

இவர்களுக்காக சில மேலதிகமான சான்றுகளை நான் எடுத்துக் காட்டுகின்றேன்.

ஸஹாபாக்கள் ஒரு காரியத்தை செய்யும் போது , அல்லது நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் நபித்தோழர்கள் ஒரு காரியத்தைச் செய்து அதை நபியவர்கள் தடைசெய்ய வில்லையென்றால் அதை நபியவர்கள் அனுமதித்துள்ளார்கள் என்றுதான் பொருளாகும். இதை அவர்களும் ஒத்துக் கொண்டுள்ளார்கள். இதை விளங்காமல் முறையாக ஆய்வு செய்யாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற ரீதியில் மறுப்பு எழுதியுள்ளனர்.
நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி தொழுத ஸஹாபாக்களில் பெரும்பாலனவர்கள் அரைக்கால்வரை மறைக்கக் கூடிய அளவிற்குக் கூட அவர்களிடம் ஆடை இல்லை என்பதை நாம் ஹதீஸ்களை ஆய்வு செய்யும் போது விளங்கிக் கொள்ள முடியும்
665 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ لَقَدْ رَأَيْتُ الرِّجَالَ عَاقِدِي أُزُرِهِمْ فِي أَعْنَاقِهِمْ مِثْلَ الصِّبْيَانِ مِنْ ضِيقِ الْأُزُرِ خَلْفَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ قَائِلٌ يَا مَعْشَرَ النِّسَاءِ لَا تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَرْفَعَ الرِّجَالُ رواه مسلم

ஆண்கள் அணிந்த கீழாடை சிறியதாக இருந்தகாரணத்தால் ,சிறுவர்களைப்போல் அவர்கள் தம் கீழாடைகளை பிடரிகள் மீது கட்டிக் கொண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுது கொண்டு) இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆதலால் '' பெண்களே ஆண்கள் (ஸஜ்தாவிலிருந்து) நிமிரும் வரை நீங்கள் உங்களுடைய தலைகளை (சஜ்தாவிலிருந்து) உயர்த்த வேண்டாம் '' என்று (நபியவர்கள் பிறப்பித்த உத்தரவை) ஒருவர் கூறுவார்
அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் சஅத் (ரலி) நூல் : முஸ்லிம் (750)

25712 حَدَّثَنَا عَفَّانُ قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ قَالَ حَدَّثَنِي النُّعْمَانُ بْنُ رَاشِدٍ عَنِ ابْنِ أَخِي الزُّهْرِيِّ عَنْ مَوْلًى لِأَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ عَنْ أَسْمَاءَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا مَعْشَرَ النِّسَاءِ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا تَرْفَعْ رَأْسَهَا حَتَّى يَرْفَعَ الرِّجَالُ رُءُوسَهُمْ قَالَتْ وَذَلِكَ أَنَّ أُزُرَهُمْ كَانَتْ قَصِيرَةً مَخَافَةَ أَنْ تَنْكَشِفَ عَوْرَاتُهُمْ إِذَا سَجَدُوا رواه احمد
நபி (ஸல்) அவர்கள் : '' பெண்களே உங்களில் அல்லாஹ்வையும், மறுமைநாளையும் நம்பியவர் ஆண்கள் தங்கள் (தலைகளை) உயர்த்தும் வரை தன்னுடைய தலையை உயர்த்த வேண்டாம்'' என்று கூறினார்கள். ஆண்களுடைய கீழாடை சிறியதாக இருந்ததால் அவர்கள் ஸஜ்தா செய்யும் போது அவர்களின் மறைவிடங்கள் வெளிப்பட்டுவிடும் என்ற அச்சமே இதற்குக் காரணமாகும்
அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) நூல் : அஹ்மத் (25712)

அபூ ஹýரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : திண்ணைத் தோழர்களில் எழுபது நபர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களில் யாருக்குமே மேலாடை இருந்ததில்லை. அவர்களில் சிலரிடம் வேட்டி மட்டும் இருந்தது. (வேறு சிலரிடம்) தங்கள் கழுத்திலிருந்து கட்டிக் கொள்ளத் தக்க ஒரு போர்வை இருந்தது. (அவ்வாறு கட்டிக் கொள்ளும் போது) சிலரது போர்வை கரண்டைக்கால்வரையும் இருக்கும். வேறு சிலரது போர்வை கால்களில் பாதியளவு வரை இருக்கும். தமது மறைவிடங்களை பிறர் பார்த்து விடலாகாது என்பதற்காக தம்கைகளால் துணியைச் சேர்த்து பிடித்துக் கொள்வார்கள் நூல் : புகாரி (442)

