பெண்கள் பேண வேண்டிய நாணம்!


பெண்கள் பேண வேண்டிய நாணம்!

islamic_womenமனித வாழ்வில் ஒழுக்கம் உயிரை விட உயர்வாக மதிக்கத் தக்கதாகும்  ஒழுக்க நெறி இல்லையேல் மனிதனுக்கும் மிருகத்திற்குமிடையில் வேறுபாடு இல்லாமல் போய் விடும். மற்ற படைப்புகளிடமில்லாத சிறப்பம்சம் ஒன்று மனிதனிடம் உண்டென்றால் அது ஒழுக்க நெறியுடன் கூடிய வாழ்வேயாகும்.
இறைவனின் படைப்பான ஆண், பெண் இரு பாலரிடத்திலும் பல விதமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் வெட்கத்தையும் நாணத்தையும் அல்லாஹ் பெண்களிடத்தில் அதிகம் வழங்கியுள்ளான். ஆனால் இன்று நாகரீகம் என்ற பெயரில் வெட்கம், நாணம் அனைத்தையும் மறந்து அநாகரீகமான செயல்களில் பெண்கள் ஈடுபடத் துவங்கி விட்டனர்.
மேலை நாடுகளில் விடை பெற்று விட்ட இந்த வெட்க உணர்வு தற்போது கீழை நாடுகளிலும் விடைபெறத் துவங்கி விட்டது. அதன் அதிவேக வளர்ச்சி இஸ்லாமியப் பெண்களையும் தொட்டுவிட்டது. அரைகுறை ஆடை அணிவது அந்நிய ஆண்களோடு ஊர் சுற்றுவது கவர்ச்சிகரமான அலங்காரங்களை செய்து கொண்டு வீதிகளில் உலா வருவது என்று பல அநாகரீகச் செயல்கள் இஸ்லாமிய பெண்களிடம் ஒட்டிக் கொண்டு விட்டது.
வெட்கம் ஈமானில் உள்ளதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஈமான் உள்ளவரிடம் வெட்கம் இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் வெட்கம் கொஞ்சம் கூட இல்லாமல் வெட்கம் கெட்ட செயலில் மூழ்கியிருக்கிறார்கள் இன்றைய இஸ்லாமியப் பெண்களும். அரை குறை ஆடைகள் அணியும் பெண்களுக்கும் உள்ளாடைகளின் நிறம் தெரியுமளவிற்குச் சேலைகள் அணியும் பெண்களுக்கும் வெட்கம் என்பது இல்லையா? அல்லது ஈமானே உள்ளத்தை விட்டு வெளியேறி விட்டதா?
கணவனுக்கு மட்டும் காட்ட வேண்டிய அலங்காரத்தை உலகமறியக் காட்டுவது தான் நாகரீகமா? நங்கையர்களின் நாட்டம் தான் என்ன?
“கன்னிப் பெண்ணும் விதவைப் பெண்ணும் அனுமதி பெறப்படாமல் திருமணம் முடிக்கப்பட மாட்டாள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, “கன்னிப் பெண்ணின் அனுமதி எப்படி? (அவள் வெட்கப் படுவாளே)” என்று நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவள் மவுனமாக இருப்பதே அனுமதி” என்று கூறினார்கள் அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 5136
அனுமதிக்கப்பட்ட ஒன்றிற்குக் கூட ஆம்’ என்று பதில் சொல்ல வெட்கப்பட்ட தீன்குலப் பெண்களின் நாணம் எங்கே? இந்தப் பெண்கள் எங்கே?
நல்ல ஆண்களைக் கூட கெடுக்கும் வண்ணம் அரைகுறை ஆடைகளை அணிந்து கொண்டும் நறுமணப் பொருட்களை பூசிக் கொண்டும் செல்வதால் கெட்டுப் போவது பெண் மட்டுமா? நல்ல ஆண்களும் கூடத் தானே?  வெட்கமில்லாமல் அந்தரங்கப் பகுதிகளை வெளிப்படுத்தும் இப்பெண்கள் அண்ணலாரின் பொன் மொழிக்குச் செவி சாய்ப்பார்களா?
நறுமணம் பூசி, தன் கணவனை மயக்கச் செய்யவே ஒரு பெண்ணுக்கு அனுமதியுண்டு.
அதை விடுத்து தெருத் தெருவாக வீட்டில் உள்ளவர்களை வெளியில் வரவழைக்கும் வண்ணம் நறுமணம் பூசிச் செல்வது விபச்சாரியின் செயலுக்குச் சமமில்லையா? ஊரிலுள்ளவர்கள் எல்லாம் நம்மைப் பார்க்கின்றார்கள் என்ற வெட்க உணர்வும் இல்லையா?
“எப்பெண்மணி நறுமணத்தை பூசிக் கொள்கிறாளோ அப்பெண் நம்மோடு இஷா தொழுகையில் கலந்து கொள்ள வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 760
கடமையான தொழுகையில் கூட நறுமணம் பூசிக் கொண்டு பெண்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதற்குக் காரணம், அதனால் மற்ற ஆண்களின் பார்வை அங்கு செல்லும் என்பதை விட வேறு என்னவாக இருக்கும்? வயதுக் கோளாறின் காரணமாக சில ஆண்களின் கவர்ச்சிப் பேச்சிற்கு அடிமைப்பட்டு, தனிமையில் சந்திப்பது, பின்னர் அவனால் ஏமாற்றப்பட்டு தற்கொலை அல்லது தினமும் வேதனை என்ற நிலைக்குப் போகக் காரணம் என்ன? வெட்கமில்லாமல் அந்நியரோடு ஊர் சுற்றியது தானே!
“எந்தவொரு ஆணும் (அந்நியப்) பெண்ணோடு தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (நூல்: அஹ்மத் 109)
“ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் ஓடுகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஸஃபிய்யா (ரலி), நூல்: புகாரி 3281
எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் ஷைத்தான் தன் வேலையைக் காட்டுகிறான். இதை நிதர்சனமாக நாம் பார்த்து கொண்டு தான் இருக்கிறோம் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.
(அல்குர்ஆன் 24:31)
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.
உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும்,  நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.
முஸ்லிமான ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், பொறுமையை மேற்கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாக நடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண் களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும், பெண்களும் ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.
(அல்குர்ஆன் 33:32-35)
தீன்குலப் பெண்களாக நாம் வாழ வேண்டுமானால் நபி (ஸல்) அவர்களின் மனைவியரைப் போன்று கண்ணியம் மிக்க ஆடைகளை அணிந்த பெண்களாகவும் அவசியமில்லாமல் ஊர் சுற்றுவதைத் தவிர்த்து, தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடிப்பவர்களாகவும், ஜகாத் கொடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அல்லாஹ்வும் அவனது தூதரும் கட்டளையிட்டபடி நடக்க வேண்டும். “தீர்ப்பு நாளில் முஃமினின் தராசில் நன்னடத்தையை விடக் கனமானது எதுவும் இருக்காது” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹ்மத் (26245), அபூதாவூத் (4166)
நன்மையும் தீமையும் நிறுக்கப்படும் போது நன்மையின் தட்டைத் தாழ்த்தும் பணியில் ஒழுக்கவியலின் பங்கு ஒப்பிட முடியாதது என்பதை இந்நபிமொழி உணர்த்துகின்றது.  “மனிதர்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைவிக்கக் கூடியது எது? என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது, “இறையச்சமும் நன்னடத்தையுமே” என பதிலளித்தார்கள். “நரகில் மனிதர்களை எது அதிகம் நுழைவிக்கும்?” என கேட்கப்பட்ட போது, “வாயும் பாலுறுப்பும்” என பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: அஹ்மத் (7566), திர்மிதீ (1927), இப்னு மாஜா (4236)
நம் அனைவரையும் குர்ஆன், ஹதீஸ் ஒளியில் நடக்கும்
நல்லொழுக்கமுள்ள பெண்களாக அல்லாஹ் ஆக்கி அருள்வானாக!
-ஃபைரோஸ் பானு

Comments

Popular posts from this blog

இணைவைப்பாளர்கள் அறுத்தபிராணிகளைச் சாப்பிடலாமா? - புதிய ஆய்வு முடிவுகள்!

இறுதி நபியின் இறுதி பேருரை

பகுத்தறிவாளர்களின் பகுத்தறிவின்மை