மேற்கண்ட ஹதீஸ்கள் நபித்தோழர்களில் பலர் தொழுகைகளில் தம்முடைய அரைக்கால் வரை கூட மறைக்காத கீழாடைகளை அணிந்து தொழுதுள்ளனர் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட ஆடைகளை அவர்கள் அணிந்து தொழும் போது தொடையின் சிலபகுதிகள் வெளியில் தெரியத்தான் செய்யும். ஆனால் நபியவர்கள் இதனை தடைசெய்ததாக நாம் எந்தச் சான்றையும் காணவில்லை.
நபித்தோழர்கள் நிர்பந்தத்தின் காரணமாகத்தான் இவ்வாறு செய்தார்கள் என்று கூறி இதை மழுப்பி விட முடியாது. மேலாடை இல்லாத நேரத்தில் ஒருவர் மேலாடை இல்லாமல் தொழலாம். இது நிர்பந்தமாகும். ஆகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் மேலாடை இருக்கும்போது அது இல்லாமல் தொழுவதற்கு தடைசெய்துள்ளனர்.

ஆனால் தொடையை கட்டாயம் மறைக்க வேண்டும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. எனவே ஆதாரம் இல்லாத பட்சத்தில் நிர்பந்தம் என்று கூறுவது தவறாகும். ஏனென்றால் ஒரு நபித்தோழர் ''ஒரு ஆடையில் தொழுவது கூடுமா? '' என்று நபியவர்களிடம் வினவுகிறார். ஒரு ஆடை அணிந்து தொழும்போது உடலின் பலபகுதிகள் வெளியில் தெரியும். எனவே அந்நபித்தோழர் இவ்வாறு வினவுகிறார். ஆனால் நபியவர்கள் அவருடைய கேள்விக்கு பதில் கூறாமல் '' உங்களில் ஒவ்வொருவருக்கும் இரண்டு ஆடைகளா இருக்கிறது?'' என்று அவர் அவ்வாறு கேட்டதையே வெறுக்கும் படி பதில் கூறுகிறார்கள். நபியவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி கேட்பதையே வெறுக்கிறார்கள் என்றால் அதில் நமக்கு பலநன்மைகள் உள்ளது என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும். எனவே நபித்தோழர்கள் அரைகுறை ஆடையுடன் தொழுததை நிர்பந்தம் என்றும் கூறமுடியாது. நபியவர்கள் அரை நிர்வாணமாகச் தொழச்சொன்னார்கள் என்று விகாரமாக்குவதும் கூடாது. அவர்கள் ஒன்றிற்கு அனுமதியளிக்கும்போது அதை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடியவன்தான் உண்மையான முஃமின் ஆவான்.

அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 24 : 51)

எனவே நபி மொழிகளின் அடிப்படையில் ஒரு கருத்தைக் கூறும்போது அதைக் விகாரப்படுத்தி கேலிசெய்தல் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கேலிசெய்வது போன்றதாகும். இதைத்தான் இன்றைக்கு உலக அமீர்களும். அவர்களின் புதுக் கூட்டாளிகளும் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களின் தகிடுதத்தங்களை இவர்களை நம்புகின்ற ஒரு சில கொள்கைவாதிகளும் விரைவில் விளங்கிக் கொள்வார்கள்.
தாங்கள் எதற்குப் பழக்கப்பட்டுவிட்டார்களோ அதற்கு மாற்றமாக இறைத்தூதர்கள் கொண்டு வந்ததற்காகத்தான் அன்றைய மக்கள் இறைத்தூதர்களை எதிர்த்தனர். என்பதையும். மனோஇச்சையை மார்க்கமாக்கிக் கொண்டவன் வெற்றி பெறமுடியாது என்பதையும் இவர்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.

நபித்தோழர்களின் கீழாடை மிகச் சிறியதாக இருந்ததால் சில நேரங்களில் அவசியம் மறைக்க வேண்டிய பகுதிகள் கூட தொழுகையில் வெளிப்பட்டுள்ளது.

அம்ர் பின் சலிமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் ஸஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டி வந்தது. ஆகவே அந்தப் பகுதி பெண்மணியொருவர் '' உங்கள் ஒதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா? '' என்று கேட்டார் நூல் : புகாரி (4302)
பின் புறம் தெரியும் வகையில்தான் அவர்களுடைய ஆடை இருந்துள்ளது. நிச்சயமாக அதனுடைய நீளம் முட்டுக்கால்வரை கூட இருந்திருக்க முடியாது. இப்படிப்பட்ட ஆடையணிந்து தொழும்போது நிச்சயம் தொடையின் சில பகுதிகள் வெளிப்படத்தான் செய்யும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

நபியவர்கள் தொடை திறந்த நிலையில் இருந்துள்ளார்கள் என்பதையும், நபியவர்களின் காலத்தில் அதிகமான நபித்தோழர்கள் தொடைப்பகுதிகள் தெரியும் அளவிற்கு ஆடை அணிந்து தொழுகையில் கலந்துள்ளார்கள் என்ற சான்றுகளின் அடிப்படையிலும் ஆண்களின் தொடைப்பகுதி கட்டாயம் மறைக்கப்படவேண்டிய உறுப்புகளில் உள்ளதல்ல என்றே நாம் கூறுகிறோம். எனவே ஒரு தன்னுடைய தொடை தெரியும் வகையில் தொழுதால் அதனைக் குறைகூற முடியாதென்றும் நாம் கூறுகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடைதிறந்திருந்ததாக வரக்கூடிய செய்திகள் தொழுகையைக் குறிக்க வில்லை என இவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் தொடையை மறைக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் வலுவான ஆதாரமாகக் காட்டக்கூடிய அந்தப் பலவீனமான ஹதீஸ்களிலும் கூட நபி (ஸல்) தொழுகையில் மறைக்க வேண்டும் என்று கூறியதாக வரவில்லை. இதை வசதியாக மறைத்து விட்டனர். பலவீனமான ஹதீஸ்கள் என்று தெளிவாகத் தெரிந்தபின்பும் அதனை ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ளார்கள் என்றால் இவர்கள் தங்களின் பொய்யான வாதங்களை நிலைநாட்ட எப்படிப்பட்ட நிலைக்கும் செல்வார்கள் என்பதைத்தான் நாம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

அவர்கள் காட்டும் பலவீனமான ஹதீஸ்களின் அடிப்படையில் ஒருவன் தொப்புளிலிருந்து முட்டுக்கால்கள் வரை மறைத்தவனாக மட்டும் தொழுதால் அது அரைநிர்வாணம் இல்லையா? இவ்வாறு யாராவது மக்கள் மத்தியில் நடமாடுவார்களா? இவ்வாறு மற்ற மனிதர்களின் முன்னே நிற்பதையே மானக்கேடானதாகக் கருதும்போது படைத்த அல்லாஹ்வின் முன் இப்படி நிற்பதை அல்லாஹ் விரும்புவானா என்பதை ஒவ்வொரு அறிவுடையவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி முக்கால் நிர்வாணமாக பள்ளிவாசலுக்குள் செல்வது அலங்காரமாகும? அலங்கோலமாகுமா? இப்படி ஆடை அணிந்து தொழுவது அல்லாஹ்வை அவமரியாதை செய்வதாக , அவனைக் கேவலப்படுத்துவதாக அவனுடைய கட்டளைக்கு மாறுசெய்வதாக ஆகாதா? என்றெல்லாம் நாமும் உங்களைப்போல் அந்த வசனங்களைக் காட்டி நீங்கள் கொடுத்த அந்த ஆதாரமில்லாத ஃபத்வாவிற்கு பலகேள்விகளைக் கேட்க முடியும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே தங்களுடைய தொடையை வெளிப்படுத்தியிருக்கும்போது நிச்சயமாக அது கண்டிப்பாக மறைக்கவேண்டிய பகுதி இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இது தொழுகைக்கு பொருந்தாது என்று கூறும் ஆய்வாளர்கள்(,?) தான் அதற்குரிய சான்றைக்காட்ட வேண்டும். அவர்களால் அப்படி காட்ட முடியாத பட்சத்தில் அவர்கள்தான் பொய்யர்கள் என்பதை அவரைத் உலக அமீராக(?) ஏற்றுக் கொண்டுள்ளவர்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.

மொத்தத்தில் ஏகத்துவத்தில் வெளியிடப்பட்ட முறையான ஆய்வுக்கட்டுரைக்கு அறியாமை விளக்கத்தைக் கொடுத்தவர்கள் பின்வரக்கூடிய கேள்விகளுக்கு பதில் கூறக் கடமைப்பட்டுள்ளனர். இதில் ஒன்றிற்கு கூட அவர்கள் பதிலளிக்க முடியவில்லை என்றால் அவர்களுடைய ஆய்வில் குறை உள்ளது என்றுதான் பொருளாகும்.

1. ஒருவர் முதலில் ஒரு செய்தியைக் கூறுகிறார். பின்னர் அது அவருக்கு பலவீனம் எனத் தெரிகிறது. எனவே அவர் அதை வெளிப்படையாக மக்களிடம் கூறுகிறார். இது சரியான நடைமுறையா? இறையச்சத்திற்கு நெருக்கமானதா? இல்லை தவறான நடைமுறையா? என்பதைத் இவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்

2. ஒருவர் தான் முதலில் கூறிய ஹதீஸ் பலவீனமானது என்பதை ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தும் போது அவர் மூளை குழம்பி விட்டாரா? அல்லது எவ்வித சான்றும் காட்டாமல் அவருடைய ஆய்வை மறுப்பவர்கள் மூளை குழம்பியவர்களா?

3. ஒரு ஹதீஸ் பலவீனமானது என்று ஆதாரங்களுடன் நிரூபித்த பிறகும் எவ்வித சான்றும் காட்டாமல் அதே பலவீனமான செய்தியை ஆதாரமாகக் காட்டியுள்ளீர்கள். என்வே பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளலாம் என்ற கொள்கைக்கு எப்போது மாறினீôக்ள்? ஏன் இந்த நிலைப்பாட்டிற்கு வந்தீர்கள்?

4. தொப்புளிலிருந்து முட்டுக்கால்வரை கட்டாயம் மறைக்க வேண்டும் என்று பலவீனமான ஹதீஸ்களிலிருந்து நீங்கள் ஆதாரம் எடுத்துள்ளீர்கள். அதில் தொழுகையிலும் மறைக்கவேண்டும் என்று வந்துள்ளதா?

5. ஒருவன் தன்னுடைய தொடை தெரியும் வண்ணம் தொழுவது அரை நிர்வாணம் என்றால் நீங்கள் ஏற்றுக் கொண்ட முறைப்படி தொப்புளிலிருந்து மூட்டுக்கால்வரை மறைத்து தொழுவது அரைநிர்வாணம் இல்லையா? ஏனென்றால் இரண்டிற்கும் ஒரு ஜான்தான் வித்தியாசம்

6. ஒருவன் தன்னுடைய தொடை தெரியும் வண்ணம் தொழுவதால் அதை குறைகூறமுடியாது என்று கூறுவது அனைவரும் அரைக்கால் டவுசருடன் தொழகைக்கு வாருங்கள் என்று அழைப்பதா? அப்படியென்றால் நீங்கள் ''தொப்புளிலிருந்து முட்டுக்கால்கள் வரை மறைக்க வேண்டும் '' என்று கூறுவதற்கும் இவ்வாறு கூறலாமா?

7. நபியவர்கள் தொழுகையல்லாத நிலைகளில் தொடைதெரியும் வண்ணம் ஆடையணிந்துள்ளனர். இது தொழுகைக்குப் பொருந்தாது என்று கூறக்கூடிய நீங்கள் அவ்வாறு தடைசெய்ததற்கு நேரடிச் சான்றைக்காட்டமுடியுமா?

8. நபியவர்கள் செய்ததாக நேரடிச் சான்று இருந்தால் தான் ஒரு காரியம் மார்க்கச் சட்டமாகுமா? அல்லது நபித்தோழர்கள் செய்ததை நபியவர்கள் அங்கீகரித்திருந்தால் அதை மார்க்கச் சட்டமாக எடுத்துக் கொள்ளக் கூடாதா? கூடும் என்றால் ''நபியவர்கள் செய்ததாக நேரடிச் சான்றைக் காட்டமுடியுமா?'' என்று கேட்டதின் மர்மம் என்ன?

கே.எம். அப்துன் நாசர் , கடையநல்லூர்.

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை